எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது விக்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் படித்துவருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி காலையில் இப்பள்ளியில் பயிலுகின்ற மாணவர்கள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனை ஆசிரியர் களிடம் சொல்லவே, உடனடியாக மாணவர்களை பள்ளி மைதானத்தில் அமரவைத்து ஆசுவாசப்படுத்தி சற்று நேரத்துக்குப் பின் அதே வகுப்பறைக்குச் சென்று பாடமெடுத்துள்ளனர்.
மதியம் 2 மணியளவில் மீண்டும் மாணவர்கள் நெஞ்செரிச்சல், கண் எரிச் சல், தொண்டைவலி, மூச்சுத் திணறல் பிரச்சனைகளால் அவதியுற்றிருக் கின்றனர். 30-க்கும் மேற் பட்ட மாணவர்கள் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரையும் மருத்துமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதே பள்ளியில் இயங்கும் ஆய்வகத்திலிருந்து வெளியேறிய விஷ வாயுவே பள்ளி மாண வர்கள் மயக்கமடைய காரணம் என முதலில் கூறப்பட்டது.
ஆனால் காவல் துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரிகள், தடய அறிவியல் துறை அதிகாரிகள், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் என அனைவரும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, சுற்றியுள்ள ட்ரெய்னேஜ், சுற்றியுள்ள தனியார் நிறுவனங் களிலிருந்து விஷவாயு கசிந்திருக்குமா என விசாரணையை மேற்கொண்டார்கள். அதில் முதற்கட்ட தகவலாக பள்ளியிலுள்ள ஆய் வகத்திலிருந்து எந்தவிதமான விஷவாயுக் கசிவும் ஏற்படவில்லை என்று தெரியவந்தது. மேலும், பள்ளியின் மூன்றாவது தளத்திலுள்ள ஏழாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கான மூன்று வகுப்பறைகளில் மட்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல ஆய்வகத்திற்கு அருகாமையிலே மாணவர்கள் வகுப்பறை இருந்துள்ளது. அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களின் வகுப்பிற்கும் ஆய்வகத்திற்கும் நீண்ட தொலைவு இடைவெளி இருப்பதாலும், ஆய்வகத்தால் இந்த பிரச்சினை வரவில்லை என முடிவுக்கு வந்தனர். வேறு எப்படி விஷ வாயு கசிந்திருக்கும் என்கிற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசிய போது... கடந்த இரண்டு நாட்களாகவே தங்கள் பிள்ளைகள் மூச்சுவிட பிரச்சனையாக இருந்ததாகவும், எல்லா குழந்தைகளும் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதாகவும் வீட்டில் சொல்லியுள்ளனர்.
இந்த நிலையில் நவம்பர் 4லிஆம் தேதி இரண்டு மணி அளவில் அதீத மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படவும் மாணவர்கள் ஆசிரியரிடம் உதவி கேட்க, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பள்ளியின் தரப்பிலிருந்து பெற்றோர்களுக்கு எந்தவிதத் தகவலும் முறைப்படி வழங்காமல் இருந்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பதற்றத்தில் பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் சென்று தங்கள் பிள்ளைகளைப் பார்த்துள்ளனர்.
பிறகு பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்த விஷ வாயு எங்கிருந்து கசிந்தது, வேறு என்ன காரணத்தால் இப்படி நடந்தது என்கிற எந்தத் தகவலும் சொல்லாமலே, பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி திறந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மீண்டும் மயக்கம், வாந்தி, தலைசுற்றல் ஏற்பட்டதால் மீண்டும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எந்த அடிப்படையில் பள்ளியை திறந்தீர்கள். இதுபோன்ற மயக்கத்திற்கு என்ன காரணம் என்று தெரியாமல் எப்படி பள்ளியைத் திறக்கலாம், இத்தனை அதிகாரிகள் வந்து ஆராய்ச்சி செய்தும் தெரியவில்லை என்றால் இதில் நிச்சயம் ஏதோ இருக்கின்றது. அதனை மூடிமறைக்கப் பார்க்கிறார்கள். அதற்கு அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என ஒட்டுமொத்த பெற் றோர்களும் உரத்த குரலில் கேள்வியெழுப் பினர்.
