அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள "பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, சேலத்தைச் சேர்ந்த நக்கீரன் வாசகர் ஒருவர் "ரெண்டு இடத்துல நம்ம புக்கை காட்டுறாங்க...'’ எனச் சொன்னார். மேலும் அவர், ""க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்ல ஜோதிகா, நூறு பெண்களைச் சீரழித்தவன்கூட நம்ம நாட்டுல தைரியமா வெளியே நடமாட முடியுதுன்னு நொறுங்கிப் போயி கண்ணீர் வடிப்பாங்க. எங்களுக்கோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் புலனாய்வு செய்து, ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டு, நக்கீரன் காலம் காலமாகப் போராடி வருவதும், நக்கீரனில் நாங்கள் படித்த செய்திகளும்தான் மனக்கண் முன்னே விரிந்தது.
இப்போதும்கூட பொள்ளாச்சி பாலியல் குற்றங்களாகட்டும், 90-க்கும் மேற்பட்ட பெண்களை நாகர்கோவில் காசி வேட்டையாடியதாகட்டும், தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு, அந்தக் கொடூரன்களுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன், குற்றவாளிகளைத் தோலுரித்து வருவது, நக்கீரன் மட்டுமே! அந்த வகையில் வாசகர்களாகிய எங்களுக்குப் பெருமிதமே!''’என்று சிலாகித்துப் பேசினார்.
நமக்கோ, அத்திரைப்படத்தின் இறுதியில் போடும் டைட்டில் கார்டில் இடம்பெற்ற "உடலை சிதைத்த கொடூரன்! உள்ளத்தை சிதைத்த காக்கிகள்!' என்னும் தலைப்பில், எட்டு வருடங்களுக்கு முன் நக்கீரனில் வெளிவந்த செய்தியின் பக்கங்கள் ‘ரீவைண்ட்’ ஆனது. ஏனென்றால், "பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் கருவும்கூட, இந்தத் தலைப்போடு ஒத்துப்போவதுதான்! வாசகர்களுக்காக அந்தச் செய்தியின் சுருக்கம் இதோ-
சேலம், கன்னங்குறிச்சி, பங்களா தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவன், பள்ளியில் தனது மகளோடு 8-வது வகுப்பு படிக்கும் சிறுமியிடம், “இது என்ன ஸ்கூல் ட்ரெஸ்ல இருக்க.. உனக்கு எடுப்பா இல்ல.. உனக்கு வேற ட்ரெஸ் தர்றேன்...’ என்று சொல்லித்தான், முதலில் அத்துமீறினான். அந்த மிருகம், அடுத்தடுத்த நாட்களிலும் அந்தச் சிறுமியைத் துன்புறுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்லி அழுதாள். உடனே, அச்சிறுமியை அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார், அவளது அம்மா.
அங்கிருந்த எஸ்.ஐ. ""பத்தாயிரம் பணம் கொடு... கேஸ் போட்டு அந்த நாய உள்ள தள்ளிடறேன்...''’என்று கேட்க, ""அவ்ளோ பணத்துக்கு எங்கம்மா போறது? நானே கூலி வேலை செய்றவ...''’ என்று அழுதார், சிறுமியின் தாய். இதைக் கேட்டு ஆத்திரமான இன்ஸ்பெக்டர் ஜெயம் ""சொல்லுறத செய்யமாட்டியா? ஒரு வாரம் அவன்கிட்ட சொகமா இருக்க அனுப்பி வச்சிட்டு இப்ப என்ன இங்க ஒப்பாரி?'' என்று கேவலமாகப் பேசினார். ""இப்படியெல்லாம் பேசாதீங்கம்மா...''’ என்று அந்த தாய் கெஞ்ச, அவர் முன்பாகவே மகளிடம் அந்த இன்ஸ்பெக்டர், விசாரணை என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் கேள்விகளைக் கேட்டு கூனிக்குறுகச் செய்துவிட்டு, ""விசாரணைன்னா அப்படித்தான்டி இருக்கும்...'' என்று மிரட்டலாகப் பேசினார்.
காவல்துறையினரிடம் நேர்மை இல்லாததால், "எங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தீக்குளித்து உயிரை விடுவோம்...' என்று போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், சிறுமியின் தாய். அவருக்கு சட்ட உதவி அளித்த மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் மாயன்“""காக்கிகள் லஞ்சப் பணத்துக்கு விலை போய்விட்டார்கள். இதைச் சும்மா விடமாட்டோம்''’ என்றார்.
ஆறு வருடங்களாக, விடாமல் அந்தத் தாய் நடத்திய கண்ணீர்ப் போராட்டம், 2018-ல் முடிவுக்கு வந்தது. சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்த அவ்வழக்கில், ஏழுமலைக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. அவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார், நீதிபதி விஜயகுமாரி.
"பொன்மகள் வந்தாள்' நிழலென்றாலும், நிஜத்தின் பிரதிபலிப்பே! இதுபோன்ற சமூக அவலங்கள், திரைப்படங்களாக உருவாகும்போது, நீதியின் பக்கம் நின்று போராடி, நக்கீரன் பதிவு செய்துள்ள வரலாற்றின் பக்கங்கள், தானாகவே புரட்டப்படுகின்றன.
-ராம்கி