"ஹலோ தலைவரே... ஆட்சிக்கு வந்தும் கொரோனா சூழலால் கலைஞரின் 98-வது பிறந்த நாளைக் கோலாகலமா கொண்டாட முடியாவிட்டாலும் அவரோட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டும், மக்களுக்கு இலவச மளிகைப் பொருட்களை வழங்கும் திட்டம் உள்பட பலவற்றையும் தொடங்கி வைத்து கலைஞருக்குப் பெருமை சேர்த்துவிட்டார்.''
"ஆமாப்பா... கலைஞரின் நூற்றாண்டு விழாவை சீரும் சிறப்புமா கொண்டாடும் வகையில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தணும்.''”
"ஆமாங்க தலைவரே… "சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்'ங்கிற கலைஞர் பாணியிலேயே இரண்டாவது தவணையான 2000 ரூபாயையும் வழங்கத் தொடங்கிடிச்சி. இதிலேயெல்லாம் எடப்பாடி ஆட்சியைவிட பல மடங்கு சிறப்பா இருக்கிற ஸ்டாலின் அரசு, ஐ.பி.எஸ். அதிகாரிகள் போஸ்டிங் விவகாரத்தில் அ.தி.மு.க. ஆட்சி போலவே இருக்குது. இது பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கோம். கடந்த ஆட்சிக் காலத்தில், அப்ப இருந்த அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏகப்பட்ட புகார்கள் தி.மு.க.வால் கொடுக்கப்பட்டுச்சு. ஆனால், அவற்றின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படலை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே அங்கிருந்த அதிகாரிகள் செயல்பட்டாங்க.''”
"ஆமாம்பா, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளான டி.ஐ.ஜி. ராதிகா உள்ளிட்டோர், அ.தி.மு.க.வின் விசுவாசிகளாக இருந்ததால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான லஞ்சப் புகார்களை, இவர்கள் விசாரிக்கக் கூடாதுன்னு தி.மு.க.வே, பிறகு புகார் மனு கொடுத்துச்சே''! ”
"ஆமாங்க தலைவரே, இப்ப தி.மு.க. ஆட்சி வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக, நேர்மையான அதிகாரியான கந்தசாமி நியமிக்கப்பட்டார். அவர், அங்கே டி.ஐ.ஜி. ராதிகா இருந்தால் சரிவராதுன்னுதான், வந்த வேகத்திலேயே அவருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டார். அப்படி இருந்தும் அவருக்கு அடுத்த போஸ்டிங் அறிவிப்பு வரும்வரை, அங்கேயே அமர்ந்துகொண்டு, டி.ஜி.பி.யையே வேவு பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய நடவடிக்கை பற்றி கந்தசாமி, மேலிடத்திடம் புகாரும் செய்தார். அப்படிப்பட்ட ராதிகாவை, திருச்சி சரக டி.ஐ.ஜி. என்னும் பவர்ஃபுல் பதவியில் இப்போது உட்காரவைத்து விட்டார்கள்.''”
"ம்...'' ”
"அதேபோல் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று எல்லோராலும் சுட்டிக் காட்டப்படும் சேலம் கமிஷனரான சந்தோஷ் குமாரை, அண்மையில் சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக அமர வைத்துவிட்டார்கள். இவர் எடப்பாடியின் தீவிர விசுவாசி என்கிறார்கள். அதேபோல் ஜெ.வின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக இருந்த டி.எஸ்.பி. நாகராஜன், செந்தாமரைக் கண்ணன், பொடா வழக்கில் கலைஞரை கைதுசெய்ய முயற்சித்தவர்கள். அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக இருந்த செந்தாமரைக் கண்ணனை, திருநெல்வேலி கமிஷனராக நியமித்திருக்கிறார்கள்.''”