பள்ளி முதல்வரான வனிதா, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் வாய்வழி உத்தரவின் மூலமாகவே, நாங்கள் பள்ளியைத் திறந்தோம் என்றும், தற்போது ஏற்பட்ட பிரச்சனையால் தற்காலிகமாகப் பள்ளி மூடப்படும் என்றும், அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு எப்பொழுது திறக்கப்படும் என்பதை பின்னர் அறிவிப்போம் என பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
பள்ளிக்குள் மட்டும் விஷவாயு எங்கிருந்து வந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வாயு என்பது காற்றில் பரவும் ஒன்றுதான். குறிப்பாக வாயு எப்போதும் எங்கிருந்து பரவுகிறதோ அங்கிருந்து மேல்நோக்கியும் பக்கவாட்டிலும் பரவும். அதனால்தான் வாயுக் கசிவின்போது முன்னெச்சரிக்கையாக தரையில் படுத்து சுவாசிக்க சொல்வார்கள். வடசென்னையைப் பொறுத்தமட்டில் சின்னச் சின்ன கம்பெனிகள் நிறைய உள்ளன. இந்நிறுவனங்களில் நைட்ரிக் அமிலம், சல்பூரிக் அமிலம், இதுபோன்று பல அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாம் தினம்தோறும் பயன்படுத்தும் கழிவறை சுத்திகரிப்பான், கந்தக அமிலத்தில் 10 சதவீதம் பயன்படுத்தி, அதனுடன் தண்ணீர் கலந்து விற்கப்படுகிறது. கலப்பில்லாத கந்தக அமிலத்தில் மனிதனை போட்டால் எலும்புகூட மிஞ்சாது. இதுபோன்ற நிறுவனங்கள் சிறிய வீடுகளை எடுத்து தயாரிப்பது உண்டு. எனவே பள்ளியைச் சுற்றியுள்ள வீடுகளில் இதுபோன்று அமிலப் பயன்பாட்டுத் தயாரிப்புகள் ஏதும் நடக்கிறதா என விசாரித்திருந்தாலே தகவல் கிடைத்திருக்கும். இதனை காவல்துறை செய்திருக்கவேண்டும்.
மயக்கமடைந்த மாணவர்களை மருத்துவ மனையில் அனுமதித்தவுடன் அவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் என்ன வாயு கலந்தது என்பதை ரத்தப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதேபோல (ள்ஜ்ஹக்ஷ) ஸ்வாப் டெஸ்ட் செய்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்கள் வாயுவை சுவாசித்த பிறகே அவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தது. ஆகையால் அவர்களின் மூக்கின் வழியாக ஸ்வாப் பஞ்சை வைத்து துடைத்தெடுத்து அதனை தடய அறிவியல் துறைக்கு அனுப்பி விசாரித்திருந்தால் நிச்சயம் அது என்ன வாயு என ஒரு மணி நேரத்தில் தகவல் கிடைத் திருக்கும். இவர்கள் அதையும் செய்யவில்லை. அதேபோல மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மொபைல் போன் மூலம் காற்றில் விஷவாயு இருகின்றதா என்கிற செக்கப் செய்திருந்தாலும் தெரிந்திருக்கும்.
இதுகுறித்து மருத்துவரிடம் கேட்டபோது, முதல் உதவி மட்டுமே நாங்கள் கொடுத்தோம். மூச்சுத் திணறல் பாதிப்பு எதனால் எனத் தெரியாது என தட்டிக் கழித்தனர். மாநகராட்சி துணை ஆணையர் கட்டாரவி தேஜா, தனியார் பள்ளிக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆகியோர் மாணவர்களைப் பார்வையிட்டு பேசியவர்கள், "குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்கள். ஆனால் இதுநாள் வரையிலும் எந்தப் பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை.
மாணவர்களை என்ன வாயு தாக்கியது? எதனால் தாக்கியது? என்கிற கேள்விகளுக்கு எந்த பதிலும் கொடுக்காமல் தட்டிக் கழித்த தோடு, தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர் களுக்கு விடுமுறை அறிவித்து அவர்களின் கல்விக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளனர்.
வரும் முன் காப்பது அறிவுடைமை. வந்தபின்னும் காக்காமல் இருந்தால்… அது அறிவுடைமையா என கேள்வியெழுப்புகின்ற னர் சமூக ஆர்வலர்கள்.
-சே
படங்கள் ஸ்டாலின்