ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தே கள்ளச் சாராயம், குக்கர் சாராயம், ஃபுரூட் பீர் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்தும், மூடப் பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலிருந்து பாட்டில்களை எடுத்து வந்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது பற்றியும் புகார்கள் வந்தபடியே இருந்தன. கைது நடவடிக்கைகளும் செய்திகளாயின. ஆனாலும், போதை பழக்கம் என்பது வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கொரோனா பாதிப்பால் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளில்கூட மதுபானங்கள் அல்லாத பிற போதை வஸ்துகள் விற்பனையாவது தடையை மீறி தொடர்கிறது. அது குறித்த ஷாக் ரிப்போர்ட் தான் இது.
விமல், சாந்தி, சைனி கைனி, மாணிக் சந்த், கார்கில்... -இவையெல்லாம் என்னவென்று திகைக்காதீர்கள். எல்லாம், குட்கா, பான் மசாலாக்களுக்கு பதிலாக ‘ஹான்ஸ்,’கூல் லிப்’ என்பது போன்ற பெயர்களில் உலவிக்கொண்டிருக்கும் மோசமான அதே போதைச் சமாச்சாரங்கள்தான்.
புகையிலையை வைத்துத் தயாரிக்கப்படும் குட்கா, பான்மசாலாக்களுக்கு தமிழக அரசு 2013-ல் தடை விதித்தது. இருந்தாலும், இன்னமும் இந்த பொருட்கள் புதுப்புது பெயர்களில் ஆங்காங்கே புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இதை சட்டமன்றத்திலேயே ஆதாரத்துடன் நிரூபித்தனர் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள். அது பெரிய விவகாரமானது. தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மார்க்கெட்டில் எப்போதுமே கிராக்கி அதிகம். அந்த வகையில் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விற்கப்பட்ட இந்தப் பொட்டலங்கள் இப்போது ரகசியமாக 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன.
லாக்டவுன் பீரியடில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்த நேரத்திலேயே இந்தப் பொட்டலங்கள் தனி நபர்கள்மூலம் இன்னும் பலமடங்கு விலைக்கு விற்கப்பட்டன என்கிறார்கள்.
இப்போது தளர்வு காரணமாக பெட்டிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தும் பொட்டலங்களின் விலையைக் கடைக்காரர்கள் 2 மடங்குக்கு மேல் உயர்த்தி விட்டனராம். முன்பு சென்னையில் ரூ.40 விற்கப்பட்ட ஹான்ஸ் இப்போது ரூ.120-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட கூல் லிப் இப்போது ரூ.150-க்கும், விற்கப்படுகின்றனவாம்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஒரு புகையிலைப் பிரியர், ""இந்த சென்னையில் இந்த போதை வஸ்துக்களை யார் யார் விற்கிறார்கள் என்பது லோக்கல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு மாமூல் போய்விடுகிறது. போதாக்குறைக்கு, 2 மாதத்திற்கு ஒருமுறை ஒரு கேஸ். அவ்வளவுதான். அதனால் போலீஸார் இதையெல்லாம் மறைமுகமாக ஆசிர்வதிக்கிறார்கள். கொரோனா சிவப்பு மண்டலமான சென்னையில் மட்டும் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. அதனால், இதுபோன்ற வஸ்துகள்தான் இப்போதைக்கு என்னைப் போன்ற போதைப் பிரியர்களுக்கு ஒரே ஆறுதல்'' என்கிறார் மனம் திறந்து.
நாம் சென்னையில் களமிறங்கி விசாரித்த போது, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் இருந்து 100 மீ.தொலைவில் உள்ள பெட்டிக் கடையில் இந்தப் பொட்டலங்கள் விற்பதை அறியமுடிந்தது. அந்தத் தெருவில் கொரோனா நோயாளிகள் வீடு இருப்பதால், அந்தக் கடைக்கு அருகிலேயே பேரிகார்டு போட்டு 24 மணிநேரமும் காவல் பணியில் போலீஸார் இருக்கின்றனர். இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதேபோல், தேனாம்பேட்டையில் இருக்கும் சென்னை போலீஸ் உயரதிகாரி வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கடையிலும் இந்த ‘வியாபாரம்’ சக்கைப் போடு போடுகிறது. பாண்டி பஜார் காவல் நிலையத்தின் அருகேயும், இந்த போதைச் சமாச்சாரங்கள் பகிரங்கமாகவே விற்கப்படுகிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய தனிப்படைப் போலீஸார், இப்போது கொரோனா கண்காணிப்புப் பணியில் இருக்கின்றனர். அதனால் போதைப் பொருள் வியாபாரிகள் இதில் புகுந்து விளையாடுகிறார்கள்.
நாம் இந்த வியாபாரத்தில் மும்முரமாக இருக்கும் ஒரு பெட்டிக்கடைக்காரரிடமே இது குறித்துக் கேட்டபோது, ""சார், பெட்டிக்கடை வியாபாரத்தில் பெருசா லாபம் கிடைக்காது. ஆனால் இந்தப் பொட்டலத்தில் ஒரே நாளில் குறைஞ்சது 3000 ரூபாய் வரை லாபம் எடுத்திடலாம். இந்த பக்கம் வேலை பார்க்கும் இந்திக்காரப் பசங்கதான் என் ரெகுலர் கஸ்டமர்ஸ். அதனால போலீசை கரெக்ட்’ பண்ணி வச்சிகிட்டுதான் நான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்'' என்றார் மெதுவான குரலில்.
இந்த போதை வஸ்துக்கள் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை வட்டாரத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரைதான் விற்கப்படுகிறதாம். சென்னையில்தான் இதன் விலை, ஏகத்துக்கும் உயர்த்தி விற்கப்படுகிறதாம்.
தொண்டைப் புற்றுக்கு வழிவகுக்கும் இது போன்ற போதை பொருட்களுக்கு இங்கே யார் கடிவாளம் போடுவது?
-நாகேந்திரன்