கடந்த 2023 மே மாதத்தில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையான மைத்தேயி இனக் குழுவினருக்கும் குக்கி இனக் குழுவினருக்குமிடையே மூண்ட வன்முறை, ஓராண்டு கடந்தபின்னும் தொடர்கிறது. இந்த வன்முறையில், இருதரப்பையும் கட்டுப்படுத்த முனையாமல், பெரும்பான்மையான மைத்தேயி இனத்துக்கு ஆதரவாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆளக்கூடிய பா.ஜ.க. நடந்துகொண்டதால் வன்முறை இன்னும் தொடர்ந்தபடியிருக்கிறது.
மணிப்பூரில் தொடரும் வன்முறையால் இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள், கல்விக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளும்கூட தாக்குதலுக்குள்ளாகி யிருக்கின்றன. பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அடித்து இழுத்துவந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த கொடுமைம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து பேசவே பிரதமர் மோடி மறுத்துவந்தார். அம்மாநிலத்துக்கு சென்று ஆறுதல் சொல்லவும்கூட அவர் விரும்பவில்லை. அம்மாநில முதல்வர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மணிப்பூரிலுள்ள இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.
தற்போது மீண்டும் மோடி அரசு மத்தியில் மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், மணிப்பூரில் வன்முறை மேலும் அதிகரித்துவருகிறது. கடந்த சில நாட்களுக்குமுன், மணிப்பூரிலுள்ள ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த சோய்பாம் சரத்குமார் சிங் என்ற மைத்தேயி இனத்தை சேர்ந்த விவசாயி, தனது விவசாய நிலத்திலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு குக்கி இனத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் தான் காரணமாக இருக்குமென்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. அதையடுத்து குக்கி இனத்தவரின் வீடுகளுக்கு தீ வைப்பதும், பதிலுக்கு மைத்தேயி இனத்தவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பதுமாக அப்பகுதி கிராமங்கள் தொடர்ச்சியாகப் பற்றியெரிகின்றன. அதோடு, காவல்துறை வைத்திருந்த சோதனைச்சாவடியும் தீவைத்து தகர்க்கப்பட்டது. இந்த வன்முறையால் வீடிழந்த இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இப்பகுதியில், கடந்த ஜனவரி மாதத்திலேயே குக்கி இனத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால்தான் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 10ஆம் தேதி திங்களன்று, பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிடுவதற்காக ஜிரிபாம் மாவட்டத்தை நோக்கி முதல்வர் பைரன் சிங் வந்துகொண்டிருந்தபோது, கங்போபி மாவட்டம், கோட்லென் கிராமத்தினருகே நடத்தப்பட்ட தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டில், அவரது பாதுகாப்பு வாகனங்கள் தாக்குதலுக்குள்ளாகின. இதில், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்துவருகின்றனர். மீண்டும் மோடி அரசு பதவியேற்று ஒருநாள்கூட நிறைவடையாத நிலையில், மணிப்பூரில் முதல்வரின் வாகனம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆட்சியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத நிலையில், இம்முறையாவது நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிப்பூரைப் போலவே காஷ்மீரிலும் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள ஷிவ்கோரி சிவன் கோயிலுக்கு சுற்றுலா சென்ற பக்தர்களின் பேருந்து, மாலை 6.15 மணியளவில் போனி பகுதியிலுள்ள டெரியாத் என்ற கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த போது, பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் பேருந்து ஓட்டுநர் நிலைதடுமாறியதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்திலிருந்த பக்தர்கள் 10 பேர்வரை பலியாகினர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.
மோடியின் அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்ற நிலையிலேயே அடுத்தடுத்து நாட்டில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள், கடந்த பத்தாண்டுகளில் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்தத் தவறியதை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது. இனியாவது இத்தகைய வன்முறைகளையும், அப்பாவிகள் கொல்லப்படுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.