"இது ஒரு டேரிங் அட்டம்ப்ட்' என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள். ஈர நெஞ்சோடும் மனிதாபிமானத்துடனும் காவல் சரித்திர குற்றப்பதிவேட்டில் இடம்பெற்று பெருந்தொல்லைகளை அனுபவித்துத் திருந்திய 164 பேரின் பெயர்களை நீக்கி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஓசையின்றிப் புனர்வாழ்வு அளித்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார். மாநிலக் காவல் வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிடாத துணிச்சலான அதிரடி நடவடிக்கை என்று காவல்துறை வட்டாரத்தில் பேச்சாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு காவல் லிமிட்களிலும், கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பெயர்கள் காவல் நிலையச் சரித்திரக் குற்றப் பதிவேட்டிலும், ரவுடி லிஸ்ட்களிலும் பதிவாகி அவை பராமரிக்கப்படும். குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்டதிலிருந்து காவல் நிலையக் குற்றப்பிரிவு, மற்றும் உளவுப் பிரிவின் கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்படுவர்.
அந்த பதிவேடுகள் வெறும் ரிஜிஸ்தர் நோட்புக் அல்ல. அஸ்திரம். அவை சாதாரணமாக நீக்கப்படுபவை அல்ல. ஆனால் அவற்றில் நன்னடத்தைக்காரர்களின் பெயர்கள் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கண்காணிப்பிற்குப் பின்பு நீக்கப்பட்டது தான் துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மாநில அளவில் எங்காவது கேங்க்ஸ்டர் மோதல்கள், ரவுடிகளின் கொலைகள், பழிக்குப் பழி கொடூரப் படுகொலைகள், சாதீய மோதல் என்று பிரச்சினைகள் வெடித்தால் இந்தப் பட்டியலிலுள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் கைது செய்யப்படுவர். அதுபோன்ற சமயங்களில், "ஐயா, நா எந்தக் குத்தத்திலும் ஈடுபடலைய்யா. சிவனேன்னு எஞ்சோலியப் பாத்துக் குடும்பத்தக் காப்பாத்துறேம்யா" என்று சம்பந்தப் பட்டவர் கும்பிட்டழுதாலும் வேலைக்காகாது. குற்றப் பதிவேடுகளில் இடம்பெற்றவர்களில் சிலர் மனந்திருந்தி வாழ்வது தெரிந்தாலும்கூட அவர்கள் தப்ப மாட்டார்கள். கடந்த ஆண்டு 'ஆபரேஷன் ரவுடி' வேட்டையில், 3,325 பேர் கைது செய்யப்பட்டு, 1,117 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக 31.12.21 அன்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு.
இப்படி போலீசின் பின்தொடரலால் பலர் மனம் நொந்து, குடும்பத்தார், சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தாரால் வெறுத்து ஒதுக்கப்படுவதும் உண்டு. இதனால் மனதுக்குள் புழுங்கிக்கொண்டு விரக்தியான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டவர்கள் பலருண்டு. 'நாங்கள் படும் இந்த இன்னல்களைக் களைய, எங்களைக் குற்றப்பதிவேட்டிலிருந்து நீக்குங்கள்' என்று பலர், தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் மற்றும் எஸ்.பி. போன்றவர்களுக்கு பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளப்பட வில்லையாம்.
இந்நிலையில்தான் தற்போதைய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடமும் தங்கள் துயரங்களைச் சொல்லிக் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அது அவரை பெரிதும் யோசிக்க வைத்தித்திருக்கிறது. அதையடுத்தே, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல் நிலையப் பகுதிகளில், குற்றப்பதிவேட்டி லுள்ள ரவுடிகள் லிஸ்ட்டிலிருந்த 1794 பேர்களில், கடந்த 5 ஆண்டுகளாக எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடாதவர்களின் பட்டியலைத் தரும்படி தனது ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உளவு அமைப்பு, மாவட்டக் கமிட்டி மற்றும் சப்டிவிசன் டி.எஸ்.பிக்கள் அடங்கிய குழுவினரிடம் கேட்டி ருக்கிறார். அதன்படி அலசி ஆராய்ந்து, 164 பேர் மீது எந்தவித வழக்கு விவகாரமும் இல்லையென்ற அறிக்கையை எஸ்.பி.யிடம் சமர்ப்பித்திருக் கிறார்கள்.
