தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் இறுதிக்கட்டப் பணிகளில் வேகம் காட்டி வருகிற மாநில தேர்தல் ஆணையம், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளின் மேயர் பதவி உள்பட உள் ளாட்சி அமைப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார் தமிழக அரசின் நகராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா ஐ.ஏ.எஸ். இதனால், தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி களின் மேயர் பதவி, பட்டியல் இனத்தைச் (எஸ்.சி.) சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஆவடி மாநக ராட்சியின் மேயர் பதவியை பட்டியல் இனத்தின் பொதுப் பிரிவிற்காக (ஆண்/பெண்) ஒதுக்கியிருக்கிறது அரசு. மேலும், காஞ்சிபுரம், கடலுர், வேலூர், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பெண்கள் வசம் சென்றுள்ளன. அதேபோல நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்திருக்கிறது தி.மு.க. அரசு.
21 மாநகராட்சிகளில் 22 சட்டமன்றத் தொகுதிகளையும், 200 வார்டுகளையும் உள்ளடக் கிய மிகப்பெரிய மாநகராட்சி சென்னைதான். இதில், பட்டியலின சமூகத்திற்காக பொதுப் பிரிவில் (ஆண்/பெண்) 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்காக 16 வார்டுகளும், பொதுப்பிரிவில் பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டி ருக்கிறது. ஆக, ஆண்களுக்கு இணையாக தேர்தல் களத்தில் பெண்களின் போட்டி அதிகரித்துள்ளது. சென்னை மேயர் கனவில் இருந்த தி.மு.க. ஆண் நிர்வாகிகளுக்கு செக் வைத்துள்ளது அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும்.
தேர்தலுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையின் முதல் தலித் பெண் மேயர் யார்? என்கிற கேள்வி பரபரப் பாக எதிரொலிக்கிறது. இதுகுறித்து அறிவாலய தரப்பில் நாம் விசாரித்த போது... "மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால், பெரும்பான்மை வார்டு களைக் கைப்பற்றும் கட்சிக்குத்தான் மேயர் பதவி கிடைக்கும். மாநக ராட்சியின் மேயரை வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர்.
"இந்தமுறை சென்னை மாநக ராட்சி, பெண்களுக்கு ஒதுக்கப்படும்' என எதிர்பார்த்தோம். ஆனால், பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப் படும் என எதிர்பார்க்கவில்லை. நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சென்னை மாவட்ட அமைச்சர் களான மா.சுப்பிரமணி, சேகர்பாபு ஆகிய மூவரிடம் மட்டும் ரகசியமாக கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். கவுன்சிலர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் போதுதான் மேயர் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பதை கணிக்க முடியும்''‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தி.மு.க.வினர்.
பட்டியலினப் பெண்களுக்கு 16 இடங்களும், பட்டியலினப் பொதுப் பிரிவில் 16 இடங்களும் ஒதுக்கப்பட்டி ருப்பதால் இந்த 32 இடங்களிலிருந்து தான் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உண்டு எனச் சொல்கிறார் கள். இதுகுறித்து தி.மு.க.விலுள்ள பட்டியலினத்தவர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது... "எங்களுக்கான பொதுப்பிரிவில் 16 வார்டுகளிலும் எஸ்.சி. ஆண்களுக்குத்தான் வாய்ப் பளிக்க வேண்டும். பெண்களுக்கு ஒதுக்க ஒத்துழைக்க மாட்டோம்''‘என்று இப்போதே தி.மு.க.வின் எஸ்.சி. பிரிவு ஆண்கள் வரிந்து கட்டுகிறார்கள்.
அதேசமயம் எஸ்.சி. அல்லாத பொதுப்பிரிவு வார்டுகளில் கூட எஸ்.சி. பெண்கள் போட்டியிட முடியும். அதனால் பொதுப் பிரிவிலிருந்தும் எஸ்.சி. பெண்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.
இப்படிப்பட்ட கணக்குகளை கூட்டிக் கழித்து போட்டுக் கொண்டிருக்கிற வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர் கள் தாங்கள் போட்டியிடவும், தாங்கள் போட்டியிட முடியாத இடங்களில் மனைவி அல்லது மகளுக்கு சீட் வாங்கவும் இப்போதே மல்லுக்கட்டத் துவங்கிவிட்டனர்.
எஸ்.சி. பெண்களுக்கான வார்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் அடங்கிய 111-வது வார்டினை பலரும் உற்று நோக்குகிறார்கள். இங்கு சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் டி.கே. லதா ஃப்ளாரன்ஸ், பகுதி அமைப்பாளர் மாணிக்கத்தின் மனைவி வெற்றிச்செல்வி, 111-வது வட்ட துணைச்செயலாளர் அங்காளம், 111 (அ) வட்ட துணைச் செயலாளர் தேவி கரிகாலன், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த நந்தினி ஆகியோரிடையே போட்டி அதிகமாக இருக்கிறது. இதில் லதா ஃப்ளாரன்ஸை தவிர மற்ற சிலர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என்கிறார்கள்.
