சு.வெங்கடேஷ், கோட்டயம்
பத்திரிகை ஆசிரியர் பணி என்பது பொறுப்பு வாய்ந்ததா? சலிப்பூட்டுவதா?
34 ஆண்டுகளாக நக்கீரன் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் ஆசிரியர். அட்டைப்பட வடிவமைப்பு தொடங்கி பலவற்றையும் கவனத்துடன் மேற்கொள்கிறார். ஒரு முறைகூட அவர் சலிப்படைந்ததே இல்லை. ஆசிரியர் என்றாலும் பத்திரிகைத் துறையில் அவரும் மாணவர்தான். ஒவ்வொரு இதழிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம் என்பார். நக்கீரன் ஆசிரியர் உள்பட பலரும் ஆசிரியர் என மதிப்புடன் அழைப்பது திராவிடர் கழகத் தலைவரும் விடுதலை நாளேட்டின் ஆசிரியருமான கி.வீரமணியைத்தான். ஜூன் 1-ஆம் நாள் விடுதலை நாளேடு 87-வது ஆண்டைக் காணொலி நிகழ்வாகக் கொண்டாடியது. 87 ஆண்டில் 59 ஆண்டுகள் அதன் ஆசிரியராகத் தொடர்பவர் கி.வீரமணி. பெரியார் தன்னிடம் ஒப்படைத்த பெரும்பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டு, காலத்திற்கேற்ற வகையில் விடுதலை நாளேட்டை வடிவமைத்து, இன்று டிஜிட்டல் தளத்திலும் சிறப்பாகக் கொண்டு வரும் வகையில் புதிய இளைஞர் பட்டாளத்தைப் பத்திரிகைத் துறையில் ஈடுபடுத்தி, பலருக்கும் பயிற்சி அளிக்கச் செய்து, எப்போதும் சீரிளமைத் திறத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு என்ற பெருமையும் விடுதலைக்கு உண்டு. ஆசிரியர் வீரமணியே சொல்வதுபோல, விடுதலை லட்சங்களில் விற்கும் பத்திரிகை அல்ல... லட்சியங்களை சுமந்திருக்கும் பத்திரிகை. அதன் சமூகநீதிக் குரல் இன்றைக்கும் ஆரிய ஊடகங்களை அலற வைப்பதைக் காணமுடியும். சலிப்படைந்தால் எதிரிகள் வென்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்து பொறுப்புடன் ஆசிரியர் பணியில் மணிவிழா காண இருக்கிறார் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி.
ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்
மக்களுக்கு பொழுதுபோகும் அம்சமாக விளங்குவது சினிமாவா, தொலைக் காட்சியா அல்லது ரேடியோவா, அலை பேசியா?
அரசியல் மீது உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு?
ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்
தமிழக அதிகாரிகள் பந்தாடப்படுவதாக சீமான் பேசியுள்ளாரே?
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அதிகாரிகள் மாற்றமும் நடைபெறுவது வழக்கம். அது தி.மு.க ஆட்சியிலும் தொடர்கிறது. அப்படியிருந்தும், அ.தி.மு.க ஆட்சியில் முக்கியமான துறைகளில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தி.மு.க.விலும் செல்வாக்காக இருக்கிறார்கள் என்பதை தி.மு.க வலியுறுத்தி வருகிறது. இதில் ஒரு சில அதிகாரிகள் பந்தாடப் பட்டதற்காக சீமான் நியாயம் பேசியுள்ளார். தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு, முதல்வரின் செயலாளராக உள்ள உதயச்சந்திரன் உள்ளிட்ட பல திறமையான அதிகாரிகள் கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் பவர் இல்லாத துறைகளுக்கு பந்தாடப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். பாவம்... அத்தகைய அதிகாரிகளுக்காக குரல் கொடுக்க இப்போது போல அப்போது எந்த சீமானும் இல்லை.
வாசுதேவன், பெங்களூரு
பரபரப்பாக பேசப்படும் செய்திகள் நாளடைவில் காணாமல் போவது..!
நன்றி மறப்பது நன்றன்று என்கிறார் வள்ளுவர். நியாயம் மறப்பதும் நன்றன்று. பொள்ளாச்சி பாலியல் அயோக்கியர்கள் தொடங்கி சாத்தான்குளம் காவல் நிலையக் கொடூரர்கள் வரை எத்தனையோ நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் நடந்தேறியுள்ளன. இவை அனைத்திலும் நியாயத்துடன் விசாரணை நடத்தி நீதி நிலைப்பெற்றிட வேண்டும். “யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விடமாட்டான்”என தேர்தல் பரப்புரையின்போது சொன்ன இன்றைய முதல்வர் அதனை மறவாமல் இருந்தால், பரபரப்பாக பேசப்பட்ட செய்திகள் காணாமல் போகாது.
தா.விநாயகம். ராணிப்பேட்டை.
"அரசியலில் இருப்பேன் அரசியல் இருக்கும்வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்' என்று கமல் கூறியிருக்கிறாரே?
தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் விலகிக் கொண்டிருக்கும் நிலையில், கமல் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு என்பது உண்மையாகவே அவர் பின்னால் நிற்கக் கூடிய தொண்டர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியதாக இருக்கும். அரசியல் எப்போதும் இருக்கும். அதில் கமல் என்னவாக இருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. பத்மசேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகாரையடுத்து, உறுதியான நடவடிக்கையை பெண்கள் மீது அக்கறை கொண்ட அத்தனை பேரும் வலியுறுத்துகின்றனர். கமல் விடுத்த அறிக்கையில், மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டுகின்ற விலாங்கு மீன் போல நியாயத்தைப் பேசியபடியே சாதியை இழுத்திருக்கிறார். அதாவது, பள்ளி நிர்வாகிகளின் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் அவரது அறிக்கை அமைந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஓர் ஆசிரியர் மட்டுமல்ல, தற்போது மேலும் பல ஆசிரியர்களும் குற்றச்சாட்டுக்குள்ளாகின்றனர். அவர்கள் எந்த சாதி என எவரும் பார்க்கவில்லை. நியாயத்தைப் பேச சாதிப் பாசம் எதற்கு?