மக்களுக்காகப் போராட வேண்டியது எதிர்க்கட்சிகளின் முதன்மைப் பணி. அதன்படி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக்கப்பட்ட அ.தி.மு.க. கடந்த 28-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் தி.மு.க அரசுக்கு எதிரான முதல் போராட்டதை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தொடங்கி முன்னாள் அமைச்சர்கள், மா.செ.க்கள் எனப் பலரும் அவரவர் வீட்டு முன்போ, திட்டமிடப்பட்ட இடத்திலோ கொரோனா காலத்தைக் கணக்கில் கொண்டு போராட்டத்தை நடத்தினர்.
நீட் தேர்வு ரத்து, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை, கல்வி -விவசாய -நகைக்கடன் ரத்து உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இந்தப் போராட்டம் நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்து 100 நாட்கள்கூட ஆகவில்லை. இதற்கு முன் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க.தான். அப்படியிருக்கையில் எதற்கு இந்த அவசரப் போராட்டம்?
முதல்வரான பிறகு, மு.க.ஸ்டாலின் தனது முதல் பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பிறகு மீண்டும் டெல்லி சென்று, சட்டசபையில் கலைஞர் படத்தை திறக்க ஜனாதிபதியை வரவைக்கிறார். தி.மு.க., டெல்லியில் ஸ்கோர் செய்கிறது. நாம் ஜெ.வின் படத்தை சட்டமன்றத்தில் திறக்க இந்திய பிரதமரை அழைத்துவர முடிய வில்லை என்கிற கேலிப்பேச்சுகள் பரவியதால் அ.தி.மு.க. தலைவர்கள் கவலைப்பட்டார்கள்.
இந்நிலையில் எம்.பி.யாக உள்ள ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு டெல்லியில் அமைச்சர்கள் அந்தஸ்திலான ஒரு புதிய வீட்டை மோடி கொடுத்தார். அதற்காக நன்றி சொல்லி அந்த வீட்டிற்கு பால் காய்ச்ச நினைத்து குடும்பத்தோடு மோடியை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்ட ஓ.பி.எஸ். கஷ்டப்பட்டு அப்பாயின்ட்மெண்ட் வாங்கினார். இதை லேட்டாக கேள்விப்பட்ட இ.பி.எஸ். டென்ஷ னானார். உடனே வேலுமணி, ஜக்கி வாசுதேவின் உதவியை நாட., ஜக்கியோ, நிர்மலா சீதாராமன் மூலம் ஓ.பி.எஸ். சந்திக்கும் தினத்தன்றே மோடியிடம் அப்பாயின்ட் மெண்ட் வாங்கினார்.
இருவரையும் பாராளுமன்ற வளாகத்தில் சந்திக்க முடிவு செய்து, மோடியை பாக்கெட்டில் ரோஸ் கலர் பாராளுமன்ற அனுமதி பாஸோடு பத்தோடு பதினொன்றாக சந்திக்க வந்ததைப் பார்த்து அங்கிருந்த எம்.பி.க்களே சிரித்தனர்.
முதலில், ஒன்றாக மோடியை சந்தித்த இருவரும் பிறகு, தனித்தனியாக சந்திக்க அனுமதி கேட்டார்கள். சரி என்ற மோடி, முதலில் எடப்பாடியை சந்தித்தார். எடப்பாடி மேகதாது அணைக்கு தமிழக நலன், நீட் தேர்வு எதிர்ப்பு, தி.மு.க.வின் பழிவாங்கும் நடவடிக்கை என அவசர அவசரமாக தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்த பைலை மோடி பார்க்கக்கூட இல்லை.
எப்படி தோற்றீர்கள் என மோடி கேட்க, எடப்பாடி தோல்விக்கான காரணமாக தி.மு.க. முன்வைத்த பிரச்சாரங்கள் என விளக்கினார். அப்ப உங்க நடவடிக்கைகள் காரணம் இல்லையா? என கேட்ட மோடி, ஓ.பி.எஸ்.ஸுக்கும் இ.பி.எஸ்.ஸுக்கும் நிலவும் கோஷ்டிச் சண்டை, ஊழல், தேர்தல் நேர திருவிளையாடல்கள் இதைப் பற்றியெல்லாம் பேசியதைக் கேட்டு அதிர்ந்து போனார் எடப்பாடி.
சசிகலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும் என அமித்ஷா தன்னிசையாகப் பேசவில்லை. அது பா.ஜ.க.வின் ஸ்டேட்டஜி என விளக்கிய மோடியிடம், தி.மு.க. எங்கள் மீது பாய்கிறது, எங்கள் மீது வழக்குப் போட்டு அழிக்கப் பார்க்கிறது என எடப்பாடி புலம்பினார். நீங்கள் உங்கள் மீது குற்றமில்லையென்றால் சந்தியுங்கள் என கூலாக பதில் சொன்னார் மோடி.
அதன்பின் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் பிரதமர். நீங்கள் என்ன சசிகலாவோடு சேர்ந்து தனி கோஷ்டி நடத்துகிறீர்களா? என மோடி கேட்க... தனது மகனுக்கு மந்திரி பதவி கிடைக்காமல் சதி செய்கிறார்கள் என எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். புகார் சொன்னார்.
