இசை பெரிதா? மொழி பெரிதா? என்று அக்னி நட்சத்திரத்தை விட அதிகம் தகிக்கிறது அறிஞர்கள் உலகம்.
இந்நிலையில்... பூவை.அமுதன் அவர்கள் பழம் இலக்கியங்களைப் படித்து எழுதிய கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
என் நண்பர்களே, மொழி பெரிதா? இசை பெரிதா? என்பதற்கு அன்றே ஒரு தீர்வைச் சொன்னாள் ஔவைப் பாட்டி.
அது என்னவென்று பார்ப்போம்!
ஒரு சமயம் சோழப் பேரரசன் புலவர்களை வரவழைத்துப் பெரிய விருந்து கொடுத்தான். புலவர் பெருமக்கள் விருந்துண்டு களித்தனர், அப்போது மன்னன் கம்பரை நோக்கி "உலக இன்பங்களில் சிறந்தது எது புலவர் பெருமானே!'’என்று வினவி னான்...
அவன் வினாவிற்கு கம்பர் எளிய கவிதை ஒன்றை பாடி விடையளித்தார்.
கங்கைநீர் அதனின் மிக்க கடவுள்நீர் எங்கும் இல்லை
வெங்கதிர் ஒளியே யன்றி வேறு ஒளிர் ஒளியும் இல்லை
எங்கணும் தாயைப் போல இனியதோர் உறவும் இல்லை
மங்கையர் சுகமே யன்றி மறு சுகம் இல்லை மன்னா!!
என்று கம்பர் பாடிய பாட்டை அரசன் வெகுவாய் புகழ்ந் தான். அதனை அங்கிருந்த ஔவையார் கேட்டு நகைத்தார். காரணம் புரியாமல் குழம்பினான் மன்னன்!
"மன்னா! இவர் பாட்டு உமக்குத் தவறான பதிலை தந்திருக்கிறது''’என்றார் ஔவையார்.
"அப்படியா! கம்பர் பாட்டில் என்ன தவறு கண்டீர்?''”
உடனே ஔவையார் பாட ஆரம்பித்தார்...
விண்ணினின் மழையே யல்லால் வேறொரு நதியும் இல்லை
கண்ணினின் ஒளியே யல்லால் காணும் ஓர் ஒளியும் இல்லை
எண்ணிடிற் பொருளைப் போல
இனியதோர் உறவும் இல்லை
உண்ணிடிற் சுவையே அல்லால்
ஒரு சுகம் இல்லை மன்னா!!
என்று ஔவையார் பாடக் கேட்டதும் சோழன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டான். கம்பர் எதுவும் கூறாமல் மௌனமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.
"கம்பர் பெரிய புலவர் அல்லவா? அவரைப்போல் பெரிய காப்பியம் படைக்கும் ஆற்றல் பெற்ற கவிவாணர்கள் உள்ளார்களா?''’என்று வினவினான் சோழன்.
கம்பர், கவிச்சக்கரவர்த்தி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தான்தான் என்ற எண்ணம் அவருக்கு இருக்கக்கூடாது என்று பாடியுள்ளார்.
அக்கேள்விக்கு விடையாக ஔவையார் பாடினார்.
வான்குருவியின் கூடு,
வல்லரக்குத் தொல்கறையான்
தேன் சிலம்பி யாவர்க்கும்
செய் அரிதால் லியாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண்.
எல்லோருக்கும் ஒவ்வொன்றும் எளிது.
கறையான் புற்றெடுப்பது, சிலந்திப்பூச்சி வலை விரிப்பது, ஈக்கள் தேன்கூடு கட்டுவது, தூக்கணாங்குருவி வீடு கட்டுவது போல் எல்லோருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.
இதில் யாம் பெரியவன் என்று யாரும் சொல் வது அறியாமை என்பதை ஔவைப் பாட்டி அறிவுறுத்தியிருக்கிறார்.