(86) அவள் ஒரு சிறுகதை!
"ஃபடாபட்' என ஜெயலட்சுமியைப் போல சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை ஃபடாபட் ஜெயலட்சுமியின் தற்கொலையை!
ஃபடாபட் ஜெயலட்சுமி இயல்பிலேயே ரொம்ப ஜாலியான பொண்ணு.
1958-ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த ஜெயலட்சுமி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர். மலையாளத் திரைப்படத்துறையில் தனது 14 வயதில் சுப்ரியா என்ற பெயரில் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்த ஜெயலட்சுமியை, 1974-ஆம் ஆண்டு "அவள் ஒரு தொடர்கதை'’படத்தில் ‘ஜெயலட்சுமி’ என பெயர் மாற்றி அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர் சார்.
எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்ளும் மனோபாவத்துடன் "ஃபடாபட்'’என சொல்வதுடன் ஒரு அலட்சிய உடல்மொழி யுடன் நவீன இளம்மங்கையாக நடித்தவர்... ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த கள்ளி ஆகி, "ஃபடாபட்'’என்றே அழைக்கப்பட்டார். .
ஜெயலட்சுமியின் உறவினர்கள் சிலர், சினிமாவில் சில துறைகளில் பணியாற்றிய போதும், ஜெயலட்சுமிக்கு சினிமாவில் இஷ்டமில்லை. அவர் நடிக்க வந்தது ஒரு விபத்து போலத்தான். ஆனாலும் ஏற்றுக்கொண்ட கொண்ட கேரக்டருக்கு நேர்மையாக அதை சிறப்புடன் வெளிப் படுத்தினார்.
1974-ஆம் ஆண்டு "அவள் ஒரு தொடர்கதை'யில் தொடங்கி, "அன்னக்கிளி', "அவர் எனக்கே சொந்தம்', "கவிக்குயில்', "வருவான் வடிவேலன்', "முள்ளும் மலரும்', "குங்குமம் கதை சொல்கிறது', "ஆறிலிருந்து அறுபது வரை', "காளி' ஆகிய படங்களில் நடித்தார் ஜெயலட்சுமி.
ஜெயலலிதாவின் கடைசிப் படமான ‘"நதியைத் தேடி வந்த கடல்'’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித் திருந்தார் ஜெயலட் சுமி. அவரின் நடிப்பை மிகவும் பாராட்டினார் ஜெயலலிதா. இதை ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்லியிருந்தார் ஜெயலட்சுமி.
யதார்த்தமான நடிப்பால் எல் லோரையும் கவர்ந்த ஜெயலட்சுமி தனது 22 வயதில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
"ஃபடாபட்' என எளிதில் கடந்துவிட முடியவில்லை ஜெய லட்சுமியின் மரணத்தை.
"அவள் ஒரு தொடர்கதை'யாக தொடர்ந்திருக்க வேண்டிய ஜெயலட்சுமியின் வாழ்க்கை, ‘"அவள் ஒரு சிறுகதை'யாக முடிந்து போனது.
"கோழி கூவுது'’விஜியின் வாழ்க்கையும் தான் இப்படி சோகத்தில் முடிந்தது.
கங்கைஅமரனால் "கோழி கூவுது' என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டு, "கோழி கூவுது' விஜி’ என அழைக்கப்பட்டார்.
1996-இல் இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பெற்று, நீண்டகால அவஸ்தைக்குப் பின் குணமடைந்து, மீண்டும் படங்களில் நடித்தார். 2000-இல் மீண்டும் "சிம்மாசனம்' படம் மூலம் நடிக்க வந்தாலும், நோய்த்தொற்று காரணமாக அவரால் தொடர்ந்து இயல்பாக இருக்க இயலவில்லை.
1982-ல் ’"கோழி கூவுது'’படத்தில் தொடங்கி, 2000-ஆம் ஆண்டு ‘"சிம்மாசனம்'’ படம் வரை நடித்த விஜிக்கு "சிம்மாசனம்'’படமே கடைசிப் படமாக ஆனது.
தனது 34-வது வயதில் 2000 நவம்பர் 27 அன்று சென்னை மகாலிங்கபுரத்தில் இருந்த தனது வீட்டிலே, மின் விசிறியில் தூக்கிட்டு, விஜி தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டி, விஜிக்கு சொந்த வீடு ஒன்று இருந்தது. விஜி மரணத்தால் துயரமுற்ற அவரின் தந்தை, ஒரு சாமியாரைப் போல திருவண்ணாமலை வீட்டில்தான் வசித்து வந்தார். ஒருநாள் அவரும் இறந்துபோனார்.
