ரசியல் உலகில் பரபரப் பையும் சூட்டையும் கிளம்பியிருக்கிறது தென்காசி மாவட்டத்தின் கடையம் ஒன்றிய சேர்மனான செல்லம்மாளின் ராஜினாமா. ஏனெனில் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரம் காய்வதற்குள்ளாக அவர் ராஜினாமா செய்தது தான் இந்த அதிர்வலைகளுக்கு அடிப்படை என்றாலும் ட்விஸ்ட் க்ளைமேக்சுகளுக்குப் பஞ்சமே இல்லை.

சேர்மன் பதவி பட்டியலின சமூகத்தவர் களுக்கே என ஒதுக்கப்பட்ட 17 வார்டுகளைக் கொண்ட கடையம் யூனியனில், தி.மு.க. 11 இடங் களையும் கூட்டணியான காங்கிரஸ் ஒரு இடம், மீதமுள்ள 5 இடங்களை அ.தி.மு.க.வும் கைப்பற்றி யுள்ளது. தி.மு.க.வின் தலைமை மற்றும் தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். போன்றவர்களால் சேர்மன் வேட்பாளர் ஜெயக் குமார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட் டது. அதனால் பேச்சுப்படி அனைத்து தி.மு.க. வேட்பாளர்களின் தேர்தல் செலவு ப்ளஸ் வெற்றிபெற்ற பின், தேவையான கவுன்சிலர்களின் போனஸ் தொகை என கடன்பட்டு அள்ளி விட்டிருக்கிறார் ஜெயக்குமார்.

dmkchairman

தேர்தல் முடிவில் 10-ம் வார்டில் போட்டி யிட்ட ஜெயக்குமாரும் 13-ம் வார்டில் களம் கண்ட தி.முக.வின் செல்லம்மாளும் வெற்றி பெற்ற 11 தி.மு.க. கவுன்சிலர்களில் அடக்கம். அத்துடன் கூட்டணி யான காங்கிரஸ் ஒன்று என 12 கவுன்சிலர்கள் தி.மு.க. சைடிலான பலம். ஆனாலும் வெற்றிக்குப் பின்பு நடத்தப்படுகிற "கவ னிப்புகள்'தானே காரியத்தைக் கைகூட வைக்கும். 12 கவுன் சிலர்களின் தேவையைப் பூர்த்தி செய்கிற காரியங் களும் நடந்தேறியிருக்கின்றன. அவை தேர்தல் பொறுப்பாளர்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒ.செ. ஆகியோர்களின் முன்னிலையில் சேர்மன் வேட்பாளர் ஜெயக்குமாரிடமிருந்து பெறப்பட்ட தொகையைக் கொண்டு, 12 கவுன்சிலர்களையும் வகைப்படுத்தி ஒரு பிரிவு கவுன்சிலர்களுக்கு ’8’எல், மற்றொரு பிரிவு கவுன்சிலர்களுக்கு ’6’எல் என 12 கவுன்சிலர்களுக்கும் லம்ப் அமௌண்ட்கள் கைமாற்றப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, ஒப்பந்தப்படி மார்ஜின் தொகையைப் பெற்ற அனை வரும் சேர்மன் வேட்பாளரான ஜெயக்குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாம். போனஸ் தொகையைப் பெற்றவர்களில் தற்போது ராஜினாமா செய்த செல்லம்மாளும் அடக்கம்.

Advertisment

கவனிப்புகள் இத்தோடு முடிந்து விடவில்லை. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாளே தொகை சப்ளை ஃபார்மாலிட்டி முடிந்த கையோடு, செல்லம்மாள் உட்பட 12 கவுன்சிலர்களையும் அள்ளிக்கொண்டு கொடைக்கானல் சென்ற ஜெயக்குமார், அங்கு அவர்களை உணவு, உடைகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் பத்து நாட்களாக நீக்கமற கவனித்திருக்கிறார். இந்த வகையில் அவருக்கு ஒன்றரை "சி'’வரை காலி யாகியிருக்கிறதாம்.

