தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாகின்றன. தேர்தல் களத்திற்கு கட்சியினரை விரைவுபடுத்த முன்னணிக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. முனைப்புடன் செயல்படுகின்றன.
கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக தென்காசி மாவட்டத்திற்கான தி.மு.க.வின் உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றாலம் வந்தார். அங்கு மாவட்ட தி.மு.க.வின் நிர்வாகிகள் அனைவரையும் வரவழைத்து, வியூகங்கள் மற்றும் செலவிற்கான தொகைகள் பற்றிய விஷயங்கள் வரை விரிவாகப் பேசி கட்சியினரை விரைவுபடுத்திவிட்டுப் போயிருக்கிறார்.
அதேபோன்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும், ஒவ்வொரு மாவட்டமாக கட்சியினரை வேகப்படுத்த விசிட் போகிறார். செப்-24 அன்று தென்காசி மாவட்டத்தில் போட்டியிடுகிற அ.தி.மு.க.வின் அனைத்து உள்ளாட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளின் தேர்தல் ஆய்வுக் கூட்டத்திற்காக சங்கரன் கோவில் நகரம் வந்த எடப்பாடியுடன் மாவட்ட அ.தி.மு.க.வின் பொறுப் பாளர்களான எக்ஸ் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன்வந்தனர். உள்ளாட்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஆய்வு மண்டபத்தில் திரண்டிருந்தனர்.
அவர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.விற்கு எதிரான விஷயங்களையே ஆயுதமாக்கிக் கொண்டு தேர்தல் களமிறங்க பூஸ்ட் செய்திருக்கிறார்.
கிராமப்புறங்களில் நமக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் கடுமையாக உழைக்கவேண்டும். ஏனெனில் நாம் கிராமப்புறங் களுக்குதான் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து அவர்களுடன் நெருக்கமாக பழகுங்கள். அவர்களின் தேவைகளைப் நிறைவேற்றினால்தான் நமக்கான செல்வாக்கு பெருகும். கட்சி வலிமை பெறும்.
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளைப் பெற்றுவந்தது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 525 அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் பெயருக்கு 2, 3, திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. நாம் கொண்டுவந்த தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல திட்டங்களை விதிமுறைகளைக் காரணம் காட்டி மக்கள் பயன்பெறாத வகையில் திட்டங்களைக் கைவிட்டது. இதனை மக்களிடம் நாம் கொண்டுசெல்ல வேண்டும். நிச்சயம் வெற்றிபெறுவோம் என்று தேர்தல் களத்திற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதைத் தொடர்ந்து எடப்பாடியிடம் வந்த மேலநீலிதநல்லூர் கி.கழக பொறுப்பாளரான பழனிசாமி, எங்கள் ஒன்றியத்தின் 8-வது வார்டு யூனியன் கவுன்சிலர் வேட்பாளராக கட்சியால் முறையாக அறிவிக்கப்பட்டவர் ராஜலட்சுமி. ஆனால் நம் கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, கட்சியின் வேட்பாளரை எதிர்த்து தனது உதவியாளர் ஆதிராமின் தாயாரான லட்சுமி என்பவரை நிறுத்தி, அவரை யூனியன் சேர்மனாக ஆக்குவதற்கான அத்தனை செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். கட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி என்று கடுமையாகப் புகார் செய்திருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி, அதற்கான விளக்கத்தைப் பெற முற்பட்டபோது, பரபரப்பான மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், கடம்பூர் ராஜும், அந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த, அவர் நெல்லை மாவட்ட தேர்தல் ஆய்வுக்கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்.
தென்காசியைப் போலவே, நெல்லை மாவட்ட தேர்தல் ஆய்வுக்கூட்டத்திலும் மாவட்ட உள்ளாட்சி வேட்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, தேர்தலுக்கு அடிப்படை மற்றும் பிற செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. பணமில்லாமல் எந்த ஒரு தேர்தல் வேலையும் நடக்காது. நமது வேட்பாளர்கள் ஓரளவு செலவு செய்ய தகுதியானவர்கள் என்றாலும், பிற செலவுகளுக்கு கட்சி பணம் கொடுத்து உதவினால்தான் காரியமாகும் என்று தெரிவித்திருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியோ, தேர்தல் செலவுகளை வேட்பாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதுதானே என்றதும், அது ஒரு விவகாரமாக அலசப்பட... பின்பு ஒருவழியாக கட்சியும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.