"இதேபோல் அ.தி.மு.க.வினரிடம் கறாராகவும் நேர்மையாகவும் நடந்துகொண்டதால், கடந்த ஆட்சியில் ஓரம்கட்டப்பட்ட அதிகாரிகள் சிலர், இப்போதும் இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்களே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, ஜெ.வின் பணத்தை தேர்தல் நேரத்தில் பல இடங்களுக்கும் விநியோகித்துவந்தவர் கரூர் அன்புநாதன். அவரது கரன்ஸி ஆம்புலன்ஸ் ஒன்றை மடக்கிப் பிடித்தார் ஐ.பி.எஸ். அதிகாரியான வந்திகா பாண்டே. அதனால் அவரை ராஜபாளையம் பெட்டாலியனுக்குத் தூக்கியடித்தனர். பிறகு ஆவடி பெட்டாலியனுக்கு அனுப்பினர். அவருக்கு இன்னும் முக்கியமான இடம் கிடைக்கலை. இப்படி நேர்மையான அதிகாரிகளை முடக்கிவிட்டு, கடந்த ஆட்சியில் எடப்பாடிக்கு விசுவாசம் காட்டிவந்த அதிகாரிகளை, இப்போதிருக்கும் உயர் அதிகாரிகள், தமிழகம் முழுக்க நிரவலாக பவர்ஃபுல்லாய் உட்காரவைத்து விட்டார்கள். அதனால்தான், இப்போது நடப்பது தி.மு.க. ஆட்சிதானா என்று ஐ.பி.எஸ். தரப்பிலேயே கேள்வி எழுப்பப்படுகிறது.''”
"ஐ.ஏ.எஸ். தரப்பிலும் சலசலப்பு தெரியுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, கால்நடை, பால் வளம், மீன் வளம் ஆகிய 3 துறைகளும் தனித்தனியா இருக்குது. இதில் கால்நடை மற்றும் மீன்வளத் துறைகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் ஆவடி நாசர். இப்படி இந்த 3 துறைகளுக்கு 2 அமைச் சர்கள் இருக்கும் நிலையில், இந்த மூன்றுக்கும் துறைச்செயலாளர் மட்டும் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் மூன்று குதிரையிலும் பயணிக்கக்கூடியவராக இருப்பவர் ஜவகர் ஐ.ஏ.எஸ். இது ஒருவித சிக்கலை துறைரீதியாக ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. அதாவது இந்த மூன்று துறைகளை கவனிக்கும் 2 அமைச்சர்களையும் இந்த ஒரே அதிகாரி மேனேஜ் பண்ணவேண்டும். இந்தக் குழறுபடி தி.மு.க. ஆட்சியிலாவது தீரும்னு பார்த்தா, நிலைமை மாறலையேன்னு கோட்டையில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பு முனகுது. மூன்றுக்கும் தனித்தனி துறைச்செயலாளர்கள் நியமிக்கப்பட ணும்னு அவங்க சொல்றாங்க.''”
"கன்ஃபர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நியமனம் நடக்கப்போகுது போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, துறைதோறும் கன்ஃபர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தேர்ந் தெடுப்பதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கு. அதற்குத் தகுதியான நபர்களின் பட்டியலைத் தயார்பண்ணும் வேலைகள் அனைத்துத் துறையிலும் பரபரப்பா நடக்குது. இந்த நிலையில், ஊரக வளர்ச்சித்துறையில் கூடுதல் இயக்குநர்களாக இருக்கும் பெண் அதிகாரிகளிடையே, இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டி அதிகரிச்சிருக்குதாம். கூடுதல் இயக்குநரா இருக்கிற ஒரு பெண் அதிகாரி, நான் ஐ.ஏ.எஸ். ஆகிக் காட்டுகிறேன்னு துறையிலுள்ள சக அதிகாரி களிடம் பகிரங்கமாவே சவால்விட்டுக்கிட்டு இருக்காராம்.''”
"சரிப்பா, சசிகலா விவகாரத்தில் கே.பி. முனுசாமி வெளிப்படுத்தும் கருத்தை அ.தி.மு.க.வில் ஒரு தரப்பினர் ரசிக்கலையாமே?''”