அதன்பின், டிசம்பர் 31-ம் தேதியன்று 164 பேரையும் தூத்துக்குடிக்கு வரவழைத்த எஸ்.பி. ஜெயக்குமார், போலீஸ் அதிகாரிகள் முன்னிலை யில், "உங்கள் மீது கடந்த ஐந்து வருடங்களாக வழக்கு இல்லாததால், திருந்தி வாழ்ந்துகொண்டி ருக்கிற உங்கள் பெயர்களை காவல் சரித்திரக் குற்றப் பதிவேடுகளியிருந்து நீக்கியுள்ளோம். சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல், நன்முறையில் வேலை செய்து வாழ்க்கையை நடத்துங்கள். வருகிற புத்தாண்டு முதல் உங்கள் அனைவரின் வாழ்க்கையும் சிறக்கட்டும், புத்தாண்டு வாழ்த்துக்கள்'' என்று அனைவரையும் வாழ்த்தி யிருக்கிறார். இதைக் கேட்ட அனைவருக்கும் ஆனந்தக் கண்ணீர். "எங்களைக் குற்றப் பதிவேட்டி லிருந்து நீக்கிய உங்களை உயிர் உள்ளவரை மறக்கமாட்டோம்யா" என ஈரமான விழிகளோடு எஸ்.பி.க்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்திருக்கின்றனர்.
குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்ட காரணத்தால் இன்னல்களை அனுபவித்தவர்களில், தாப்பாத்தியைச் சேர்ந்த 61 வயதான பால்ராஜை சந்தித்தில், "1987-ல தற்செயலா நடந்த கொலைக் கேசுல மாட்டிக்கிட்டேன். 87-ல வழக்குன்னாலும் 89-ல என்னைய குற்றப் பதிவேட்டில் ஏத்திட்டாக. வெளிய வந்து திருந்தி எஞ்சோலியத்தான் பாத்திட்டிருந்தேம்யா. எந்தச் சம்பவத்திலும் ஈடுபடல. எங்கனயாவது பிரச்சினைன்னா போலீஸ்காரவுக என்னையக் கூட்டிட்டுப் போயி உள்ள அடைச்சிருவாக. ரவுடி லிஸ்ட்டுனால, எம்புள்ளைகளுக்கு பெண் குடுக்க யோசனைப்பட்டு ஒதுங்கிட்டாக. அவ்வளவு கஷ்டத்த, சங்கடத்த அனுபவிச்ச எனக்கு ஐயா, இப்ப விடுதலை குடுத்திருக்காக. அவுகள நா தெய்வமாப் பாக்கேம்யா'' என்றார் தழுதழுக்க.
பொன்னன் குறிச்சியின் இசக்கிராஜின் பெயர் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய ரவுடி குற்றப் பதிவேட்டில் ஏற்றப்பட்டது. அவரைச் சந்தித்ததில், "யதேச்சையா நடந்த கொலச் சம்பவத்தில் என் னையச் சேர்த்திட்டாக. ரவுடி லிஸ்ட்லயும் வைச்சுட்டாவ. ஆனா கேசு விடுதலை. எதும் பிரச்சினைன்னா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிருவாக. வசதியும் கெடையாது. இதனால எம்பொண்ணுக்கு மாப்ள பாக்க முடியாம சிரமப்பட்டேம்யா. சிவனேன்னுயிருந்த நா, இதனால் கஷ்டப்பட்டேன். 20 வயசுலயே சேர்த் துட்டாக. குடும்பத்தோட சங்கடப்பட்டோம்யா. ரொம்ப வருஷமா நா எதுலயும் ஈடுபடல. இப்ப எஸ்.பி. ஐயா எனக்கு வாழ்வு குடுத்துருக் காகய்யா" என்றார் தெம்பான குரலில்.
