ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் துவக்கப்பட்டன. இவற்றில் அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களின் நேரடி கண்காணிப்பில் இவை செயல்பட்டு வந்தன.
இதன்மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, பெருமளவில் ஏற்படத் தொடங்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது "கிராம கூட்டுறவு வங்கி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான விவசாயக் கடன், நகைக் கடன், மகளிர் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் என வழங்கப்பட்டன. இப்படி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு வங்கிகள், தற்போது தனியார் நிதி நிறுவனங்களைப் போல மோசடிகள் செய்து மூடப்பட்டு வருகின்றன என்பதுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் துயரமாகும்.
வங்கிகளில், பணப்புழக்கம் அதிகரிப்பதை பார்த்து சபலப்பட்ட அதன் ஊழியர்கள், அந்தப் பணத்தைக் கையாடல் செய்வது, வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளைத் திருடுவது, மோசடி செய்வது என தொடர்ந்து லீலைகளை அரங்கேற்றினர். இதனால் சிக்கல்கள் ஏற்பட, தமிழக அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன,
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய, கந்தர்வக்கோட்டை சி.பி.எம். கட்சி எம்எல்ஏ சின்னத்துரை, "கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் பணி செய்துவரும் ஊழியர்கள் அதன் நோக்கத்தை சிதைத்து வரு கிறார்கள், மோசடிகள் செய்கிறார்கள். வங்கிகளில் தற்போது நகைக்கடன் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகள் முடக்கப்படு கின்றன. எனவே கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இதற்கு உதாரண மாகத் திகழ்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட திருநாவலூர் கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் கடந்த 2010-ஆம் ஆண்டு விவசாயிகள் பொதுமக்கள் அடமானம் வைத்த நகைகள் கொள்ளையடிக் கப்பட்டன. பிறகு கொள்ளையர் கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை''’என்று பகிரங்கப்படுத்தினார்.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த மக்கள் கள்ளக் குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் அருகே உள்ள கடம்பூர் கிராம கூட்டுறவு வங்கி முன்பு, கடந்த 2-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அதில் கலந்துகொண்ட விவசாயி கடம்பூர் மணிவேல் நம்மிடம், "கடந்த 2015-ஆம் ஆண்டு 13 பவுன் நகை அடமானம் வைத்து பணம் பெற்றேன். 2017-ஆம் ஆண்டு நகையை மீட்பதற்காகச் சென்றேன். அலைக்கழிய விட்டனர். பிறகு பணம் கட்டினால் நகை தருவதாகக் கூறினார்கள். அதைக் கட்டி விட்டு நகைகளை கேட்டபோது, இல்லை என்று கூறிவிட்டார் கள்''’என்றார் ஆவேசமாக.
இப்பகுதியில் உள்ள மரூர், ம.புதூர், ஓடியேந்தல் உட்பட பல கிராம விவசாயிகளும் பொது மக்களும் நம்மிடம், "’குடும்ப செலவிற்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் கடம்பூர் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வைத்தோம். 2011 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அடமானம் வைத்த நகைக்கு உரிய பணத்தை செலுத்திவிட்டு, நகையை மீட்பதற்காக பலமுறை வங்கிக்குச் சென்றும் அலைய விட்டனர். சந்தேகம் அடைந்த நாங்கள் வங்கி அலுவலர்களிடம் வலியுறுத்திக் கேட்டபோது, "அடமான நகைகளை விற்றுவிட்டதாக' கூறுகின்றனர். சிவமூர்த்தி என்பவர் அடமானம் வைத்த நகைகளை திருப்பித் தரவில்லை என வங்கி முன்பு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை காவல் துறை யும் கூட்டுறவுத் துறை அதிகாரி களும் ஓடி வந்து தடுத்தனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது விசாரணை நடத்தி உரியவர் களுக்கு நகைகளைத் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.
