முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த சுமிதா நகர்மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நகர் மன்றத் தலைவராக இருந்த ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா. நகராட்சிக்குப் பின்புறம் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லும் சாலையைத் தடுத்துச் சுவர் எழுப்பி இருந்தார். புதிதாகப் பொறுப்புக்கு வந்துள்ள நகர்மன்றத் தலைவர் சுமிதாவின் உத்தரவுப்படி அந்த சுவர், ஜே.சி.பி. யால் இடிக்கப்பட்டு, அந்த சாலை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவரது அதிரடியால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

oraja

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சுமிதா கூறுகையில், "நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக, அந்த கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு நடத்தும் சமூக மக்களிடம் எம்.எல்.ஏ. சரவணகுமாருடன் இணைந்து வாக்குச் சேகரிக்கச் சென்றபோது தடுப்புச்சுவர் பிரச்சனை குறித்து கூறினார்கள். நகராட்சி அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலுக்குச் செல்லும் பாதையை, சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாகக்கூறி கடந்த நகர்மன்றத் தலைவர் ஓ.ராஜா, குறுக்கே சுவர் எழுப்பித் தடுத்ததால், கடந்த பத்தாண்டு களாகக் கோவிலுக்குச் சுற்றித்தான் செல்வதாகவும், சாமி ஊர்வலமும் நடக்கவில்லை என்றும் கூறினார்கள். எனவே அந்த சுவரை அகற்றுவதாக உறுதியளித்தால் எங்கள் சமுதாயத் தினரின் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களுக்கு உறுதியளித்தபடியே, தேர்தலில் வென்று பதவியேற்றதும் மக்களின் முதல் கோரிக்கையாக அந்தத் தடுப்புச்சுவரை இடித்துத் தள்ளிவிட்டு சாலையை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் கோவில் திருவிழா நடக்க விருப்பதால் ஆக்கிரமிப்பை அகற்றியது மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் விரைவில் மின்கம்பங்களையும் போட்டுத்தர உள்ளோம்'' என்றார்.

Advertisment

oraja

இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமாரிடம் கேட்டபோது, "கடந்த பத்து வருடமாக அ.தி.மு.க. ஆட்சியின்போது ஓ.பி.எஸ். குடும்பத்தினர் பெரியகுளம் நகரில் தனிநபர் நலனுக்காகப் பல்வேறு ஆக்கிரமிப்புகளை அனுமதித்துள்ளனர். மூன்றாம் தென்றல் அருகே ஒரு தனிநபரின் நலனுக்காக டிரான்ஸ்பார்மரை போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்துக் கொடுத்தனர். அதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி உடனடியாக அந்த டிரான்ஸ்பரை இடம் மாற்றினோம். இதுபோல் நகரில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கூடிய விரைவில் அகற்றப்படும்'' என்றார் உறுதியாக.

Advertisment