பெண்களுக்கான வார்டுகள் குறித்து தி.மு.க.வில் விசாரித்தபோது, மறைந்த முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்துவின் பேத்தியை ஏதேனும் ஒரு எஸ்.சி. வார்டில் களமிறக்க தலைமை முடிவு செய்திருக்கிறது. மயிலை பகுதியில் ஷீபாவாசு எஸ்.சி. என்றாலும் பெண்களுக்கான பொது வார்டில் மல்லுக்கட்டுகிறார். அதேபோல, தென்சென்னையில் அடங்கியுள்ள சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பாலவாக்கம் ஆகிய 3 வார்டுகள் மட்டுமே பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பாலவாக்கத்தின் மீது தென்சென்னை தி.மு.க.வினரின் பார்வை திரும்பியுள்ளது. இங்கு மாவட்ட துணைச்செய லாளரும் முன்னாள் கவுன்சிலருமான விஸ்வநாதன் தனது மனைவிக்கும், மாநில சட்டத் திட்ட திருத்தக் குழு செயலரும் முன்னாள் கவுன்சிலருமான சோமு தனது மகளுக்கும் சீட் கேட்டுள்ளனர். இவர்களுக்கிடையே, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் தலித் கிருஸ்துவருமான ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா ரேசில் நுழைந்திருக்கிறார். இவர்கள் மூவருக்கும் இடையேதான் ரேஸ் வேகமெடுத்துள்ளது.
சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. ரமேஷ் அரவிந்த், தனது தொகுதிக்குட்பட்ட எஸ்.சி. அல்லாத வார்டுகளில் வன்னியர் சமூகத்துக்கே அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும் என காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
அதேபோல கொட்டி வாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய 4 வார்டுகளும் பெண் களுக்காக ஒதுக்கப்பட்டி ருந்ததை தற்போது ஆண் களுக்காக மாற்றியமைத் துள்ளனர். அதனால், "நீலாங்கரையில் மதியழகன், கொட்டிவாக்கத்தில் மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் அருண்குமார், பகுதி பொருளாளர் பாஸ்கர், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, ஈஞ்சம்பாக்கத்தில் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுவேல், வட்டச் செயலாளர் சத்தியவேலன், துரைப்பாக்கத்தில் மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் எம்.ஆர்.எல்.விஜயக்குமார், மாவட்ட பொறி யாளர் அணி அமைப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்தான் ரேசில் முந்துகின்றனர்' என்கிறார்கள்.
மொத்தமுள்ள 200 வார்டுகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகபட்சம் 25 சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, 175 இடங்களில் தி.மு.க. களமிறங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளோ ஒவ்வொன்றும் இரட்டை இலக்கத்தில் வார்டுகளை எதிர்நோக்குகின்றன.
"பெண் மேயர் வாய்ப்பு தென்சென்னைக்கு கிடைத்தால் துணை மேயர் (ஆண்) வட சென்னைக்கும், மேயர் வாய்ப்பு வட சென்னைக்கு கிடைத்தால், துணை மேயர் வாய்ப்பு தென் சென்னைக்கும் கிடைக்கும்' என்கிறார்கள். அந்த வகையில் தென் சென்னையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் சைதை.மகேஷ், கே.கே.நகர் தனசேகரன், தென்சென்னை மேற்கு மா.செ. சிற்றரசு, திருவல்லிக்கேணி காமராஜ், வட சென்னையில் மா.செ. இளைய அருணா, திரு.வி.க. நகர் தமிழ்வேந்தன், அண்ணாநகர் பரமசிவம், வழக்கறிஞர் கிரிநாதன் ஆகியோரிடையே போட்டி வேகம் எடுத்துள்ளது.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில், பெரும் பாலும் மா.செ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பொறுப்புகளையும் வெற்றிக்கான வியூகங்களையும் ஓ.பி.எஸ்.சும் இ.பி.எஸ்.சும் ஒப்படைத்துவிட்டனர். இருப்பினும் தனது ஆதரவாளர்களே அதிக அளவில் களமிறங்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேசமயம், கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களின் வலிமையைக் காட்ட சீரியஸ் காட்டி வருகிறார்கள்.
சென்னை அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, மாநகராட்சித் தேர்தலில் களமிறங்க மா.செ.க்களும் முன்னாள் எம்.எல்.ஏ.க் களுமான விருகை ரவி, தி.நகர் சத்யா, அசோக், ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் ஜெயவர்த்தன், வெங்கடேஷ்பாபு ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போட்டியிட அவர்கள் விருப்பம் காட்டவில்லை. மாறாக, தங்களின் ஆதரவாளர்களை களமிறக்கவே நினைக்கின்றனர்.
மேயர் வேட்பாளருக்கான எஸ்.சி. பெண் வேட்பாளரை கண்டுபிடிப்பதிலும் கட்சித் தலைமை திணறுகிறது. "எதிர்க்கட்சியாக 80-க்கும் குறையாத வார்டுகளைக் கைப்பற்றத் திட்டமிடு கிறார்கள்'‘என்று தெரிவிக்கிறார்கள் ர.ர.க்கள்.
அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க.வும், ஜி.கே.வாசனின் த,மா.க.வும்தான் அந்த கூட்டணியில் இருக்கின்றன. "எடப்பாடிக்கு பா.ஜ.க.வை சமாளிப்பதுதான் பெரும்பாடாக இருக்கும்' என்கிறார்கள். காரணம், உள்ளாட்சி அமைப்புகளில் 25 சதவீத இடங்களை எதிர்பார்க்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 50 இடங்களை குறி வைக்கிறது பா.ஜ.க. இதற்காக, 1 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருக்கும் 50 நபர்களை தேர்வு செய்திருக்கிறார் சென்னை தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன். ஆனால், அ.தி.மு.க. தலைவர்களோ 15 இடங்களுக்குள் பா.ஜ.க.வை முடக்க ஆலோசனை நடத்தியுள்ளனர் என்கிறார்கள்.
சட்டப்பேரவைக்கு இணையாக சென்னை கவுன்சில் உற்றுப் பார்க்கப்படும் என்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், "இரு கட்சிகளின் பட்ஜெட்டும் பிரமாண்டமாக இருக்கும்' என்கிறார்கள் உளவுத்துறையினர்.