தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் அமைச்சரவையை பங்கு போட்டுக் கொள்வதில் பா.ஜ.க.வுக்கும், என்.ஆர்.காங்கிரசுக்குமான இழுபறியால் புதுச்சேரியில் குழப்பம் நிலவுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10, பா.ஜ.க 6 என தேசிய ஜனநாயக கூட்டணி 16 தொகுதி களிலும், காங்கிரஸ் 2, தி.மு.க 6 என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர். 6 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில்... முதல்வர் ரங்கசாமி, துணை முதல்வர் நமச்சிவாயம் என்ற "டீலிங்' அடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பா.ஜ.க. ஆதரவளித்தது.

pondy

இந்த "டீலிங்'குக்கு அரைகுறை மனதோடு சம்மதித்த ரங்கசாமி, அவசர அவசரமாக கடந்த மாதம் 07-ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சில நாட்களில் புதுச்சேரி திரும்பியவர் மேலும் சில நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்தார்.

Advertisment

இதனால் சபாநாயகர் தேர்வு, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது. ஒருவழியாக லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ.வை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்ததையடுத்து அவருக்கு துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர ராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, அதனைத் தொடர்ந்து 20 நாட்கள் கழித்து கடந்த 26-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க, பா.ஜ.க. மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பிரமணம் எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்களான ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. ஆனாலும் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவை இன்னும் பொறுப்பேற்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே அமைச் சர்கள், பதவிகளைப் பங்கு பிரித்துக்கொள்வதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வை யாளர்களிடம் விசாரித்ததில், "துணை முதலமைச்சர் பதவி இல்லை என்பதில் ரங்கசாமி உறுதியாக இருப்பதால் வேறுவழியின்றி 3 அமைச்சர்கள், சபாநாயகர், முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜக. நிர்ப்பந்திக்கிறது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறது. ஆனால் ரங்கசாமி தற்போது 5 அமைச்சர்கள் உள்ள நிலையில் 6 அமைச்சர்களுக்கு அனுமதி கொடுத்தால் 3 அமைச்சர்கள் கொடுக்கலாம் என்றும், பாராளுமன்றச் செயலாளர், துணை சபாநாயகர் பதவி ஒதுக்கலாம் என்றும் நினைக்கிறார். ஆனால் சபாநாயகர் பதவியை தனது கட்சியை சேர்ந்த தேனீ ஜெயக்குமாருக்கு தரவேண்டும் என்பதிலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்க முடியாது என்பதிலும் தீர்மானமாக இருக்கிறார்.

Advertisment

pondy

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பொருத்தவரை, தேர்தல் நேரத்தில் சுயேச்சை வேட்பாளர்கள், சில என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மறைமுகமாக பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். அதற்கு உபகாரமாக மல்லாடிக்கு பதவி பெற்றுத்தருவதில் ரங்கசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால் பா.ஜ.க., மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்பவரை நிறுத்தப்போவதாக முடிவு எடுத்திருந்தது. ஆனால் ரங்கசாமி இப்படி ஒவ்வொன்றிலும் விடாப்பிடியாக இருப்பதால் பா.ஜ.க. தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால்தான் ஏற்கனவே பா.ஜ.க உறுப்பினர்கள் 6 பேர் உள்ள நிலையில், 3 நியமன உறுப்பினர்களை நியமித்ததோடு மட்டுமல்லாமல், 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் தன் பக்கம் இழுத்து தமது பலத்தை 12 ஆக உயர்த்தியுள்ளது பா.ஜ.க.. மேலும் சில சுயேச்சைகளையும், தி.மு.க அல்லது என்.ஆர் காங்கிரஸிலிருந்தே சிலரையும் இழுத்து தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்ற எச்சரிக்கையையும் ரங்கசாமிக்கு விடுத்திருக்கிறது.