இந்தச் சந்திப்புகள் முடிந்த பிறகு, "நான் எதுக்கு சும்மா வந்தேன்' என வேலுமணியும் மற்றவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அதனால்தான், முன்பு பிரதமரை சந்தித்தவுடன் சசிகலாவைப் பற்றி ஆவேசமாக பேசிய எடப்பாடி, இந்த முறை அதைப்பற்றி எதுவும் பேசாமல், செய்தியாளர்கள் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல் நழுவினார்.
பிரதமருடனான சந்திப்பு நிறைவடைந்த போது, "அமித்ஷாவிடம் பேசுங்கள்'' என்று ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இருவரிடமும் தெரிவித்தார் மோடி. ஆனால் அமித்ஷா அ.தி.மு.க.வினரை சந்திக்க விரும்பவில்லை.
நான் சொல்வதை தேர்தல் நேரத்தில் கேட்கவில்லை. இவர்களுடன் என்ன பேச்சு என அமித்ஷா இந்த சந்திப்பில் அக்கறை காட்டவில்லை. ஐந்துமுறை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் மாறி மாறி போன் செய்த பிறகும் அமித்ஷா அதை மதிக்கவில்லை. நிர்மலா சீதாராமனும் முயற்சி செய்தார். அதையும் அமித்ஷா மதிக்கவில்லை. கடைசியில் மோடி வலியுறுத்தி சொன்னதன் அடிப்படையில்தான் அமித்ஷா அவர்களைச் சந்தித்தார்.
மோடியிடம் பேசிய விவரங்களை அமித்ஷாவிடம் ஒப்பித்தார்கள் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும். அவர்களிடம் மோடி சொன்ன பதிலை கோடிட்டுக் காட்டிய அமித்ஷா, நீங்கள் தி.மு.க. வளர்கிறது என்கிறீர்கள். அது வளர்வதற்கு நீங்கள்தான் இடம் கொடுத்தீர்கள் என அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்கு காரணத்தைச் சொன்னார். நீங்கள் ஆட்சியை இழப்பீர்கள் என எங்களுக்குத் தெரியும். அதை நான் உங்களிடம் தேர்தலுக்கு முன்பே சொன்னேன் என்ற அமித்ஷா, சசிகலாவை சேருங்கள், அவருக்கான சீட்டை பா.ஜ.க.விடம் கொடுங்கள் என தேர்தலுக்கு முன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் எடப்பாடியிடம் சொன்னதை ஞாபகப்படுத்தினார்.
அவரிடம் தி.மு.க. தாக்குதல் நடத்துகிறது என இருவரும் புலம்ப... அதை நீங்கள் சந்திப்பீர்கள். அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என நம்பிக்கை தந்த அமித்ஷா, ஒரு கோரிக்கை வைத்தார். பா.ஜ.க.வால்தான் தோற்றோம் என சி.வி.சண்முகம் பேசினார். அதை பொய்யாக்குவதற்கு பா.ஜ.க. தலைவர் முருகனை ராஜ்யசபா உறுப்பினராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்ந்தெடுங்கள். அதற்கேற்ற வகையில் ராஜ்யசபா தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் கமிஷன் மூலமாக ஏற்பாடு செய்கிறேன் என்கிற அமித்ஷாவின் கட்டளைக்கு தலையாட்டிவிட்டு வந்தார்கள் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும்.
தமிழகம் திரும்பியதும் எடப்பாடி, சசிகலாவைப் பற்றி பேசவில்லை. சசிகலாவுடன் தொடர்பு வைத்திருக்கும் ஓ.பி.எஸ்ஸோ., சசிகலாவால் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது என பதில் சொன்னதற்குக் காரணம், நீங்கள் சசிகலாவுடன் சேர்ந்து தனி கோஷ்டி நடத்துகிறீர்களா? என மோடி கேட்ட கேள்விதான் என டெல்லியில் நடந்தது பற்றியும் அதன் தமிழக விளைவுகள் பற்றியும் விளக்கினார்கள் அ.தி.மு.வினர்.
எஸ்.பி.வேலுமணி, நான் ஜெயிலுக்குப் போகத் தயார், ஜெ.வே ஜெயிலுக்குப் போய் வந்தவர் என பேசியதற்குக் காரணம், உங்கள் மீதான ஊழல் வழக்குகளை நீங்களே சந்தியுங்கள் என டெல்லி சொன்னதன் எதிரொலிதான். அதேநேரத்தில் தி.மு.க. வளர்வதற்கு நீங்கள் இடம் கொடுக்காதீர்கள் என டெல்லி சொன்னதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஒரு மின்னல் வேக ஆர்ப்பாட்டத்திற்கு வெயிட்டாக கலந்துகொண்டு அ.தி.மு.க. ஆக்டிவ்வாக இருக்கிறது என டெல்லிக்கு காட்டியிருக்கிறார்கள் இருவரும்.
டெல்லிக்குச் சென்ற எடப்பாடியும் பன்னீர்செல்வமும் மோடி -அமித்ஷாவிடம் மூக்குடைந்து போய் திரும்பி வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வர்கள். மொத்தத்தில்... தி.மு.க.வின் தாக்குதல் அ.தி.மு.க.வை பாதித்திருக் கிறது என சொல்லிச் சிரிக்கிறார்கள் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருக்கும் வேண்டிய நிர்வாகிகளே.