தூத்துக்குடியின் சிவகுமார் லோடுமேனாக இருந்தவர். "திடீர்னு தெரியாம நடந்த சம்பவத் துக்கு ஆளாயிட்டேன். இள வயசுலயே சவுத் ஸ்டேஷன்ல ரவுடி லிஸ்ட்ல சேர்த்துட்டாக. நேரங்காலம் பாக்கமாட்டாக. அய்யா கூப்புடுறாகன்னு நட்ட ராத்திரி தூங்கவுடாம ஸ்டேஷனுக்கு கூட்டிப் போயிருவாக. காலைல வுட்டுருவோம்னு சொல்றவுக, கேஸ போட்டு உள்ள அடைச்சுருவாக. பெயில்ல வர வக்கீல் பீசு, கோர்ட் செலவுன்னு பதினைஞ்சாயிரம் ஆயிரும். பல தடவ இப்புடி நடந்துருக்கு. மன வருத்தம், அழுத்தம். என்னோட கல்யாணத்துக்கு பத்திரிகை அடிச்சிட்டேன். அப்ப பாத்து போலீசு கூட்டிப் போனதால எங்கல்யாணமே நின்னுருச்சு. வெளிய வந்து மறுமாசம் கல்யாணம் முடிச்சாப்ல, எம் மனைவியோட போயி எஸ்.பி. அய்யாட்டச் சொல்லி அழுதேன். அய்யாவும், "நீ திருத்திட்ட, ஒம்பேர எடுத்துவுட்றோம்'னு சொல்லி எடுத்துவுட்டு நல்லாயிருன்னு என்னய வாழ்த்தி அனுப்புனாக. இப்ப நிம்மதியா வேலைக்குப் போறேம்யா'' என்றார் சந்தோசமாய்.
பொன்னன் குறிச்சியின். இசக்கிபாண்டி, "என்ன செய்யச் சொல்லுதீக, 45 வயசுலருந்தே ரொம்ப சங்கடப்பட்டேன். ரவுடி லிஸ்ட்டுல போயி, குடும்பம், புள்ள குட்டிகளோட 22 வருஷமா சிரமம் தான்யா. இந்த ஊர்ல இசக்கி பாண்டின்னு பெயர்ல ரொம்ப பேர் இருக்காங்க. இத சரியா விசாரிக்காம அந்தப் பேர்ன்றதால என்னய சேர்த்ததுக்கு தொல்லய அனுபவிக்க வேண்டியதாப் போச்சு. இப்ப ஐயா எம்பேர நீக்கிட்டாக. சிரமப்பட்ட நா இப்ப தொந்திரவுயில்லாம வேலயப் பாக்கேம்யா'' என்றார்.
"இப்படி ஒருபுறம் குற்ற விஸ்ட்டில் இருப்பவர்கள், திருந்தியவர்கள் என்று தெரிந்து கருணையோடு அவர்களை மன்னித்து புனர்வாழ்வு கொடுத்தாலும், மறுபக்கம், குற்றம் என்று வந்துவிட்டால் கடுமை காட்டுகிற எஸ்.பி. ஜெயக்குமார், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனில் ஜெயில்தான். அதிலும் முகம் சுழிக்கும் குற்றச்செயல் என்றானால் குண்டாசில் தீட்டிவிடுவார். மாவட்டத்தில் போதைக் கடத்தலில் சிக்கிய 22 பேர் உட்பட மொத்தம் 195 பேர்களைத் தயவுதாட்சண்ய மில்லாமல் குண்டாசில் தள்ளியிருக்கிறார் எஸ்.பி. போலீஸ்காரர்கள் தவறு செய்தால் கண்டிக்கிறார். அதே சமயம், அவர்கள் பணியைத் திறமையாகச் செய்தால் பாராட்டுகிறார்'' என்கிறார்கள் காவல் வட்டாரத்தினர்.
இது குறித்து எஸ்.பி. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "இது சம்பந்தமா ரொம்ப பேர் என்ட்ட வந்து முறையிட்டாக... அழுதாங்க. கடந்த அஞ்சு வருஷமா கேஸ்ல சம்பந்தப்படாம அமைதியாயிருந்தவங்கள கமிட்டி மூலம் கண்காணித்து, இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட்டும் வாங்கி, 164 பேரையும் வரச் சொல்லியிருந்தோம். உங்கள ரவுடி லிஸ்ட்லயிருந்து எடுத்துட்டோம். புதுவாழ்வு தரப்போறோம். இனிமே கேஸ் வராம பாத்துக்குங்கன்னு சொல்லி வாழ்த்துனப்ப, இதுக்காக ரொம்ப வருஷமாப் போராடு னோம்யான்னு சொன்னாங்க. ரொம்ப சங்கடப்ப ட்ட எங்களுக்கு இப்ப நிம்மதி. ஒங்கள மறக்க மாட்டோம்யான்ட்டுப் போனது எனக்கு மனநிறைவு'' என்றார்.
புனர்ஜென்மம், புதுவாழ்வு பெற்ற குடும்பங் கள் எஸ்.பி.யைக் கொண்டாடுகின்றன.