நாடாளுமன்ற மக்களவை கொந்தளித்தது. மாநிலங்களவை அமர்க்களமானது. ஆவேசமாக பேசிய திருச்சி சிவா எம்.பி., தன் கையிலிருந்த காகிதங்களை கிழித்தெறிந்தார். அவைத்தலைவர் இருக்கை அருகே சென்ற பல உறுப்பினர்கள் அந்த மசோதாவைக் கிழித்தெறிந்து, மைக்குகளை தட்டிவிட்டனர். வாக்கெடுப்பு எடுக்கச் சொன்ன எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேறின. அமளியில் ஈடுபட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். நாடாளுமன்றத்தின் முன் அவர்கள் விடிய விடிய உண்ணாவிரதம் இருந்தனர். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இதுவரை கண்டிராத பரபரப்பைக் கண்டது.

modigvt

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம் மற்றும் வேளாண் சேவைகள் திருத்த சட்டம் ஆகிய மூன்று சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை என பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சொல்கிறது. எதிர்க்கட்சிகள் அதை மறுக்கின்றன. விவசாயிகள் போராடுகிறார்கள். பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளக் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியையே ராஜினாமா செய்தார். ஆனால், அ.தி.மு.க. எம்.பிக்களும் முதல்வரும் வரிந்து கட்டி ஆதரிக்கிறார்கள்.

மசோதா மீதான சந்தேகங்களை எழுப்பி விமர்சித்த அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ர மணியம், ""குறைந்தபட்ச ஆதார விலையை பற்றிக்கூட மசோதாவில் குறிப்பிடவில்லை'' என்றார். இதற்காக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர வைத்துள்ளது.

Advertisment

n

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ""விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களிலும் சுயவிருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு, அந்த சட்டத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் சிகப்பு கம்பளம் விரிக்கிறார், முதலமைச்சர் பழனிசாமி'' என்று சாடினார். இந்த சட்டத்திற்கு எதிராக ஹரியானா, பஞ்சாப், உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் சட்ட நகலை எரித்துப்போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் விவசாய அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. தி.மு.க. கூட்டணி சார்பில் 28ந் தேதி மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் உண்மையில் என்ன சொல்கிறது. டெல்டா விவசாயிகளிடம் கேட்டோம். ""பயிர் அறுவடை முடிந்ததும் தானியங்களை எங்கு வேண்டுமானாலும் எந்த வியாபாரியிடமும் விற்கலாம். விவசாய உற்பத்தி மற்றும் மார்க்கெட் கமிட்டியில்தான் விற்கவேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை. விலை உத்தரவாதம் கிடையாது, விலை குறித்து விவசாயிகள் ஒப்பந்த சட்டத்தின்படி தனது பயிரின் தரத்திற்கேற்ப விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கார்பரேட்டுகளிடம் கையெழுத்திட வேண்டும். இவையெல்லாம் இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

Advertisment

அத்தியாவசியப் பொருட்கள் சட்டப்படி பணக்காரர்களும் வணிகர்களும் முன்பு பயிர்களை மலிவு விலையில் அதிகமாக வாங்கி சேமித்து வைத்து கள்ளச்சந்தையில் விற்றுவந்தனர். இதனை தடுக்கவே 1955ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள புதிய திருத்தச் சட்டத்தின்படி தானியங் கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிலேயே இருக்காது என நீக்கியுள்ளனர். இதனால் பதுக்கல் அதிகரிக்கும். கொள்ளை விலையில் விற்கப்படும். ஆனால், விவசாயிக்கு பலன் இருக்காது. இப்படித்தான் மூன்று சட்டங்களும் உள்ளன.

குறைந்தபட்ச ஆதார நிர்ணயவிலை முறை இருந்த காலத்திலேயே இடைத்தரகர்களின் அட்டூழியம் தாங்காது. தற்போது நிர்ணய விலைமுறை நீக்கப்பட்டுவிட்டதால் கார்பரேட்டு களிடம் அடிமையாகும் நிலையாகிடும். மற்ற மாநிலங்களைவிட முழுமையான பாதிப்பு தமிழகத்திற்குத்தான். இங்கே செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும். கார்பரேட்டுகளின் நெருக்கடி தாங்காமல், விவசாயிகள் தானாகவே நிலங்களை விட்டுவிட்டு வெளியேறும் சூழலை உருவாக்கி, ஏற்கனவே திட்டமிட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்த தடையும் இல்லாமல் நிறைவேற்றப் போகிறார்கள்.

m

கடந்த 2014 தேர்தலின்போது, விவசாயிகளின் விளைபொருளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி நியாயமான விலை வழங்கப்படும் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி, புதிய திருத்த சட்டத்தின் மூலம் விவசாயிகளை அடகுவைத்துவிட்டார். மாநில உரிமைகளையும் சேர்த்து பறிக்கும் இந்த சட்டங்களுக்கு தமிழக எடப்பாடி அரசு பூமாலை அணிவித்து வரவேற்கிறது என்கிறார்கள் கோபத்துடன்.

