(45) என் பிரியமானவள் கொடுத்த அவளது கல்யாண பத்திரிகை!
"பிள்ளை நிலா'’ படம் செம ஹிட். அதில் நடித்த மோகன், ராதிகா, நளினி மூவரும் முன்பைவிட பிஸியாக ஆனார்கள். குறிப்பாக தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த ராதிகாவை, இந்தப் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தேன்.
மோகன், ராதிகா, நளினி நடிப்பில் எனது டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பினார் ஸ்டில்ஸ் ரவி. அப்போது சினிமாவில் படப்பிடிப்பின்போது காட்சிகளை புகைப்படங்களாக எடுக்கும் புகைப்படக் கலைஞர்களில் பிஸியாக இருந்த ஸ்டில்ஸ் ரவி, எனக்கு நண்பர் மட்டுமல்ல... எனது ஆஸ்தான ஸ்டில்கிராபரும் அவர்தான். நான் டைரக்ஷன் பண்ணவேண்டும் என்கிற விருப்பம் போலவே, கங்கைஅமரனை இசையமைப்பாளராக தன் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதனால் கங்கை அமரனிடம் பேசி ஒப்பந்தம் செய்தாயிற்று.
இந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டில் என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
யாருடைய கல்யாணத்திலும் இப்படி நடந்திருக்காது, யாருடைய கல் யாணமும் இப்படி நடந்திருக்காது. ஆனால் என் கல்யாணத் தில் அடுக்கடுக்காய் நடந்த பல சம்பவங்கள் இருக்கே....
யப்பப்பா... ... ... ...
பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கிய ஷாக்... சாந்தி முகூர்த்தம் வரை நீடித்து என்னை வேதனைப் படவும் வைத்தது... வேடிக்கையும் காட்டியது!
என் ஆருயிர் நண்பன் ஒருவனுக்கு ஒரு அண்ணன், ஐந்து தங்கைகள். அவனுடைய கடைசி தங்கையை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. ‘அவளை திருமணம் செய்துகொண்டால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்’ என எனக்கு மனசில் பட்டது.
இது நான் டைரக்டராவதற்கு முன்பு.
அவள் கிளாஸிகல் சிங்கர். அருமையாக பாடுவாள். அவளுக்காகவே நானும் வீணை கற்றுக் கொண்டு வந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங் கள் நான் அந்தப் பெண்ணை எவ்வளவு நேசித்தேன் என்பதை. அவளின் சகோதரி பரத நாட்டியம் கற்றிருந்தார். அதனால் நானும் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வந்தேன்.
எனது பரதநாட்டிய குரு திருச்சூர் ராம நாதன். அவர் மிகப்பெரிய மாஸ்டர். நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி, பத்மினி யோட சகோதரி ராகினி... இப்படி பெரிய ஸ்டார்களுக் கெல்லாம் மோகினி ஆட்டம் எனும் நடன வகையை கற்றுக் கொடுத்தவர் திருச்சூர் ராம நாதன்.
ராமநாதனுக்கு லேட் மேரேஜ். அவருக்கு 42 வயது. அப்போதுதான் திருமணம் ஆகி பத்து நாட்கள் ஆகியிருந்தது.
அப்போது துபாயில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்த அழைப்பு வந்தது. அவரும், "பத்ரகாளி'’ படத்தின் கதாநாயகி ராணிசந்திரிகா உள்ளிட்ட சிலரும் துபாய் சென்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமானத்தில் திரும்பியபோது விமானம் தீப்பற்றி எரிந்து விழுந்தது.
(இதுபற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்)
"பரதநாட்டியம் பத்தின தியரி நாலெட்ஜ் உனக்கு நிறைய இருக்கு. ஆனா இன்னும் பிராக்டிலா தீவிரமா கவனம் செலுத்து'’என அடிக்கடி சொல்வார் என் குருநாதர்.
அவர் விமான விபத்தில் இறந்துவிட்ட சோகத்தில்... அவரது உடலை பெற்றுக் கொள்வதற்காக ஏர்போர்ட் போனேன். ஆனால்... கருகிப்போன உடல்களில் எஞ்சிய பாகங்களான கால்கள், கைகளில் ஏதோ குறிப்புகள் எழுதி வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.
"இதில் குருநாதரோட உடல் பாகம் எது?' என குழம்பிப் போன நாங்கள் நன்றாக உற்றுப் பார்த்தோம். அதில் ஒரு கையில் இருந்த மோதிரத்தை அடையாளம் கண்டோம். இருந்தாலும் ஒரே மாதிரி மோதிரம் வேறு சிலரும் அணிந்திருக்கலாமே. அத னால் இன்னும் கூர்மையாக பார்த்தபோது... பரத நாட்டியம் கற்றுக் கொடுக்கையில் நட்டுவாங்கம் சொல்லித்தரும் பாவனையில் அவரின் கை விரல்கள் இருந்தது. அதை வைத்து உறுதி செய்து, அந்த கையை எடுத்துக்கொண்டு வந்து, மைலாப்பூர் சுடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்து எரிந்த உடல் பாகத்தை எரியூட்டச் செய்தோம்.
குருநாதர் எனக்கு ஒரு முறை என் காலில் சலங்கை கட்டிவிட்டார். அவரின் இறப்புச் செய்தி கேட்ட பிறகு அந்தச் சலங்கையை பெட்டிக்குள் அவர் ஞாபகார்த்தமாக வைத்துவிட்டேன். அதன் பிறகு நான் சலங்கை கட்டவில்லை.