"ஆமாங்க தலைவரே, மீண்டும் வருவேன். கட்சியை சரி பண்ணுவேன்னு சசிகலா தனது ஆதரவாளர்களிடம் பேசும் ஆடியோக்களை அவர் தரப்பே தொடர்ந்து வெளியிட்டுக் கிட்டு இருக்குது. இதைப் பார்த்து எரிச்சலான அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.எல்.ஏ.வு மான கே.பி.முனுசாமி, "எங்கள் கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. அவர் பேச்சை அ.தி.மு.க தொண்டர்கள் யாரும் கேட்கமாட்டார்கள். அவர் அமைதியாக இருக்க வேண்டும்'னு குரல் கொடுத்தார். இதை அ.தி.மு.க. சீனியர்கள் சிலரே ரசிக்கலையாம். தி.மு.க.வை எதிர்த்து வலிமையாக செயல்படணும்னா, அதுக்கு அ.தி.மு.க. இரட்டைத் தலைமையில் இருந்து விடுபட்டு ஒன்றுபடணும். அதற்கான தருணம் கனிந்து வரும்போது அவர் இப்படி பேசலாமான்னு அவங்க கேள்வி எழுப்பறாங்க.''”
"கே.பி.முனுசாமியின் எதிர்ப்புக்கு சசிகலாவின் ரீயாக்ஷன் என்னவாம்?''”
"கே.பி.முனுசாமி, சசிக்கு எதிராகப் பேசிய வீடியோவை சசிகலாவிடம் அவர் தரப்பு போட்டுக் காட்டியிருக்கு. இதைக்கேட்ட சசிகலா எந்த உணர்வையும் காட்டாம அமைதியா இருந்தாராம். பிறகு, இதை தன்னிச்சையாப் பேசியிருக்கமாட்டார். எடப்பாடியின் தூண்டு தலால்தான் அப்படி பேசியிருப்பார். எல்லோருமே லாப-நட்டக் கணக்கைப் போட்டுப் பார்த்துட்டு தானே அரசியல் செய்றாங்க. எடப்பாடியால் அதிக லாபம் பார்த்தவர் முனுசாமி. அதனால் அவர் அப்படி பேசியிருப்பார்னு சொன்ன சசிகலா, "அ.தி.மு.கவில் அவருக்கு வாழ்க்கை கொடுத்ததே நான்தான். ஒரு நாள் அவர் என்னைத் தேடி வருவார் பாருங்க'ன்னு அழுத்தம் கொடுத்துச் சொன்னாராம்.''”
"ஜூன் 13-ல் நடப்பதாக இருந்த டி.டி.வி. தினகரனின் மகள் திருமணம், ஆகஸ்ட்டுக்குத் தள்ளிப்போகுதாமே?''”
"ஆமாங்க தலைவரே, கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தில் தினகரன் சம்மந்தம் பண்றார். அண்மையில் அவரது தந்தை துளசிஅய்யா வாண்டையார், மரணமடைந்தார். அதனால்தான் ஆகஸ்ட் இறுதிக்கு திருமணத்தை தள்ளி வச்சிருக்காங்க. இதற்கிடையில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்போ, அல்லது அ.தி.மு.க.வில் சசிகலா இணைவதோ நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு மன்னார்குடி தரப்பிடம் இருக்கு. அப்படி சசிகலா, அ.தி.மு.க.வின் பவர்புள்ளியாக மாறினால், இந்தத் திருமண விழாவை பிரமாண்டமா நடத்தலாம்னு நினைக்கிறாங்களாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி, தன் பதவிக் காலம் முடியும் நேரத்தில், தனக்கு நெருக்கமான ஒரு பெண் அதிகாரியை, சென்னைக்கு இடமாற்றம் செய்து, தலை நகருக்கு வரவழைச்சிக்கிட்டாராம்.''”