dd

(51) கோர்ட் ஸீனில் பேன்ட்டை காணோம்!

விஜயகாந்த் -ராதிகா -பேபி ஷாலினி நடிப்பில் "சிறைப்பறவை'’படப்பிடிப்பு முதுமலை யில் நடத்திக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 45 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடத்தினோம்.

Advertisment

"உடனே ஷூட்டிங்கை பேக்-அப் பண்ணிட்டு சென்னை வாங்க''’என கலைமணியிடமிருந்து போன்.

மொத்த யூனிட்டும் சென்னை திரும்பினோம்.

எடுத்தவரைக்கும் படத்தைப் பார்க்க விரும்பினார் கலைமணி.

Advertisment

ரெண்டே நாளில் எடிட் செய்து படத்தைப் போட்டுக் காட்டினேன்.

படம் முடிந்ததும்... எடுக்கப்பட்ட படத்தில் பாதி காட்சிகளுக்கு மேல் தூக்கிக் கடாசி விடச் சொன்னார் கலைமணி. நான் அதிர்ச்சியாகிப் பார்த்தேன். புரொடியூஸர்களுக்கு அதைவிட பேரதிர்ச்சி. நல்லா செலவு பண்ணி படம் எடுத்தாச்சே.

என்னை ஆபீஸுக்கு அழைத்துப் போய், படத்தின் பின்பாதிக்கான புதிய ஸ்கிரிப்ட்டைக் கொடுத்தார். அதுதான் கதாசிரியர் கலைமணி.

பின்பாதி கதை முழுக்க கோர்ட் ஸீனாகவே மாற்றியிருந்தார். அதில் வக்கீல் கேரக்டரை பிரமாதப்படுத்தி யிருந்தார். விஜய காந்த்திற்கும் இமேஜை தூக்கி நிறுத்தும் ஸீன்களை உருவாக்கினார்.

இதற்கு மத்தியில் சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க பெங்களூரு சிறையில்தான் அனுமதி கிடைத்தது. அதனால் அங்கே கிளம்பிப் போய் தேவையான காட்சிகளை எடுத்துக் கொண்டோம்.

ஒரு நீண்ட நெடிய வசனக் காட்சியை ராதிகாவிற்காக கலைமணி சார் எழுதியிருந்தார். ஆனால் ‘"விஜயகாந்த் பேசினாத்தான் நல்லா இருக்கும்'’என ராதிகா அபிப்ராயப்பட, "இது ஹீரோயின் சப்ஜெக்ட். ராதிகா பேசினாத்தான் சரியா இருக்கும்'’என விஜயகாந்த் சொல்ல...

dd

"இந்த டயலாக் கதையில் உங்களுக்கு ரொம்ப முக்கியம்''’என்றேன்.

அதை ஏற்றுக் கொண்டார் விஜயகாந்த். ஆனால், அந்தக் காட்சியை எடுப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன்.

காரணம்... ஆக்ஷன் ஹீரோவாக விஜயகாந்த் உருவெடுத்தபின் ஆவேசமாக, வசனம் பேசிப் பேசி... அப்படி வசனம் பேசும்போது புருவத்தை மேல்நோக்கி தூக்கிப் பேசும் மேனரிஸம் அவரையும் அறியாமல் அவருக்கு வந்துவிட்டது.

"ரீ-டேக், ரீ-டேக்...' என பல தடவை எடுத்தும், புருவம் உயருவதை அவரால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. விஜய காந்த்தின் கண்கள் காவியம் மாதிரி இருக்கும். அது எவ்வளவோ விஷயங்களை பார்வையாளனுக்கு கடத்தும். ஆனால் கூடவே உயரும் அந்த புருவம்தான் என்னுடைய இந்த ஸீனுக்கு பொருந்தாமல் இருந்தது. அதனால் அந்தக் காட்சியை எடுக்கும் விதத்தையே மாற்றிவிட்டேன்.

விஜயகாந்த் பேசிக்கொண்டிருக்க... ட்ராலி ஷாட்டில் கேமரா, ராதிகா மீது ஃபோகஸ் ஆகும். விஜயகாந்த் பேசுவதைக் கேட்டு, ராதிகாவுக்குள் மனமாற்றம் நிகழுவதாக காட்சிப்படுத்தினேன்.

மாண்டேஜ் ஷாட்ஸாக விஜயகாந்த் கைதியாக ஜெயிலுக்குள் வருவது, போவது, வராந்தாவில் அவர் நடந்துசெல்வது போன்ற காட்சிகளை எடுத்துக்கொண்டேன்.

பின்பாதிக் கதையில் முக்கியத்துவம் உள்ள அந்த லேடி லாயர் வித்யா வேணுகோபால் கேரக்டருக்கு யாரைத் தேர்வு செய்வது என விவாதித்தோம்.

எனக்கும், கலைமணிக்கும் "லட்சுமி மேடம் பொருத்தமாக இருப்பார்' என்கிற எண்ணம் வந்தது. லட்சுமியைப் பார்த்து கதையைச் சொன்னோம்.

தமிழ் -தெலுங்கு -கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அப்போது இருந்தார் லட்சுமி. அவருக்கு வக்கீல் வித்யா வேணுகோபால் கேரக்டரை விட மனசில்லை. அதனால்... “"மூணு நாள் கால்ஷீட் தர்றேன். அதுக்குள்ள எடுத்திட முடியுமா?''’எனக் கேட்டார்.

