தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்று எதனை வைத்து சொன்னார் ஹெச். ராசா?
தி.மு.க.வை அண்ணா ஆரம்பித்தது 1949-ஆம் ஆண்டு. அது முதன்முதலில் தேர்தலை சந்தித்தது 1957-ஆம் ஆண்டு. அதன்பின் 1962-ல் நடந்த தேர்தலை யும் சந்தித்து, 1967-ல் ஆட்சியையும் பிடித்தது. இந்த மூன்று தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கு எதிராகவும் அண்ணா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களுக்கு எதிராகவும் தான் பெரியார் பிரச்சாரம் செய்தார். பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தைப் பெரியார் நடத்தினார். அண்ணாவோ, நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றார். அதனால், பெரியார் அளவுக்கு அண்ணா வேகமாக இருக்கமாட்டார் என்ற பொதுவான பார்வை இருந்தது. 1967 தேர்தலில் அண்ணா அமைத்த கூட்டணியில் சுதந்திரா கட்சியின் தலைவரும் பெரியாரின் அரசியல் எதிரியுமான ராஜாஜியும் இடம்பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தனது கட்சி நிர்வாகிகளுடன் திருச்சிக்கு சென்றார். அங்கிருந்த பெரியாரை சந்தித்தார். சட்டமன்றத்தில், சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெரியாரின் கனவை நனவாக்கியதுடன், இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை என்றார் அண்ணா. அதுவரை, பெரியார் நடத்தி வந்த போராட் டங்கள் எல்லாம் அரசின் கொள்கையாகி, சட்டங்களாக வும் திட்டங்களாகவும் வெளிப்பட்டன. அண்ணாவை எளிதாக எடைபோட்டவர்கள் அதிர்ந்துபோனார்கள். அண்ணா போட்ட பாதையில்தான் கலைஞர் நடந்தார். அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலும் அண்ணாவின் பாதையில்தான் நடக்கிறது. கலைஞருக்குப் பிறகு, அந்தப் பாதையிலிருந்து விலகிவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். மு.க.ஸ்டாலினோ அண்ணா போல செயல்படுகிறார். கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின்கீழ் பணி நியமன ஆணையை வழங்குகிறார். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகக் கொண்டாட வைக் கிறார். தமிழில் அர்ச்சனைத் திட்டத்தை முன்னெடுக் கிறார். மாநில உரிமைகளுக்காக பிற மாநில முதல்வர் களுக்கு கடிதம் எழுதி, தன் கட்சியின் எம்.பி.க்களையும் நேரில் அனுப்புகிறார். மொழி -இன உரிமை -மாநில உரிமை -சமூகநீதி ஆகியவற்றுக்கான அடுத்த கட்ட நகர்வுகளை சத்தமில்லாமல், அதேநேரத்தில் சட்டப் பூர்வமாக செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்தால் ஹெச்.ராஜா வகையறாக்களுக்கு, கருணாநிதியை விட ஆபத்தானவராகத்தான் தெரியும். அவர்களுக்கு ஆபத்தாக தெரிவது, தமிழ்நாட்டுக்கு நல்லதாக முடியும்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்காக தி.மு.க. 114.14 கோடி செலவு செய்துள்ளது என்கிறதே புள்ளிவிபரம். அதிலும் குறிப்பாக ஊடக விளம்பரத்திற்காக 39.78 கோடி செலவு செய்துள்ளதே?
தமிழ்நாட்டில் மொத்த தொகுதிகள் 234. எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் தொகுதிக்கு சராசரியாக அரைகோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள் என்றால், இரண்டு ஆளுங்கட்சிகளின் கூட்டணியாக இருந்தவர்கள் எவ்வளவு செலவு செய்திருப்பார்கள்? தி.மு.க. தனது விளம்பரத்திற்காக 39.78 கோடி செலவு என்றால், வெற்றிநடை போடும் தமிழகமே என இடைவிடாமல் விளம்பரம் செய்து -கடைசி நாளில்கூட எதிர்க்கட்சிக்கு எதிராக எல்லா பத்திரிகைகளிலும் 4 பக்க அளவுக்கு விளம்பரம் செய்த செலவு எவ்வளவு இருக்கும்? இதையெல்லாம் தாண்டி, இரு தரப்பிலுமான உண்மையான செலவு கணக்கு எவ்வளவு இருக்கும்?
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
சமந்தா-நாக சைதன்யா பிரிவு பற்றி?
பிரபலங்களின் திருமணம் எந்தளவு கவனிக்கப்படு கிறதோ, அதே அளவு அவர்களின் இல்லற வாழ்க்கையும், அதில் ஏற்படும் திருப்பங்களும் பொதுமக்களால் கவனிக் கப்படுகின்றன. ஊடகங்கள் கூர்ந்து கவனிக்கின்றன. ஒருவரையொருவரை விரும்பித் திருமணம் செய்துகொள் கிறவர்கள், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியாத நிலையிலோ, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க முடி யாதபோதோ இல்லற வாழ்வை முறித்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள் சமந்தா-நாக சைதன்யாவின் திருமணத்தையும் அவர்களின் பிரிவையும் கூர்ந்து கவனிப்பதுபோல, பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்-டயானா ஆகியோரின் பிரம்மாண்ட திருமணத்தையும், அவர்களின் வாழ்வின் திருப்பங்களையும், பிரிவையும் உலகமே கூர்ந்து கவனித்தது. ஆனால் சார்லஸ்-டயானா முதல் சமந்தா-நாக சைதன்யா வரை அவரவருக்கான தனி உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்று தேர்தல் பரப்புரையில் அன்புமணி ராமதாஸ் கூறி இருக்கின்றாரே?
தொண்டர்களை நம்பிக்கை தளரவிடாமல் வைத்திருப்பதுதானே தலைமைப் பண்பு!