.தி.மு.க.வில் இருந்தபோதே வடதுருவமாகவும் தென்துருவமாகவும் இருந்துவந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும். முன்னாள் எம்.எல்.ஏ. தங்க.தமிழ்ச்செல்வனும் தற்போது தேர்தல் களத்தில் போடி தொகுதியில் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.

bodi

அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலில் முதல் நபராக இடம்பெற்றது போலவே வேட்புமனு தாக்கல்செய்வதிலும் முதல்நபராக சென்று போடி தொகுதியில் மூன்றாவது முறையாக ஓ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார் இப்படி வேட்புமனு தாக்கல் செய்ததிலேயே ஓ.பி.எஸ். தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு இருபதுக்கும் மேற்பட்டவர்களுடன் சென்று மனுதாக்கல் செய்ததை காட்டமாக விமர்சித்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.

கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சர், துணைமுதல்வர், முதல்வர் என தலைமைப் பதவிகளில் ஓ.பி.எஸ். இருந்தும்கூட தனது தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யக்கூட ஆர்வம் காட்டவில்லை. தொகுதிப் பக்கமும் சரிவர தலை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதியில் பரவலாக எதிரொலித்து வருகிறது. இத்தொகுதியில் 2011-ல் ஓ.பி.எஸ். போட்டியிடும் போதே பி.டி. ஆர். கால்வாயில் இருந்து மடை கட்டி அப்பகுதியிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கக்கூடிய விவசாய மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதை இதுவரை நிறைவேற்றிக் கொடுக்காததால் அப்பகுதியிலுள்ள விவசாய மக்கள் அவர்மேல் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Advertisment

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பதினெட்டாம் கால்வாய் திட்டத்தின் மூலம் போடி வரை அப்பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவந்து முறைப்படுத்திக் கொடுக்கிறேன் என மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அதையும் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. காய்கறி மாம்பழங்களுக்கு குளிர்சாதன வசதி, அரசு நெல் கொள்முதல் நிலையம், போடி டு குரங்கணி ஸ்டேஷன் மலைக்கிராம மக்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளை அடுக்கினாரே தவிர, அதை நிறைவேற்றிக் கொடுக்க ஆர்வம் காட்டாததால் மலைக்கிராம மக்களின் கோபமும் ஓ.பி.எஸ். மேல் திரும்பியுள்ளது.

இத்தொகுதியி லுள்ள தர்மபுரி, அய்யம்பட்டி, ஜங்கால் பட்டி, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் உள்பட பல பகுதிகளில் ஓ.பி.எஸ். சமூக மக்கள் பெரும்பான்மையாக வசித்துவருகிறார்கள். அவர்களின் வாக்கு வங்கி மூலம்தான் கடந்த இரண்டு முறையும் ஓ.பி.எஸ். வெற்றி பெற்றுவந்தார். இந்த சமூக மக்கள் நீண்ட நாட்களாக எம்.பி.சி. பிரிவில் இடம்கேட்டு கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதை செய்து கொடுக்கக்கூட ஓபிஎஸ் ஆர்வம்காட்டவில்லை. ஆனால் மற்ற பல மாவட்டங்களில் இந்த சமூகத்தினருக்கு எம்.பி.சி. சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இம்முறை அவர்களும் அதிருப்தியில் இருந்துவருகிறார்கள்.

bodi

Advertisment

நகர, ஒன்றியப் பொறுப்பிலுள்ள ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்கள் சிலர்தான் கடந்த பத்து வருடங்களாக அவர்மூலம் பயனடைந்து இருக்கிறார்களே தவிர பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் ஓ.பி.எஸ்.ஸால் எந்த ஒரு பயனும் அடையாததால் கட்சிக்காரர்கள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டுகிறார்கள். இருந்தும் தனது பணபலத்தையும் அதிகார பலத்தையும் வைத்து தேர்தலில் வெற்றிபெறலாமென நினைக்கிறார்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதென நினைத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போடி ஒன்றியச் செயலாளர் பன்னீர் செல்வம் திடீரென ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்திருக்கிறார். மக்களையும் கட்சிக்காரர்களையும் பணத்தாலடித்து பலத்தைக் காட்ட ஓ.பி.எஸ். தயாராகி வருவதாக சொந்தக் கட்சியிலேயே முணுமுணுக்கிறார்கள்.

தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை எதிர்த்து தங்க.தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். புதிய கட்சி, புதிய களம் என்பதால் கட்சிக்காரர்களை அரவணைத்துப் போக டி.டி.எஸ். தயாராகி வருகிறார். அதோடு கடந்த இரண்டு முறை ஓ.பி.எஸ்.ஸிடம் தோல்வியைத் தழுவிய தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற அதிருப்தியும் அந்த சமூக மக்களிடமும் பெரும்பாலான கட்சிக்காரர் களிடமும் இருந்துவருகிறது. அதைச் சரிசெய்ய தேர்தல் களத்தில் லட்சுமணனை பக்கபலமாக வைத்துக்கொள்ள டி.டி.எஸ். தயாராகிவருகிறார். முதற்கட்டமாக போடிக்கு வந்த டி.டி.எஸ்.ஸுக்கு லட்சுமணன் தலைமையிலான கட்சிக்காரர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.

தொகுதியிலுள்ள சீர்மரபினர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவருவது தங்க.தமிழ்ச்செல்வனுக்கு சாதகமானதே.

போடி தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கியிருக்கும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் செல்வாக்கையும் பணத்தின் வீச்சையும் நம்பியே தேர்தல் களத்தில் பவனி வருகிறார். ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து களம் இறங்கியுள்ள தங்க.தமிழ்ச்செல்வனோ கட்சிக்காரர்களை அரவணைப்பதுடன், எதுவெல்லாம் ஆளும் கட்சிக்கு சறுக்கிவிடுமென அறிந்து அதனை தனது பலமாக்கி களமிறங்கி இருப்பதாலும் போடி தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

ஒருவர் முகத்துக்கெதிரே ஒருவர் விரல் நீட்டும் இருவரில், யார் விரல் யார் கண்ணைக் குத்தப் போகிறதென பொறுத்திருந்து பார்க்கலாம்.