வட இந்தியாவில் இந்துக்களின் கொண்டாட்டமான பெருந்திருவிழாக்களில் ஒன்று, பூரண கும்பமேளா. அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு நகரங்களில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. கும்பமேளா நடைபெறும் நகரங்களிலுள்ள கங்கை நதியில், விஷேச நாட்களில் புனித நீராடுவதுதான் இந்த கும்ப மேளாவின் சிறப்பம்சமாகும்.
தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருவதால், 4 மாதங்கள் நடைபெறும் கும்ப மேளாவை 3 மாதங்களாகக் குறைத்துவிட்டு, கும்ப மேளாவை நடத்த உத்தரகாண்ட் அரசு அனுமதி வழங்கியது. கும்பமேளா தொடங்கிய ஒரு மாத காலத்திலேயே கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்ததையடுத்து, கொரோனா விதிமுறைகளைக் கடுமையுடன் பின்பற்ற வேண்டுமென்றும், நாளொன்றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்றும் உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், ஹரித்வார் நகருக்கு வந்துசெல்லும் வெளியாட் களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், திட்டமிட்டபடி கொரோனா பரிசோதனை செய்ய முடியவில்லை என்று ஹரித்வார் நகராட்சி தெரிவித்தது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளெல்லாம், ஹரித்வாரில் லட்சக்கணக்கில் குவியும் நிர்வாண சாதுக்களிடம் எடுபடவேயில்லை. முகக்கவசம் அணியாமல் நகரெங்கும் ஊர்வலமாக வலம் வருவது, சமூக இடைவெளியில்லாமல் நெருக்கியடித்தபடி திரிவது என அனைத்து விதிமீறல்களும் நடந்தேறி வருகிறது. இதனால், புனித நீராடும் நாட்களில் மட்டும் கொரோ னாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த மாவட்டத்தில் மட்டுமே 3,612 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டுமே 2,800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் ஏறத்தாழ 2,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மகா நிர்வாணி அகடா என்ற சாதுக்கள் அமைப்பின் தலைமை சீயரான கபில்தேவ்தாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல், ஏப்ரல் 13ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து, அவரோடு தங்கியிருந்த 10,000 பேருக்கு கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதுவரை, கும்ப மேளாவில் கலந்து கொண் டுள்ளவர்களில் 68 சீயர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 33 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிரஞ்சனி அகடா என்ற சாதுக்கள் அமைப்பில், பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், சனிக்கிழமை நீராடலுடன் அவர்கள் புறப்பட ஆயத்தமாயினர்.
கொரோனா பரவல் உச்சத்தை நோக்கிச் செல்வதால், தாமதமாக விழித்துக்கொண்டுள்ள உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத், பொதுமக்கள் கூடும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 200 பேர் வரை மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளார். எனினும், இந்த அறிவிப்பிலிருந்து ஹரித்துவார் கும்ப மேளா புனித நீராடல் நிகழ்ச்சிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளம், ஸ்பா, பயிற்சி வகுப்புகளுக்கு மாநிலம் முழுக்க தடை விதித்துள்ளார்கள். ஜிம், சினிமா தியேட்டர், ரெஸ்டாரன்ட், பார்களில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதித்துள்ளனர். பொதுப்போக்குவரத்தும் 50% பயணிகளுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பியவர்கள், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லையென்று உறுதிசெய்யப்படும்வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, ஹரித்துவாரில் கொரோனா பரவல் மிகமோசமான அளவை எட்டியுள்ளதால், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும், ஹரித்துவாரிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்புவோரைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டாம் அலையின் வீரியம் தெரியாமல் உத்தரகாண்ட் அரசும், மத்திய அரசும், கும்பமேளா விவகாரத்தில் மிகவும் மென்மைப் போக்கைக் கடை பிடித்ததாக நாடு முழுக்க விவாதங்கள் எழுந்ததால், உத்தர காண்ட் பா.ஜ.க., கும்ப மேளா நாட்களை மேலும் குறைத்து, முடித்துக் கொள்வது குறித்து நிர்வாண சாதுக்களின் அமைப்பின ரோடு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே, மேற்கு வங்கத் தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, 5, 6, 7 மற்றும் எட்டாவது கட்டத் தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும்படி மம்தா பானர்ஜி வைத்த வேண்டுகோளை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா-கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் நடைபெறவில்லை. வடநாட்டு பக்தர்களுக்கு ஒரு விதி, தமிழக பக்தர்களுக்கு ஒரு விதியா என இங்குள்ள பக்தர்கள் கேள்வி எழுப்பு கிறார்கள். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே விதமான விதிமுறையைக் கடைப்பிடிப்பதே, இந்தி யர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான வழி.
-தெ.சு.கவுதமன்