குருநாதரின் புது மனைவி கதறிய கதறலை இப்போதும் என்னால் மறக்க முடியாது.
"பிள்ளை நிலா'’ ஹிட் பட டைரக்டர் ஆனபின் தொடர்ந்து என் வீட்டில் என் திருமணப் பேச்சுதான். நான் என் வீட்டாரிடம் ‘என் நண்பனின் கடைசி தங்கை பற்றி ஒரு கிண்ட் கொடுத்திருந்தேன்.
"பய கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டானே'’ என என் வீட்டாருக்கும் சந்தோஷம். மதுரையிலிருந்த என் நண்பரின்... அதாவது நான் விரும்பிய பெண்ணின் வீட்டிற்கு போன் செய்தேன்.
"குடும்பத்துடன் அவர்கள் ஒரு கல்யாணத்திற் காக திருச்சி சென்றிருப்பதாகவும், அங்கே இரண்டு நாட்கள் இருப்பார்கள் என்றும், அங்கே போனால் அவர்களைப் பார்க்கலாம்' என்றும் தகவல் சொன் னார்கள். நான் திருச்சிக்கு பஸ் ஏறினேன்.
"நான் விரும்பிய அவளை திருமணம் செய்து கொண்டு, சின்னதாக ஒரு வீடு வாங்கி, அதில் குடும்பம் நடத்த வேண்டும்' என கற்பனை சிறகை விரித்தபடி பஸ்ஸில் பயணப்பட்டேன். எனக்கு முந்தி திருச்சி போய்க்கொண்டிருந்தது என் மனசு.
அவர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய லாட்ஜுக் குச் சென்றேன். நண்பனின் குடும்பத்தினரை பார்த்து நலம் விசாரித்தேன். அந்தப் பெண்ணை தனியே சந்தித்து... “"எங்க வீட்ல என்னை கல்யா ணம் பண்ணிக்கச் சொல்லி, பொண்ணு பார்க்கவும் தயாரா இருக்காங்க. ஆனா... நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன். என் விருப் பத்துக்கு என் வீட்டுல குறுக்க நிற்கமாட்டாங்க. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கதால, அவங்களுக்கும் உன்னை நிச்சயம் பிடிக்கும். நீ என் வாழ்க்கைத் துணையா வந்தா என் வாழ்க்கை சிறப்பா இருக்கும். உனக்கு சம்மதமா?''’என்று கேட்டேன்.
அந்தப் பெண் எந்தப் பதிலும் சொல்லவில்லை. தன் கையிலிருந்த ஒரு பத்திரிகையை நீட்டினாள்.
நான் அந்தப் பெண்ணை விரும்புவதை அறிந்திராத அவளின் குடும்பத்தினர்.... “"அவளுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. இன்னும் பத்து நாள்ல கல்யாணம். மதுரைலதான் கல்யாணம். நீங்க குடும்பத்தோட வந்திடணும்''’என்றார்கள்.
அப்போதுதான் பத்திரிகையை விரித்துப் பார்த்தேன். அது அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகை!
"என்னோட ஆசையெல்லாம் கனவாவே போச்சு. நல்லாரு. உனக்கு கல்யாணம் நடக்குற அதே நாள்லயோ இல்லேன்னா... அதுக்கு முன்னாலயோ என்னோட கல்யாணம் நடக்கும்''”
-இப்படிச் சொல்லிவிட்டு, யாரிடமும் சொல் லிக் கொள்ளாமல் சென்னை வந்து சேர்ந்தேன்.
எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க?
இதுதாங்க என்னோட வாழ்க்கை!
எப்பப் பார்த்தாலும் போராட்டம். நெருப்புக் குள்ள தூக்கி தூக்கி போட்டுக்கிட்டிருப்பாங்க. மீண் டும் மீண்டும் எந்திரிச்சு வந்துக்கிட்டே இருப்பேன்.
சென்னை வந்ததும் முதல் வேலையாக அப்பாவுக்கு தகவல் சொன்னேன்....
"நீங்க யாரை கைகாட்டி ‘கட்றா தாலியன்னாலும் நான் கட்டிக்கிறேன். நீங்களே பொண்ணு பார்த்து பேசி முடிங்க. ஆனா... ரெண்டே ரெண்டு கண்டிஷன்தான்...''”
"என்ன கண்டிஷன்?''”
"என் கல்யாணம் இன்னும் பத்து நாளுக்குள்ள நடக்கணும்''”
"இன்னொரு கண்டிஷன்?''”
"மதுரை மீனாட்சியம்மன் கோவில்லதான் என் கல்யாணம் நடக்கணும்?''”
"மீனாட்சியம்மன் கோவில்லயா?'' “
"ஆமா''”
"நம்ம ஊரு மன்னார்குடி பக்கம். கல்யாணத்த இங்க வைக்கணும். இல்லேன்னா நீ சினிமா தொழில் பண்ற சென்னையில வைக்கணும். ஆனா... எந்த வகையிலும் நமக்கு சம்பந்தமில்லாத, ஒரு சொந்தக்காரங்ககூட இல்லாத மதுரைல ஏன் கல்யாணத்த வைக்கச் சொல்ற?''”
"காரணம் இருக்கு''’என்றேன்.
என் கல்யாணத்திற்கு விஜயகாந்த்தும், இப்ராஹிம் ராவுத்தரும் செய்த உதவிகள்......
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்