இடைப்பட்ட இந்த நாட்களில் கடையம் தி.மு.க. ஒ.செ.வான குமார், ட்விஸ்ட்டாக கட்சியால் அறிவிக்கப்பட்ட சேர்மன் வேட்பாளர் ஜெயக்குமாருக்குப் போட்டியாக தன் சார்பில், தனது தோட்டத்தில் வேலை செய்கிற முருகன் என்பவரின் மனைவியும், வெற்றிபெற்று கொடைக்கானல் கவனிப்பி லிருந்தவருமான செல்லம்மாளை சேர்மானாக்கு வதில் காய்களை நகர்த்தியிருக்கிறார்.

கொடைக்கானல் கவனிப்பிலிருந்த 12 கவுன்சிலர்களையும் தொடர்புகொண்டு பேசிய ஒ.செ. குமாரின் தம்பியான சிங்கத்துரை, சேர்மன் தேர்வில் செல்லம்மாளுக்கு வாக்களிக்கும்படி அவர் களைப் பிரைய்ன் வாஷ் செய்ததில் 8 கவுன்சிலர்கள் ஒ.செ. வசமானார்கள். சேர்மன் தேர்தல் நாளான 22 அன்று காலை மீதமுள்ள 5 அ.தி.மு.க. கவுன் சிலர்களிடமும் பேசிய சிங்கத்துரை, தி.மு.க.வின் செல்லமாளுக்கு வாக்களித்தால் அவர் சேர்மனாகி விடுவார். அதற்கு பிரதிபலனாக அ.தி.மு.க.வில் ஒருவரை துணைத் தலைவராக்கிவிடுவதாகவும் ஒப்பந்தப் பேச்சுக்கள் பரிமாறியிருக்கின்றன. அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்களும் உடன்பட்டிருக்கிறார்களாம். ஒ.செ. குமாரின் கட்சிக்கு எதிரான இந்த திரைமறைவு காய் நகர்த்தல்கள் அனைத்தையும் மா.செ. சிவபத்மநாபனின் கவனத்திற்கு ஜெயக் குமார் கொண்டு போக, அவரும் "அப்படி நடக்காது பார்த்துக் கொள்ளலாம்' என்றிருக்கிறார்.

Advertisment

dd

இதனிடையே சேர்மன் தேர்வுதினத்தின் போது கொடைக்கானலிலிருந்து வந்திருந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் அரங்கத் திற்குள்ளே சென்றதும், முறைப்படி கட்சியால் அறிவிக்கப்பட்ட தி.மு.க.வின் கவுன்சிலர் ஜெயக்குமார் சேர்மன் தேர்வுக்கான தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய, தொடர்ந்து போட்டி யாக தி.மு.க.வின் செல்லம்மாளும் வேட்பு மனுத் தாக்கல் செய்தது கண்டு அதிர்ந்தார். ஆனாலும் ஜெயக்குமார் நம்பிக்கையோடிருந்திருக்கிறார். வாக்கெடுப்பு முடிவில் செல்லம்மாளுக்கு 13 வாக்குகள் கிடைக்க, ஜெயக்குமாருக்கு 4 வாக்குகள் மட்டுமே கிடைத்த நிலையில்... தி.மு.க.வின் செல்லம்மாள் சேர்மனாக அறிவிக்கப்பட்டார். மாலையில் துணைத்தலைவர் தேர்தலில் பேச்சுப்படி வாக்களித்த அ.தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவரைத் துணைத் தலைவராக்காமல் அ.தி.மு.க.வினருக்கு நெய் அல்வாவைக் கொடுத்துவிட்டு தி.மு.க.வின் மகேஷ் மாயவனை துணைத் தலைவராக்கி விட்டனர்.

