கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில், தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு வருவ தாக அந்நிறுவனம் சார்பில் வெளியிடப் பட்ட விளம்பரம், தூத்துக்குடி மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் களின் மத்தியில் நெருப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விளம்பரம், ஸ்டெர்லைட்டின் வழக்கமான டிராமா என்றே பலரும் கூறு கிறார்கள்.. ஏனென்றால், பலநூறு கோடி மதிப்புகளைக் கொண்ட ஒரு ஆலை உண்மையில் விற் பனைக்கு வருகிறது என்றால், பிசினஸ் தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு முன்னணிப் பத்திரிகைகள் அனைத் திலும் விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், ஒரேயொரு உள்ளூர் நாளிதழில் மட்டுமே விளம்பரம் வெளியிட்டுள்ளது. இப்படி விளம்பரம் வெளியிட்டு தங்களுக்கான ஆதரவையும் அனுதாபத்தையும் வழக்கமான பாணியில் மக்கள் மத்தியில் கிளப்பிவிட முயற்சிக்கிறது ஸ்டெர்லைட்.
அடித்தட்டு மக்களின் வேலைவாய்ப்புக்குக் காரணமான ஆலை விற்கப்படக்கூடாது. தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆலையின் அருகிலுள்ள பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம் கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆதரவு மக்கள் தூண்டப்பட்டு, உண்ணா விரதமிருக்கும் திட்டத்துடன் கூடியிருக்கிறார்கள். இதனையறிந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவர்களை மறிக்க, போலீஸ் தலையிட்டு உண்ணாவிரதக் கோஷ்டியை அப்புறப்படுத்தியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர் பான வழக்குகள் நிலுவையிலிருக்கும்போது ஆலையை விற்க முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. எப்படி யாவது ஆலையைத் திறந்துவிடவேண்டும் என்பதே ஸ்டெர் லைட்டின் திட்டம். ஆலை விதிமீறலில் ஈடுபட்டுள்ளது, மாசு ஏற்படுத்தியுள்ளது என்பதற்காக 2013-ல் உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதுசமயம் பலரும் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டனர். உச்ச நீதி மன்றமே திறக்கலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டது என்றனர். ஸ்டெர்லைட்டும் இந்த அபராத பாயிண்ட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. சொல்லப்போனால் நீதிமன்றம் அரசுக்கும், ஸ்டெர்லைட்டிற்கும் தலா ஒரு சான்ஸ் கொடுத்திருக்கிறது. "நாங்கள் இனிமேல் விதிமீறல் பண்ண மாட்டோம். ஆலையைத் திறக்கிறோம். அதனைக் கண்காணிக்க மானிட்டரி கமிட்டி ஒன்று அமையுங்கள். அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று ஆலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணம் செய்த பின்பு உத்தரவைப் பெற்று அப்போது ஆலை திறக்கப்பட்டது.
தற்போது ஸ்டெர்லைட்டின் எண்ணம் என்ன வெனில், நாங்கள் ஆலையை நடத்தவில்லை. எனவே ஆலையை விற்கிறோம் என்று காட்டிக்கொள்வதாக உள்ளது. ஆனால் வாங்குபவரும், விற்பவரும் வெளியில் தங்களுக்குள் அக்ரீமெண்ட் போட்டுக் கொள்ளலாம். "அவர்தான் விதிமீறலில் ஈடுபட்டார். அவர் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். நேரிடையாக ஐந்தாயிரமும், மறைமுகமாக 25 ஆயிரம் பேர்களுக்கான மிகப் பெரிய வேலைவாய்ப்பைக் கொண்டது. நான் விதிப்படி செயல்படு கிறேன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்' என்று ஆலையை வாங்குபவர் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யலாம். அதன்மூலம் ஆலையைத் திறக்க வாய்ப்பு ஏற்படலாம். இதற்காக வழியில் ஸ்டெர்லைட், மொரீசியஸ் போன்ற வெளிநாட்டில் பினாமியாக ஒரு கம்பனியை உருவாக்கி, அவர்களின் மூலமாக ஸ்டெர்லைட்டை வாங்க வைத்து ஆலையைத் திறக்கலாம். அத்தனை தூரம் யோசிக்க வேண்டியதில்லை. அதானிக்குக்கூட ஆலை யைத் தர முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்ட மைப்பின் சட்ட ஆலோசகரான ஹரிராகவன், "இவர்கள் பைபாஸ் வழியிலாவது ஆலையைத் திறந்திட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அத்தனை சுலபமாக ஆலையை இவர்கள் விற்கமுடியாது. ஆரம்பத்தில் ஆலையைத் திறக்கும்போது அதற்கு அரசு மானியம் கொடுத்ததுடன், ஆலைக்கு 136 ஏக்கர் நிலத்தையும் கொடுத்தது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, அரசால் கற்பனைக்கும் எட்டாத சலுகை மற்றும் நிலங்களைப் பெற்ற ஆலை, தாங்கள் ஆலையை விற்பது பற்றி அரசுக்கு முறை யாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அரசுக்கு இதுபற்றித் தெரிவிக்கவே இல்லை. உயர்நீதிமன்ற நீதி யரசர்களான சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, ஆலையைத் திறக்கக் கூடாது என்ற அரசின் ஆணை செல்லும் என்று உத்தரவிட்டிருக்கிறார் கள். மேலும், இவர்கள் விதிமீறலாக மாசுவை ஏற்படுத்தி சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவித்தது, காப்பர் கழிவுகளை அகற்றியதிலும் ஒளிவுமறைவாக இருந்ததால் ஆலைமீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் ஆலையை விற்றுவிட்டுப் போய்விட்டால், யார் மீது குற்றவியல் நட வடிக்கை எடுப்பது என்ற கேள்வி நிச்சயமாக எழும். உல கின் பல இடங்களில் நிலக்கரி சுரங்கம் மற்றும் காப்பர் நிறுவனங்களைக் கொண்ட ஸ்டெர்லைட், ஜாம்பியா தொழிற்சாலையில் மாசு ஏற்படுத்தியதற்காக லண்டன் நீதிமன்றம் ஒரு கனமான தொகையை நஷ்ட ஈடாக அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது என்ற பேச்சும் உண்டு'' என்றார். சரக்கு அரதப் பழசு தான். ஆனால், ஓனர் புதியவர் என்ற அரிதாரமா என்கிற கமெண்ட்கள் றெக்கை கட்டுகின்றன.