பொதுவாக வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகையை உரியவர்கள் மீட்பதற்கு காலதாமதம் ஆனால் அவர் களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பவேண்டும். பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல், அவர்களே நகைகளை கள் ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர்''’என்றார்கள் எரிச்சலாக.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணியிடம் கேட்டபோது... "திருநாவ லூர் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பொதுமக்கள் அடமானம் வைத்த நகை மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம். இந்த நகைகளைக் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் துணையுடன், 22-5-2010 அன்று கொள்ளையடிக் கப்பட்டிருக்கு. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இந்த வங்கியில் வேலை செய்த ஊழியர் சிவகுமார் உதவியுடன், விழுப்புரத்தைச் சேர்ந்த பாரூக்லால் என்பவரும் இதற்காக கைது செய்யப்பட்டார். அவர்களிடமிருந்து கணிச மான அளவு நகைகள் மீட்கப்பட்டது. மீதி நகைக்குப் பதிலாக கொள்ளையர்களின் சொத்துக்களை ரெக்கவரி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நுகர்வோர் நீதிமன்றம் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்கு ஒரு கிராமுக்கு 5000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தினோம். 6-2-2020-ஆம் தேதிக்குள் உரிய இழப்பீடு வழங் கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர் ஆனால், இன்றுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை''’என்றார் கொதிப்பாய்.
இங்கு மட்டுமல்ல... கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளார் கிராம கூட்டுறவு வங்கி. இங்கும் பொதுமக்களின் பணமும் நகையும் கேசியராக இருந்த பரம சிவம் துணையுடன் கையாடல் செய்யபட்டி ருக்கிறது. இதுகுறித்து செங்கமேடு கவிதா, "கடந்த 2009-ஆம் ஆண்டு எனது கணவரும் நானும் உழைத்து சம்பாதித்த ஐம்பதாயிரம் ரூபாயை இந்த வங்கியில் வைத்திருந்தோம். என் பணம் உட்பட 200-க்கும் மேற்பட்டவர் களின் பணம், நகைகளை கையாடல் செய்து விட்டார்கள். இதுகுறித்து புகார் அளித்தோம். அதனடிப்படையில் துறை அதிகாரிகள் விசா ரணை என்ற பெயரில் விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி என்று எங்களை அலைக்கழித்தனர். பதினோரு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எங்களுக்குச் சேரவேண்டிய பணம், நகை எதையும் திருப்பித் தரவில்லை. இந்த வங்கி மூடும் நிலையில் உள்ளது... பணம் வருமா?''’என்கிறார் பரிதவிப்புடன்.
கூட்டுறவு வங்கிகளை சீரமைத்து அதை சரிசெய்யும் விதமாக, "கடந்த 2006-ல் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போது, கூட்டுறவு சங்கச் செயலாளர்கள், ஊழியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் அரசு ஊழியர்களைப் போல மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி மாறுதல் செய்ய, விதிமுறைகள் வகுத்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு இதை கண்டுகொள்ளவேயில்லை' என்கிறார்கள் பலரும்.
எனவே ’"தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவுத் துறையில் மறு சீரமைப்பு செய்து, அவற்றைப் பழுது பார்க்கவேண்டும்'’என்கிறார்கள் விவசாயிகளும் பொதுமக்களும்.
______________________________________________
நகைக் கடன் தள்ளுபடி?
"கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என அரசு அறிவித்துள்ளது. எப்படியும் தேர்தல் வாக்குறுதிப்படி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நோக்கத்தில் மிக அதிக அளவில் வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகளும் அலுவலர்களும், வங்கியின் தலைவர்களாக, இயக்குனராக உள்ள அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்கள் குடும்பத்தின் நகைகளை வைத்து லட்சம் முதல் கோடி ரூபாய்வரை பணம் பெற்றுள்ளனர்.
கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் இப்படிப்பட்டவர்கள் அதிக அளவில் பயனடைவார்கள். இதைக் கருத்தில்கொண்டும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது. அப்படி ஆய்வு செய்யும் அதிகாரிகளும் நகைக் கடன் பெற்றுள்ளவர்களே. அதனால் இவர்களின் ஆய்வு எப்படி இருக்கும்? எனவே, "அரசு அந்தத் துறையைச் சாராத அதிகாரிகள் குழு மூலம் ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகள் மற்றும் நலிந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், நகைக் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்' என்கிறார்கள் அந்தத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.