கனத்த செலவுகளைச் செய்தும், தான் சேர்மனாக முடியாமல் போனதையும், தான் ஒன்றரைக் கோடி வரை செலவு செய்து கடன் பட்டு நிற்பதையும் மா.செ. சிவபத்மநாபனிடம் தெரிவித்துக் கண் கலங்கியிருக் கிறார் ஜெயக்குமார். நடந்த உள்ளடிகளையும் அறிவிக்கப் பட்ட கட்சி வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு அ.தி. மு.க. ஆதரவு கவுன்சிலர் களின் வாக்கால் செல்லம்மாள் சேர்மன் ஆனதையும் ஜெயக்குமா ருடன் அறிவாலயம் சென்ற மா.செ. சிவபத்மநாபன் கட்சித் தலைமையிடம் முறையிட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன கட்சித் தலைமை, ஒழுங்கு நடவடிக்கையாக ஒ.செ. குமாரை பதவியிலிருந்து தூக்கியிருக்கிறது. ஒ.செ. குமாரின் பொறுப்பு, தலைமையால் பறிக்கப்பட்ட தால், மீண்டும் அவரை ஒ.செ.பொறுப்பில் அமர்த்த வேண்டு மென்று மா.செ. சிவபத்மநாபனிடம் சேர்மன் செல்லம்மாள் முறையிட, மா.செ.வோ "நீங்க சேர்மனாயிட்டீக. கட்சி வேட் பாளர் ஒன்றரைக் கோடிகளைச் செலவு பண்ணிட்டார். அவர் செலவழிச்சதில், உங்களுக்கான செலவு உட்பட ஒரு கோடி பத்து லட்சத்த அவருக்குக் குடுங்க... இல்ல உங்க சேர்மன் பதவிய ராஜினமா செய்யுங்க'' என்றதான பேச்சுக்களும் ஓடியிருக்கின்றன.

இதையடுத்தே தற்போதைய சூழ்நிலையில் தன்னுடைய சேர்மன் பதவியை ராஜினாமா செய்வதாக தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் கடிதத்தை செல்லம்மாள் கொடுக்க... அது அரசியல் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. ராஜினாமா பற்றி செல்லம்மாளிடம் நாம் கேட்டபோது, அவர் கருத்து சொல்ல மறுத்துக் கிளம்பினார்.

உடன் வந்த அவரது கணவரான முருகனிடம் நாம் பேசியபோது, "உள் கட்சியில பிரச்சினை. வேட்பாளர் ஜெயக்குமார் மேலான அதிருப்தியால மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் கூடிப் பேசி எங்கள சேர்மன் வேட்பாளராக்கி வாக்களித்தாங்க. பின்னால நாங்க கட்சிக் கட்டுப்பாட்ட மீறிட்டோம்னு சொன்னதால பதவிய ராஜினாமா பண்ணிட் டோம். எங்க தரப்பு நியாயத்த தலைவர்ட்ட சொல்லுவோம். அதுக்கு வாய்ப்பு தருவாகன்னு நம்புறோம்'' என்றார்.

இந்தநிலையில்... "செலவான ஒரு கோடி பத்து லட்சத்தக் குடுத்திருங்கன்னு மா.செ. சொன்னதால, முடியாம பதவிய ராஜினாமா செய்தேன்' என்று பேசிய செல்லம்மாளின் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.

இது குறித்து நாம் மா.செ. சிவபத்மநாபனிடம் பேசியதில்... "அதிகாரப்பூர்வமா தலைமை ஒரு வேட்பாளரை அறிவிச்சி, அவர் ஒரு கோடி ரூவா செலவு பண்ணியிருக்கிறார். அவருக்கு எதிரா இவங்க அ.தி.மு.க.வோட கூட்டணி போட்டு ஜெயிக்காங்க. அவரு 17 பேருக்கு செலவு பண்ணுன தொகைய அவங்க குடுக்கணும்லன்னு ஜெயக்குமார் கேட்டாரு. அவங்க அ.தி.மு.க.வோட கூட்டணி வச்சதால, காரணமான குமாரை ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்துட்டாங்க. ஒன்றியச் செயலாளர் குமார்தான், செல்லம்மாளை சேர்மனாக்க இந்த வேலைய பண்ணிட்டாரு. அவர்தான், "ஒரு கோடி பத்து லட்சத்தக் குடு... இல்ல... சேர்மன் பதவிய ராஜினாமா பண்ணு'ன்னு சொன்னது'' என்றார்.

உள்ளாட்சி என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். அது பணக் கரையான்களால் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகிறது.