பிரச்சாரத்தின்போது தேர்தல் அறிக்கையில் நகைக்கடனாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருந்த தங்கநகைக் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப் படும் என்று அறிவித்தார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்தநிலையில், அதன்படி தற்போது விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஈடாக வைக்கப்பட்ட அவர்களின் நகைகள் கூட்டுறவு கடன் சங்கங்களால் திருப்பித் தரப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதிலுமுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயம் பொருட்டு விவசாயிகள் தங்களின் தங்க நகையை அடமானம் வைத்து விவசாயம் செய்தும், அவர்களால் அடமானம் வைத்த நகைகளை மீட்கமுடியாமல் தவிக்கின்றனர். இதனைக் கருத்தில்கொண்டே தங்க நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது.

gg

கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருவது நடைபெற்றாலும், தென்மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதில், கூட்டுறவு சங்கங்களால் குறிப்பிட்ட தொகைகள் பிடித்தம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து நாம் பரவலாக விசாரித்தபோது தங்களின் அடையாளம் வேண்டாம் என்று மறுத்த விவசாயிகள் நடந்தவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் தங்களின் நகையை வைத்து கடன் பெறும்போது, ஆரம்பத்தில் கூட்டுறவு சங்கங்கள் கடன் தொகையில் 10% வைப்புத் தொகையாக பிடித்தம் செய்து மீதத் தொகையை தருவது வழக்கமாம். குறிப்பாக ஒரு விவசாயி தன்னுடைய நகையை வைத்து 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அந்தத் தொகையில் 10 சதவிகிதமான 10 ஆயிரம் டெபாசிட்டாக பிடித்தம் செய்துகொண்டு 90 ஆயிரமே கடனாகத் தருவார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட விவசாயியோ கடன் தொகை 1 லட்சத்திற்கான வட்டியைக் கட்டியாக வேண்டும். அதேபோன்று 2 லட்சம் கடன் என்றால் டெபாசிட் தொகை 20 ஆயிரம். பிடித்தம் செய்யப்பட்டு 2 லட்சத்திற்கும் வட்டியைக் கட்டவேண்டும். இப்படி பிடித்தம் செய்யப்பட்ட டெபாசிட்களே பல கோடிகள் கூட்டுறவு சங்கங்களுக்குக் கிடைக்கும்.

விவசாயிகளின் இந்த டெபாசிட் களுக்கு கூட்டுறவு சங்கங்கள் முறையான வட்டியும் கொடுப்பதில்லை. இதுதான் நடைமுறையாக இருந்துவந்திருக்கிறது. தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக் கடனின் முழுத் தொகையும் அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தரப்பட்டு விடுகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தின் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளின் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வதுடன் பிடித்தம் செய்யப்பட்ட டெபாசிட்டும் திரும்பத் தரப்பட்டு விடுகிறதாம்.

Advertisment

ff

களக்காடு பகுதிகளில், விவசாயிகளின் நகைக்கடன் பிடித்தம் செய்யாமல் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகளைத் திரும்பப்பெற்று வருகின்றனர் என்கிறார் களக்காடு தி.மு.க. ஒ.செ.வான ராஜன்.

ஆனால் தென்காசி மாவட்டத்தின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகளை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்ற நேரத்தில், குறிப்பாக மாவட்டத்தின் கிடாரக்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் நகைகளை விவசாயிகளிடம் ஒப்படைக்கும்போது, ஆரம்பத்தில் அவர்களின் கடன் தொகையில் டெபாசிட்டாக பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவிகித தொகைகளை திரும்பக் கொடுப்பதில்லையாம்.

தங்களின் டெபாசிட்டைத் திரும்பத் தரும்படி சில விவசாயிகள் கேட்டபோது, அது உங்களின் பங்குத் தொகையாக கணக்கிலிருக்கும், பிற்பாடு நீங்கள் அதன் மூலம் மீண்டும் வரவு செலவைத் தொடங்கலாம் என்று கூட்டுறவு கடன் சங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம். பலர் தங்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதே போதும் என்று திரும்பிவிட... ஒருசில தாட்டியமான விவசாயிகள் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பற்றி விடாப்பிடியாகக் கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு மட்டுமே பிடித்தம் செய்யப் பட்ட டெபாசிட் தொகை திரும்பத் தரப்பட்டுவிடுகிறதாம்.

இதேபோன்ற செயல்பாடுகளே தற்போது கிடாரக்குளம் அதன் பக்கமுள்ள வி.கே.புதூர், ரெட்டியார்பட்டி, ஊத்துமலை உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது என்பவர்கள், இந்தக் கடன் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட 297 விவசாயிகளுக்கு பங்குத் தொகைகள் திருப்பித் தரப்படவில்லை என்கிறார்கள்.

இதுகுறித்து நாம் கிடாரக்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் திருவையாவிடம் கேட்டபோது, “"அரசிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை பற்றி எங்களுக்கு எந்தவித அறிவுரையும் வரவில்லை. அப்படி வந்தால் விவசாயிகளிடம் அந்தத் தொகையை திரும்பத் தருவோம். அந்தப் பங்குத் தொகை அப்படியே இருந்தால் அவர்கள் மீண்டும் இங்கு கடன் பெற்றுக்கொள்ளலாம்''’என்றார் சமாளிப்பாக.

உங்கள் நகைக்கடனின் இவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்படுகிறதே. எங்களையும் கவனியுங்கள் என்று விவசாயிகளிடம் கமிஷன் வசூல் செய்யும் பாலிசியும் நடக்கிறதாம்.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்