அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் கடந்த மாதம் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து அவரது பினாமிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் பினாமியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதில் புதுக்கோட்டை, தஞ்சாவூரிலும் சில பினாமிகள் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்களை சில மாதங்களுக்கு முன்பே சேகரித்து வைத்திருந்தனர். இது குறித்து பினாமிகள் திக்... திக்... மனநிலையில் உள்ளார்கள் என்றும் வேலுமணி வீட்டில் சோதனை நடந்தபோதே "நக்கீரன்' இணையத்தில் செய்தி வெளியானது.
நாம் சொன்னது போலவே முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முள்ளங்குறிச்சி ஊ.ம.தலைவர் காந்திமதியின் கணவரும் ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக உள்ளவருமான முருகானந்தம் மற்றும் முருகானந்தம் சகோதரர்கள் பழனிவேல், ரவி ஆகியோரின் புதுக்கோட்டை, கடுக்காக்காடு ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், புதுக்கோட்டை நகரில் உள்ள வணிக வளாகம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர்.
புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசா ருடன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் 10 பேர் பழனிவேல் மற்றும் முருகானந்தம் ஆகியோர் வீட்டிலும் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிமன்னன் தலைமையில் 10 பேர் ரவி வீட்டிலும் 29-ந் தேதி காலை 6 மணி முதல் மாலைவரை சோதனை செய்தனர். இந்த நிலையில் முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளில் 1260 மடங்கு சொத்துகளை குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் சோதனையின்போது கடந்த காலங் களில் முறைகேடாக அரசு ஒப்பந்தங்கள் பெற்றது. வருமான வரம்பை மீறி சொத்துகள் சேர்த்தது உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த முருகானந்தம்?
முள்ளங்குறிச்சி ஊராட்சி கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் சாதாரண விவசாய குடும்பம். ஊராட்சி எழுத்தராக பணிக்கு சேர்ந்தவர். சில வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வில் ஏ.டி. அலுவலக உதவியாளராக பணி செய்துவருகிறார். இதற்கிடையில் வேலுமணி அமைச்சரானதும் அவரிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தனது தம்பி பழனிவேல் மூலமாக ஊராட்சிகளுக்கு எல்.இ.டி பல்புகள், தெருவிளக்கு களுக்கு எர்த் ஒயர் இணைப்பு வழங்குவது என்று கோடிக்கணக்கில் ஒப்பந்தங்களைப் பெற்று தரமற்ற பொருட்களை சப்ளை செய்துள்ளார்.
தெருவிளக்குகளுக்கு எர்த் ஒயர் இணைப்பு என்பது தேவையே இல்லை என்றாலும் பணத்தை சுருட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் தொடங்கும்போது ஒவ்வொரு ஊராட்சிக்கும் பரபரப்பாக பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி, சோப்பு, தண்ணீர் டேங்க், ஸ்பிரேயர் கொடுக்கும் ஒப்பந்தம் முழுமையாக பழனிவேல் நிறுவனமே எடுத்தாக கணக்கு எழுதப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பணம் சென்றது. பலநூறு கோடிகள் அதில் முறைகேடாக எடுக்கப்பட்டது.
அதாவது பிளீச்சிங் பவுடர் மூடை ரூ.200-க்கு கிடைக்கும்போது இவர்கள் ரூ.2550/-க்கு பில் அனுப்பி பணம் வாங்கியுள்ளனர். அதிலும் கோல மாவில் 5 கிலோ பிளிச்சிங் பவுடர் கலந்து முறைகேடு செய்யப்பட்டிருந்தது. இப்படி மாஜி அமைச்சர் வேலுமணியின் துறையில்தான் ஏராளமான முறைகேடுகளை செய்திருந்தனர்.
இப்படி சம்பாதித்த பணத்தில் புதுக்கோட்டை நகரில் பெரிய விஜய் பேலஸ் என்ற பெயரில் வணிக வளாகம், மற்றும் பல சொத்துகளையும் கடுக்காக்காடு, சார்லஜ் நகரில் பிரமாண்டமான வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. பி.எம்.டபுள்யூ, பென்ஸ் உள்ளிட்ட 6 கார்களும் உள்ளது. பென்ஸ் காரில் வந்து மாதம் ஒருமுறை அலுவலகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு செல்வதை இன்று வரை வழக்கமாக வைத்திருக்கிறார் முருகானந்தம்.
இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்காமல் இருக்க ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் தொடர்பில் இருந்ததும், அவர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஒரு டன் ஆட்டுக்கறி உள்ளிட்ட செலவுகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படு கிறது. முன்னதாகவே தெரிந்ததால் பல ஆவணங் கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
புதுக்கோட்டையில் சோதனை தொடங்கி விட்ட தகவல் அறிந்து தஞ்சையில் உள்ள பினாமி கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆவணங் களை மாற்றும் வேலையும் தொடங்கியுள்ளதாக கூறுகின்றனர்.