"கோழி கூவி விடியவா போகுது'’ என்பார்கள் கிராமத்தில். (சேவல் கூவித்தான் விடியுமாம்)
விதியின் முன் கோழி கூவி விஜியின் வாழ்க்கை விடியாமலேயே போனது வேதனைதான்.
நடிகைகளோட தற்கொலைங்கிறது பொதுவாகவே மனசை ரொம்ப வேதனைப் படுத்த வைக்கும். ஏன்னா... நடிகைகள்தான் மனசுக்கு நெருக்கமானவங்களா இருப்பாங்க ரசிகர்களுக்கு.
சோகத்தை பகிர்ந்துக்கிட்டா மனச்சுமை பாதியா குறையும், மன உளைச்சல் வராது. ஆனா... நடிகைகள் தங்களோட மனவலியை மத்தவங்ககிட்ட சொல்லமாட்டாங்க. அப்படிச் சொன்னா... ‘ஆறுதல் சொல்றேன்ங்கிற பேர்ல, ‘நடிகைதானேன்னு இளக்காரமா நினைச்சு, நடிகைகளை பயன்படுத்திக்கத்தான் பார்ப்பாங்க. அதனாலதான் நடிகைகள் தங்களோட மனவலியை வெளியில சொல்றதில்லை.
எனக்கு நல்ல பழக்கமான நடிகைகளுக்கு இந்த மாதிரி வேதனைகள் நடந்திருக்கு. அதனாலதான் நான் எப்பவுமே "உடல் நல்லா இருந்தா பத்தாது, மனசும் நல்லா இருக்கணும். தியானம் பண்ணு, தியானம்னதும் ரொம்ப கஷ்டம்னு நினைக்காத. நேரம் கிடைக்கிறப்போ ஒரு பத்து நிமிஷம் கண்ண மூடி அமைதியா உட்காரு. அதுதான் தியானம். அதுதான் மனசை ஈஸியாக்கும்'னு சொல்லிக்கிட்டே இருப்பேன்.
தற்கொலை எண்ணம்கிறது க்ஷண நேர முடிவுதான். அந்த நேரத்தை கடந்துட்டா தப்பிச்சிக்கலாம்.
வடிவேலுவோட மேனேஜர் தற்கொலை செஞ்சுக் கிட்டப்போ, வடிவேலு ரொம்ப மனசு உடைஞ்சு, அழுதுக்கிட்டிருந்தாப்ல.
"அழாத வடிவேலு''ன்னு ஆறுதல் சொல்லீட்டு, சில விஷயங்களைச் சொன்னேன். “ஏதோ மன உளைச்சல்ல ராத்திரி பூரா தூங்காம இருப்பாங்க. அதிகாலை மூன்றரை மணியிலருந்து, அஞ்சு மணிக்குள்ளதான் எல்லாரும் அசந்து தூங்குற நேரம். தற்கொலை செஞ்சுக்க நினைக்கிறவங்க பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறது அந்த நேரத்தைத்தான். அதானால் அவங்க ஸ்ட்ராங்கா எடுத்த முடிவ தடுக்க முடியாமத்தான் போகும். இப்ப நீ அழுதுக்கிட்டிருக்கிறதுல பிரயோஜனமில்ல. முதல்ல உன் சொத்துபத்து டாக்குமெண்ட்ஸெல்லாம் சரியா இருக்கானு பாரு''’எனச் சொன்னேன்.
வடிவேலு வக்கீல் மூலம் பத்திரங்களை ஆராய்ந்தபோதுதான், ஒவ்வொரு சொத்து பத்திரத்திலயும், ’இந்த சொத்தை விற்கும் உரிமையை வடிவேலு கொடுப்பதுபோல என்.ஓ.சி. சான்றிதழ் இணைச்சிருப்பது தெரிஞ்சது. அம்புட்டு அப்புராணியா இருந்தாப்ல வடிவேலு.
அந்தச் சமயம் அருவி மாதிரி வடிவேலு வீட்ல பணம் கொட்டிக்கிட்டிருந்த சமயம். எதுல எவ்வளவு முதலீடுன்னு நின்னு நிதானிச்சு கவனிக்கக்கூட வடிவேலுவுக்கு நேரமில்ல.
இந்த சமயத்துலதான் வடிவேலுவுக்கு, அவரோட நண்பரும் நடிகருமான சிங்கமுத்து மேல சந்தேகம் வந்தது.
கொஞ்சநஞ்சமல்ல... 16 கோடி ரூபாய்க்கான வடிவேலு சொத்துக்கள் காணாமப் போயிருந்தது.
(பறவை விரிக்கும் சிறகை))