போரம் சத்தியா!
2 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் குன்றிய தாயோடு, கிழிந்த மேற்கூரையுடனான மண்குடிசையில் தங்கியபடி, படிக்கப் போகவேண்டிய வயதில், வயல் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார் போரம் சத்தியா. இன்று அவர் புதுமாடி வீட்டிற்குள் மகிழ்ச்சியோடு அடியெடுத்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சத்தியா. தந்தையில்லாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் 10 அடி நீளம் 7 அடி அகலம்கொண்ட தென்னங்கீற்றுகள் மக்கியுதிர்ந்த, மழையில் கரைந்த மண்குடிசையில் வசித்துக் கொண்டிருந்தார். தனக்கும் தன் தாயாருக்குமான தேவைகளை பூர்த்திசெய்ய வீட்டு வேலை தொடங்கி விடுமுறை நாட்களில் விவசாயக் கூ-வேலைகளுக்கும் சென்றுகொண்டிருந்தார்.
மழை பெய்தால் படுக்க வசதியில்லை என்பதால் தன் தாயோடு பக்கத்து வீட்டில் இரவில் தூக்கம். பக-ல் தோட்ட வேலை. இதனாலேயே +2 வில் மதிப்பெண் குறைந்தாலும் மேலும் படிக்கணும்,… அரசு வேலைக்குப் போகணும் என்ற லட்சியத்தோடு போராடிக்கொண்டிருந்தார். அதற்கும் முன்பாக, கதவு வச்ச ஒரு சின்ன வீடு வேணும் என்ற அவரது ஆசையை மக்கள் பாதை மூலம் அறிந்து மாணவி சத்தியாவின் கோரிக்கைகளையும், வறுமையையும் அப்போதைய புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டுசென்றோம். இந்த விவரங்கள் நக்கீரன் இதழில் வெளிவந்ததோடு, இணையத்தில் செய்தியாகவும், வீடியோவாக வும் கடந்த 2020 செப்டம்பர் 3-ஆம் தேதி வெளிவந்தது.
செய்திகள் வெளியான சில மணி நேரத்தில் நக்கீரன் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து போன் கால்கள்...…உதவிசெய்ய நக்கீரன் வாசகர்கள் முன்வந்தனர். அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவில் வருவாய்த் துறையினர் சத்தியா குடியிருக்கும் மண் குடிசைக்குச் சென்று ஆய்வு செய்து மாற்று இடத்தில் குடிமனைப் பட்டாவுக்கான இடம் தேர்வுசெய்தனர்.
நக்கீரன் வீடியோ வைப் பார்த்து கண்கலங்கிய அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், போரம் கிராமத்திற்கு நேரில் சென்று மாணவிக்குத் தைரியம் சொன்னதோடு சில அடிப் படை உதவிகளும் செய்து, தொடர்ந்து கல்லூரி படிப்பிற்கும் போட்டித் தேர்வுக்கும் படிக்க உறுதியளித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களை வழங்கினார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சென்னையிலுள்ள பிரபலமான வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயில்வதற்கான ஏற்பாடுகளுக்கும் உறுதி கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மாவட்ட மனநல திட்ட அலுவலர் மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மாணவிக்கு ஆலோசனைகள் வழங்கியதோடு, அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துவந்து தங்கவைத்து சிகிச்சையளித்தார்.
இந்த நிலையில் சத்தியாவை தனது அலுவலகத்திற்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, வீட்டுமனைப்பட்டா வழங்கிய தோடு பசுமை வீடும் ஒதுக்கினார். தொடர்ந்து சத்தியாவிடம்... "உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று நம்பிக்கையளித்து, படிக்க அரசு மகளிர் கல்லூரியில் இடமும் ஒதுக்கினார். அரசு ஒதுக்கிய நிதியில் பசுமை வீடு கட்டுவது சிரமம் என்ற நிலையில்... பெருங்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கரிடம், சத்தியாவின் வீட்டை முழுமையாகக் கட்டிக் கொடுக்க உதவிகள் கேட்டோம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, சத்தியாவின் வீட்டை நானே கட்டிக் கொடுக்கிறேன் என்றவர், பசுமை வீடு நிதி மற்றும் நக்கீரன் வாசகர்கள் வழங்கிய ரூ.1.5 லட்சம் ரூபாயோடு, தன் பங்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்து ரூ.6 லட்சம் மதிப்பில் 400 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் அழகான வீட்டை கட்டிக் கொடுத் திருக்கிறார்.
வீட்டு வேலைகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிய வீட்டில் ஆனந்தக் கண்ணீரோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் சத்தியா. புதுமனை புகுவிழாவிற்கு தனக்கு உதவிய பலரையும் அழைக்க முடியாவிட்டாலும் அவர்களின் வாழ்த்துகளோடு புதுவீட்டுக்குச் சென்றுள்ளார்.
மகிழ்வோடு இருந்த மாணவி சத்தியா கூறும்போது... "மக்கள் பாதை மூலம் தகவலறிந்து நக்கீரன் என் குடும்பச் சூழ்நிலையை வெளிக்கொண்டு வந்தது. அதன்பிறகு எனக்காக வீட்டுமனைப் பட்டா, வீடு, படிக்க சீட், விடுதி, அம்மாவுக்கு சிகிச்சை அனைத்தும் கிடைத்தது. நக்கீரன் செய்தி பார்த்து ஏராளமானவர்கள் என்னிடம் ஆறுதலாகப் பேசி உதவிகளும் செய்தார்கள். நான் நினைத்ததுபோல கதவுவைத்த, என் கனவு இல்லம் கிடைத்துவிட்டது. அடுத்து அரசு அதிகாரியாக வேண்டும். அதற்கான முயற்சிகள் செய்துவருகிறேன். எனக்கு உதவிகள் செய்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அம்மா, அப்போதைய எஸ்.பி. பாலாஜி சரவணன் அய்யா, எனக்கான வீட்டை தனது சொந்த வீட்டைப்போல பார்த்துப் பார்த்து கட்டிக்கொடுத்த எங்கள் ஊராட்சிமன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர், நியூஸ் 29 வாட்ஸ்அப் குழு, மக்கள் பாதை, இன்னும் பெயர் சொல்லமுடியாத, முகம்தெரியாத அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி''’என்றார்.