19 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டி யூனியனில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 11 வார்டுகளையும், அ.தி.மு.க. 8 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. தி.மு.க.வின் முத்துமாரிக்கு யூனியன் சேர்மனாகும் வாய்ப்பு இருந்த நேரத்தில், தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. வடக்கு மா.செ.வும், அமைச்சருமான கடம்பூர் ராஜு, சேர்மன் பதவியைக் கைப்பற்றுவதை கவுரவப்பிரச்சனையாகக் கருதி தனது பவரைக் காட்டினார். அதன் எதிரொலியாக தேர்தல் அதிகாரி திடீரென நெஞ்சு வலி எனக்கூறிவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதன்காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அமைச்சரின் கண் அசைவுப்படி அறிவிக்கப்பட்டது.
வேறு தேர்தல் அதிகாரியை நியமித்து சேர்மன் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யும், தி.மு.க.வின் வடக்கு மா.செ. கீதாஜீவனும் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே அமைச்சர் கடம்பூர் ராஜு, கனகச்சிதமாக உள்ளடி வேலைகளைச் செய்து அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை ஆதரவைத் திரட்டியபின்னர் மீண்டும் நடத்தப்பட்ட சேர்மன் தேர்தலில், அ.தி.மு.க.வின் கஸ்தூரி சுப்புராஜ் சேர்மனாகத் தேர்வானார்.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அந்த உள்ளடி வரலாறு, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் தற்போது தி.மு.க.வுக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது. கடந்த மே 12-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவியான அ.தி.முக.வைச் சேர்ந்த சத்யாவின் பதவியை அ.தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி யிழக்கச் செய்து பழைய நிகழ்வுகளுக்குப் பதிலடியாக சமன் செய்திருக்கிறது மாவட்ட தி.மு.க.
கடந்த 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான 17 வார்டுகளில், அ.தி.மு.க. 12 இடங்களிலும், தி.மு.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. மெஜாரிட்டி அ.தி.மு.க. வசமானதால், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சத்யா மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராகவும், துணைத் தலைவராக அக்கட்சியைச் சேர்ந்த செல்வகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப்பின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வின் மா.செ. சண்முக நாதனின் சொந்தத் தொகுதியான ஸ்ரீவைகுண் டம் யூனியனையும், அதன் சேர்மன் பொறுப்பையும் அ.தி.மு.க.விடமிருந்து தங்கள் வசம் கொண்டு வர, அ.தி.முக. உறுப்பினர்களை வளைப்பதற்கு தி.மு.க. மா.செ. தரப்பு முயற்சித்தது. அதிர்ச்சியான அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதன், ஸ்ரீவைகுண்டத் தைத் தக்கவைக்க, தி.மு.க.வினருடன் நிழல் ஒப்பந் தத்தை ஏற்படுத் திக் கொண்டார். அதன்படி, ஸ்ரீவைகுண்டத் துக்குப் பதிலாக, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அ.தி.மு.க.வின் உறுப்பினர்களை தி.மு.க. பக்கம் தள்ளுவதாக ஒப்புக்கொள்ள, அதன்படி, அ.தி.மு.க.வின் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட நான்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்தார்கள். மாவட்ட பஞ்சாயத்தில் தி.மு.க. பலம் 5-லிருந்து 9 ஆக உயர்ந்தது.
அதன்பின், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளித்தனர். இதையெதிர்த்து மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி சத்யா நீதிமன்றத்தை நாட, கலெக்டரின் நேரடி மேற்பார்வையில் வீடியோ பதிவுசெய்து நம்பிக்கையில்லாத் தீர்மானக் கூட்டத்தை நடத்தலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற 4ல் மூன்று பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டுமென்பதால், மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு தேவைப்பட, அ.தி.மு.க.வின் 8 உறுப்பினர் களில் 5 உறுப்பினர்களைத் தங்கள் பக்கத்துக்கு வளைத்தனர்.
மே 12-ல் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு, துணைத் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட 9 தி.மு.க. உறுப்பினர்கள், அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஆதரவு தெரிவித்த 5 உறுப்பினர்கள் என 14 உறுப்பினர்களையும் பாதுகாப்பாகக் கூட்டத்துக்கு அழைத்துவந்தார் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா. விஷயம் கைமீறியதால், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பிரியா, பேச்சியம்மாள் உள்ளிட்ட மூன்று பேர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளாத சூழலில் 14 பேர் ஆதரவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதாகவும், பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக இருப்பதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்தார்.
இதுகுறித்து, தூத்துக்குடி அ.தி.மு.க. தெற்கு மா.செ.வான சண்முகநாதனிடம் கேட்டபோது,
"அ.தி.மு.க. தலைமை சீட் கொடுக்கிறது. செலவுக்கு பணமும் கொடுக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்கவும் வைக்கிறது. ஜெயித்த பின்பு தலைவர், துணை தலைவர் தேர்தல்ன்னு வரும்போது பலாபலன் கருதிப் போய்விடு கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்வது? நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம். போகிறவர்களைத் தக்கவைத்துக்கொள்கிற சக்தியும் எங்களிடம் இல்லையே. ஆளும் கட்சி அப்படித்தானிருக்கும்" என்கிறார் கம்மிய குரலில். அதிகாரம் மாறும்போது அரசியல் காட்சிகளும் மாறித்தானே ஆக வேண்டும்! அரசியல் தொட்டு அனைத்து வகைகளுக்கும் இதுதானே அரிச்சுவடி!