அதன்படி நமச்சிவாயம் முதலமைச்சர், ஜான்குமார் சுகாதாரத்துறை, கல்யாணசுந்தரம் வருவாய்த்துறை, சாய்.சரவணகுமார் கல்வித்துறை, ஏம்பலம் செல்வம் சமூக நலத்துறை, அங்காளன் சபாநாயகர், சிவசங்கரன் துணை சபாநாயகர், அசோக்பாபு அரசு கொறடா, விவிலியன் ரிச்சர்ட்ஸ் முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் என தமது ஆட்சிக்கான பட்டியலை தயார் செய்துள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. உருளையன் பேட்டை சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, அமைச்சர் பதவி கொடுத்தால் பா.ஜ.க.வில் ஐக்கியமாகத் தயாராக இருப்பதாக தகவல் உலவுகிறது” என்கின்றனர்

இதனிடையே பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அழைப்பின்பேரில் நமச்சிவாயமும், ஏம்பலம் செல்வமும் டெல்லி சென்று நட்டாவை யும், அமைப்புச் செயலாளர் சந்தோஷையும் சந்தித்து அமைச்சரவைப் பொறுப்பை ஏற்பதில் நிலவும் காலதாமதம், ரங்கசாமியின் பிடிவாதம் போன்றவை குறித்து பேசியுள்ளனர். நட்டா, அமித்ஷா, மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி ஆகியோர் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் பேசியதற்கு, ‘"முதல்வர் பதவி ஏற்புக்கு முன்னதாக நடந்த பேச்சுவார்த்தை யில் ரங்கசாமி அமைச்சர் பதவிகளை பாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இதனை நம்பி ஆதரவு கொடுத்தோம். தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமித்ததில் அதிருப்தியடைந்துள்ளார். இதனால் அமைச்ச ரவை தேர்வு காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்படும்''’என தெரிவித்துள்ளார்.

ஆனால் ரங்கசாமியோ, "பா.ஜ.க.வுடனான கூட்டணி வலிந்து தன் மீது திணிக்கப்பட்டது என்றும், தனித்துப் போட்டியிருந்தால் ஒற்றைச் சீட்டுக்குக் கூட பா.ஜ.க. ததிங்கிணத்தோம் போட்டிருக்கும் என்றும், தம்மையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வெற்றிபெற்றதோடு, நியமன எம்.எல்.ஏ.க்கள் முதல் அமைச்சர் நியமனம் வரை அனைத்தையும் பா.ஜ.க. வற்புறுத்துவது சரியான அணுகுமுறையல்ல' என கருதுகிறார். கொஞ்சம் முன்னபின்ன ஆனாலும் பரவாயில்லை, அவர்கள் இழுத்த இழுப்புக்கு போய் விடக்கூடாதென நினைத்துதான் ஆரம்பத்திலே விறைப்பாக நிற்கிறார்.

பல மாநிலங்களில் தமக்கு ஒத்துவராத ஆட்சியாளர்களுக்கு ஆட்டம் காட்டிய பா.ஜ.க.வுக்கு நன்றாக ஆட்டம் காட்டுகிறார் ரங்கசாமி. அதேசமயம், நாராயணசாமி தன்னை ஏமாற்றியதைப் போல மாமனார் ரங்கசாமியும் தன்னை போட்டியாகக் கருதி பழி வாங்குகிறாரே என ஆதங்கப்படுகிறார் நமச்சிவாயம். இந்த ஆடுபுலி ஆட்டம் எப்போது முடிவுக்கு வருமோ… என்கிறனர்.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 29-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார். மேலும் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை நடத்த வேண்டும்’ என்றும் மோடி பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. புதுவை மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. நம்மிடம், “"புதுச்சேரிக்கு தேர்தல் நடந்த அதேநாளில் தேர்தல் நடந்த மாநிலங்களிலெல்லாம் ஆட்சியும், அமைச்சர்களும் பொறுப்பேற்று கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒருமாதம் ஆகிறது... மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் உயிர் பயத்தோடு வாழ்கிறார்கள். முதலமைச்சர் வெளியில் வரவே இல்லை. அமைச்சரவை அமைக்கப்படாததால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இன்னமும் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பது போல்தான் இருக்கிறது. இவர்களின் ஆடு புலி ஆட்டத்தால் புதுச்சேரி மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்''’என்றார்.

"மத்திய பா.ஜ.க. அரசின் சர்வாதிகார போக்கிற்கு வளைந்து கொடுக்காமல் புதுச்சேரியின் தனித்தன்மையை ரங்கசாமி பாதுகாக்க வேண்டும் என்றும், கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிபோல போட்டி போட்டுக்கொண்டு மக்கள் பணிகள் நடக்காமல் இருந்துவிடக்கூடாதே' என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.