தைபதைக்க வைத்திருக்கிறது அந்தக் கொலை. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இரவு 10 மணிவரை திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு அருகேயிருக்கும் தனது கட்சி அலுவலகத்தில் இருந்தவர், நெருக்கமான ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் தேவமணியின் வீட்டிற்கு 100 மீட்டருக்கு முன்பு அவரது பைக்கை வழிமறித்து. இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

f

சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, தேவமணி இறந்துவிட்டதாகக் கூறினர் மருத்து வர்கள். உடலை வாங்க மறுத்த உறவினர்களும் அவரது ஆதரவாளர்களும் "குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டும்' என கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்குவந்த காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "மணிமாறன் உள்ளிட்ட 2 பேரை பிடித்துவிட்டோம். மேலும் சிலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுவிட்டது விரைவில் குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம்' என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, "தேவமணிக்கும், மணிமாறன் என்பவருக்கு இடம் தொடர்பான விவகாரத்தில் அடிக்கடி தகராறு நடந்துவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலும் இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்புகூட தேவமணியும் அவரது மகனும், மணிமாறனை திருநள்ளாறு கடைவீதியில் அடித்துவிட்டனர்.

அதேநேரம், தேவமணியை கூலிப்படையை வைத்து கொலை செய்யும் அளவிற்கு மணிமாறன் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலிமையானவர் இல்லை. இந்த கொலைக்குப் பின்னால் பெரிய கூட்டத்தின் பங்களிப்பே இருக்கும்போல தெரிகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை என எந்த அதிகாரியாக இருந்தாலும் அடாவடியாகப் பேசுவது தேவமணியின் வாடிக்கை. சொத்து விவகாரம் பஞ்சாயத்திற்கு வந்தால் அதனை சாதகமாக்கிக் கொள்வார் என்கிறார்கள். மதுபானக் கடை உரிமையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இப்படி பல இடங்களிலும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்தக் கொலையில் யார், யாருக்கு தொடர்பென விரைவில் தெரியவரும்'' என்கிறார்கள் விவரமாக.

சில ஆண்டுகளுக்கு முன்பு துணை சபாநாயகர் சிவக்குமார் படுகொலைக்குப் பிறகு அமைதியான காரைக்கால், தேவமணி கொலையின் மூலம் மீண்டும் அமைதி யிழந்திருப்பது காரைக்கால் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.

-க.செல்வகுமார்