விவசாயியும் முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவருமான ஆறு.சரவணன் கூறுகையில் ""விவசாயிகளுக்கு ஓரளவிற்கு பயனளித்துவந்த குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு முழுமையாக வேட்டுவைத்துவிட்டது புதிய சட்டம். ஒரே சமயத்தில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது சந்தையில் வேளாண்பொருட்கள் அதிக அளவில் குவிந்து விலை வீழ்ச்சியை சந்திக்கும். அப்போது விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை. அதனாலதான் ஒவ்வொரு முறையும் விவசாயிகள் ஆதரவு விலையை உயர்த்தி வழங்கிடுக என தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். உதாரணமாக இன்று ஒரு மூட்டை 700 என அரசு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்திருக்கிறது, தனியார் சந்தையில் மூட்டைக்கு 700 ரூபாயைவிட அதிகமாக கொடுக்க முன்வந்தால் விவசாயி தனது விளைபொருளை அங்கு விற்பனை செய்துக்கலாம். குறைவு என்றால் அரசு நிலையத்தில் விற்பனை செய்துக்கலாம். விவசாயிகளுக்கு உண்டாகும் செலவுகளை கணக்கிட்டுதான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கும். அதற்குதான் முதல் வேட்டு வைத்திருக்கிறது மத்திய அரசு.

m

அதேபோல விவசாயி, தான் உற்பத்தி செய்த பொருளை எந்த ஊரிலும், மாநிலத்திலும் விற்பனை செய்யலாம்னு சொல்லுது புதிய சட்டம். இது சிறு விவசாயிகளுக்கு சாத்தியமா, இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய பெருநிறுவனங் கள்தான் இதனை வாங்கும். கார்ப்ப ரேட்டுகளுக்காக கொண்டுவரப் பட்டதுதான் இந்த மூன்று சட்டங்களும். இதில் மாநிலங்களின் உரிமைகள் முற்றிலுமாக போய்விட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்டங்கள் நல்லது என்று கூறி ஆதரவு தெரிவித்துவிட்டார். இனி, அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்தான் விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் சொன்னாலும் நடக்காது. அம்பானிக்கும், அதானிக்கும் மத்திய அரசே கொடுத்துவிடும். ஜிஎஸ்டிக்கான உரிமையை எப்படி மத்திய அரசே வைத்துக்கொண்டதோ, அதேபோல் சந்தைப்படுத்துவதற்கான உரிமையையும் மாநில அரசிடமிருந்து பறித்துவிட்டனர். இதை எடப்பாடி அரசு ஆதரிப்பது சாபக்கேடு'' என்கிறார் விவரமாக.

காவிரி காப்பாளர் என முதலமைச்சர் பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தியவர்களில் ஒருவரான காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் கூறுகையில், ""மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் வராது என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார். சட்டம் குறித்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், விவசாய நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு செய்த பிறகுதான் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்று உறுதியளித்து இருப்பார். ஆகையால் அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்'' என்கிறார் வழக்கம் போல்.

mm

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், ""மத்திய அரசின் புதிய திருத்த சட்டம் நிறைவேறக் காரணமே அ.தி.மு.க.தான். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ஆதரித்ததன் மூலம் எடப்பாடியின் ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது. இனிமேல் நானும் விவசாயின்னு தமிழக விவசாயிகளிடம் அவர் போடும் எந்தவித நாடகமும் எடுபடாது. அதே நேரத்தில் பழனிச்சாமி ஒரு செய்தியை திமுக தலைவரை பார்த்து முன்வைத்திருக்கிறார். 2019ல் இதே சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை பின்பற்றித்தான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வாய் திறக்காமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் எதிர்க்கிறார் என காரசாரமாக கேள்வியை எழுப்பினார். அதற்கு இதுவரை திமுகவோ மற்ற கட்சிகளோ பதிலளிக்கவில்லை.

அதோடு மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தைவிட மிகக்கொடுமையான சட்டத்தை நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது. கடைசி நாளில் 19 திருத்தச் சட்டங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று நகர்ப்புற வளர்ச்சி விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ அனுமதியைப் பெறவோ தேவையில்லை என்று கூறிவருகிறது. இது மத்திய அரசின் சட்டத்தைவிட பல மடங்கு கொடுமையானது. இதற்காக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது பெருத்த வேதனை. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இந்த சட்டத்தால் கார்ப்பரேட் உள்ளே வந்துவிட்டால் மாநில அரசு எப்படி கட்டுப்படுத்த முடியும்? எந்த நிறுவனம் எந்த விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது என்பதை தெரிவிக்க மாநில அரசு அனுமதி தேவையில்லை என்பது போல் மொத்தமும் கார்பரேட்டுகளிடம் அடமானம் வைத்து விட்டது'' என்கிறார் ஆவேசமாக.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர கமல நாதன், ""மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டங்களில் ஒன்று வேளாண்மை ஊக்குவிப்பு சட்டம். வார்த்தைகளில் கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும்தான் இதில் ஊக்குவிப்பு என்கிற வார்த்தை குறிப்பிடப் பட்டுள்ளன.

m

இந்தசட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் சூது செய்து இந்திய வேளாண்மையை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலோட்டமாக இந்த சட்டம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக தோன்றும் ஆனால் இதன் பின்னணி மிகவும் ஆபத்தானது, ஏற்கனவே ஒரு சில அளவில் போதுமான உரிமைகள் மாநில அரசிடம் இருந்தும், வலுவில்லாத ஆட்சி யாளர்களாகவே தமிழக ஆட்சியாளர்கள் இருந்துவருகின்றனர், இந்த நிலமையில் மொத்த உரிமைகளும் மத்திய அரசிடம் சென்றுவிட்டது, அவர்கள் ஆட்டுவிக்கும் திசைக் கெல்லாம் ஆடப்போகிறார்கள், விவசாயிகள் பெரும் துயர் அடைய போகிறார்கள். ஆகவே அவசர சட்டத்தை பிரதமர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தை நடத்து வோம்'' என்கிறார்.

-க.செல்வகுமார்