கலைமணி என்னைப் பார்த்தார். நான் லட்சுமியைப் பார்த்து, "ஓ.கே. மேடம்''’என்றேன்.

நாளையிலிருந்து மூன்று நாள் ஷூட்டிங். கோர்ட்டில் நீதிபதி உட்பட இதர கேரக்டர்களுக்கு ஆர்டிஸ்ட்டுகளைப் ஒப்பந்தம் செய்து, மறுநாள் காலை லட்சுமி வருவதற்கு முன்பாகவே நீதிபதி, கோர்ட் அட்மாஸ்பியர் ஷாட்ஸ்களை எடுக்கத் திட்டமிட்டோம்.

"மௌன ராகம்'’படத்தில் நடிகை ரேவதிக்கு அப்பாவாக சந்திரமௌலி கேரக்டரில் நடித்திருப் பாரே... அவர் பத்துக்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்தவர். அவர் பெயர் ரா.சங்கரன். கலைமணியுடனும் வொர்க் பண்ணியிருக்கிறார். கலைமணியே பேசி, அவரை நீதிபதி கேரக்டரில் ஒப்பந்தம் செய்தார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் பெரிய கோர்ட் செட் நிரந்தரமாக இருந்தது. எந்தப் படமாக இருந்தாலும், கோர்ட் காட்சி எடுக்கவேண்டி வந்தால் ஏவி.எம். கோர்ட்டுக்குத்தான் வருவார்கள். ‘"சிறைப் பறவை'’படத்திற்காக கோர்ட் அரங்கை நான்கு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருந்தோம். மூன்றுநாள் ஷூட்டிங். ஒருநாள் மேட்சிங் ஷாட் எடுக்க பிளான் பண்ணியிருந்தேன்.

dd

சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார் சங்கரன். அவருக்கான காஸ்ட்யூமை தேடினால் கோட் மட்டும் இருக்கிறது, பேண்ட் இல்லை. காஸ்ட்யூம் பெட்டியைக் குடைந்து தேடிவிட்டு, காணாமல்... காஸ்ட்யூமரிடம் விசாரித்தால், “"நீதிபதி உட்கார்ந்துதானே வழக்கு விசாரணையை கவனிச்சு, தீர்ப்பு சொல்லுவார். டேபிள் மறைச்சிருமே. அதனால் எதுக்கு அவருக்கு பேண்ட்னு ரெடி பண்ணலை டைரக்டரே... நீதிபதி கோர்ட்டுக்குள்ள நுழையிற ஷாட்டை கோட் லெவல்லயே காம்பாக்ட்டா எடுத்துருங்க''”என்றார்.

கோபத்தை மீறி சிரிப்பு வந்தது.

"எனக்கே ஷாட் எடுக்க சொல்லித் தர்றியா?''னு விதிய நினைச்சுக்கிட்டு, காஸ்ட்யூமர் சொன்னபடியே அந்த ஷாட்டை எடுத்தேன். ஆமாம்... நீதிபதிக்கு கோட் மட்டும் போட்டுவிட்டு, அவர் கட்டிவந்த வேஷ்டியிலேயே வரச்சொல்லி விட்டேன்.

ராதிகா, லட்சுமி, விஜயகாந்த் உள்ளிட்ட ஆர்டிஸ்ட்டுகள் ஏவி.எம். மேக்-அப் அறைகளில் ஒப்பனை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

"யார், யார் வந்திருக்கிறார்கள், சரியான ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறதா?' எனப் பார்ப்பதற்காக நான் மேக்-அப் அறைப்பக்கம் வந்தேன். இப்போதுபோல் அப்போது கேரவன் எல்லாம் கிடையாது. ஷாட் முடிஞ்சாலும், மேக்-அப் போட்டு ரெடியானாலும், மேக்-அப் அறையிலதான் நட்சத்திரங்கள் காத்திருப்பார்கள்.

நான் மேக்-அப் அறைப் பக்கம் வந்ததும்... கலைமணி என்னை அழைத்தார்.

"டைரக்டரே நேத்து நான் எழுதிக் கொடுத்த ஸீன் டயலாக் பேப்பர்ஸெல்லாம் கொடுங்க''” என் றார். 30 முதல் 40 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது டயலாக்.

அதை அவர் கையில் கொடுத்ததும், வாங்கிய உடனே நாலா, மூணா கிழித்துப் போட்டுவிட்டார்.

"என்ன சார்... என்னாச்சு? ஏன் கிழிச்சிட் டீங்க? ஆர்டிஸ்ட் எல்லாருமே வந்து ஷாட்டுக்கு ரெடியாயிட்டாங்களே சார். அதுவும் லட்சுமி மேடம், மூணுநாள் கால்ஷீட்தான் கொடுத்திருக் காங்க. அதுக்குள்ள முடிக்க வேணாமா?''’என பதற்றமாகக் கேட்டேன்.

"நீங்க போய் ஷூட்டிங் ஏற்பாடுகளை கவனிங்க... புதுசா எழுதி, எழுதி, அப்பப்ப அஸிஸ்டெண்ட்டுகிட்ட குடுத்துவிடுறேன்'' என்றார் கலைமணி.

நான் திகைத்துப்போனேன்!

(பறவை விரிக்கும் சிறகை)