இன்றைய சமூகத்தை விருந்து மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. சமீப காலமாக கிராமம் முதல் நகரம் வரை, அதிகப்படியான மக்கள் ஓட்டல் உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். தேசிய நெடுஞ் சாலைகளில் பயணம் செய்பவர்களைக் கூட, சாலையோர உணவகங்கள் வலுக்கட்டாயமாக சாப்பிட அழைக்கின்றன. இதற்காக அந்த உணவகங்கள் முன்பாக பல நிறத்தில் வண்ணக் கொடிகள், அலங்கார விளக்குகளுடன் ஆட்கள் நிறுத்தப்படுகின்றனர். இப்படி வருந்தி, வருந்தி அவர்கள் அழைப்பது, ஆபத்தை நோக்கி என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அண்மையில் நடந்த அதிரவைக்கும் சம்பவம் இது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ளது புலியூர் கிராமம். இங்கு வசிக்கும் ஒரு இளைஞருக்கும் பள்ளி நீரோடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த மே 3ஆம் தேதி, குள்ளஞ்சாவடியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் காலை உணவை இரு வீட்டைச் சேர்ந்தவர்களும் சாப்பிட்டுள்ளனர். அவர்களில் புலியூரைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி, ராஜ் குமார், சுதாகர், உக்கிரமூர்த்தி, கண்ணன், பழனிவேல், சிகாமணி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள், கொஞ்ச நேரத்திலேயே வாந்தி பேதி ஏற்பட்டு, கடலூர், குள்ளஞ்சாவடி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் கல்யாண வீடே களேபரமானது.
இதில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருவேங்கடம், நாராயண சாமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். மற்றவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருமண விருந்து சாப்பிட்டதில் வாந்தி பேதி ஏற்பட்டு இரண்டுபேர் உயிரிழந்த சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, "திருமண விருந்து உணவு கெட்டுப்போயிருக்க லாம் அல்லது குடிநீரில் கழிவுநீர் கலந்திருக்கலாம். இதனால் வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது” என்று கூறுகின்றனர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த திருவேங்கடத்திற்கு வயிற்றுப்போக்கு அதிகளவு ஏற்பட்டதால் உட லில் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்ததால் சிறுநீரகம் பாதிப்படைந்து உயிரிழக்க நேரிட்டுள்ளது என்றும், நாராயணசாமி என்பவருக்கு வயிற்றுப்போக்கோடு இதயத்தின் ரத்த ஓட்டம் குறைந்து போனதால் அவரும் உயிரிழந்ததாக'' தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து குள்ளஞ்சாவடி காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
திருமண வீட்டினர் தரமான உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து கடந்த காலங்களில் மக்கள் சாப்பிட்டது போல் எளிதில் ஜீரணிக்கக்கூடிய எளிமையான உணவுகளை சமைத்து பரிமாறவேண்டும். ஆனால் இன்று நம் உணவுக் கலாச்சாரமே முற்றாக மாறிவருகிறது. பெரும்பாலானவர்கள் இப்போது வீட்டு உணவைத் தவிர்த்துவிட்டு, மாடர்ன் விளம்பரங்களோடு அழைக்கும் ஓட்டல்களை நாடி, விரும்பிச் சென்று சாப்பிடுகிறார்கள். ஓட்டல் உணவை நாடுவோர்கள் அதிகமானதால், இன்று எங்கு பார்த்தாலும் ரெஸ்டாரண்டுகள் முளைத்தபடியே இருக்கின்றன. இப்படி ஓட்டலைத் தேடிச் செல்லும் ஆவலை, தனியார் தொலைக்காட்சிச் சேனல்களின் சமையல் நிகழ்ச்சிகளும், சில யூடியூபர்களின் நிகழ்ச்சிகளும் தூண்டிவருகின்றன. இதனால் உணவு மோகம் தலைக்கேறி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஓட்டல்களிலும் ரெஸ்டாரண்டுகளிலும் மொய்க்கிற கலாச்சாரமும் நம்மவர்கள் மத்தியில் தாறுமாறாகப் பெருகிவருகின்றன. விதவிதமான பெயர்களில் அரைவேக்காடு அசைவ உணவுகளையும், சிலர் மக்களிடம் அள்ளிக்கொட்டி அவர்கள் தலையில் கட்டிவருகிறார்கள். ஏதோ ஒருசில இடங்களில் ஆரோக்கியமான விருந்துகள் நமக்காகக் காத்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் காத்திருப்பது என்னவோ, பயமுறுத்தும் டேஞ்சரஸ் உணவு வகைகள்தான்.
இப்படிப்பட்ட உணவு வகைகள் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்? இதுபோன்று சமைப்பது சரிதானா? என நமக்குத் தெரிந்த ஒரு சமையல் கலைஞரிடம் கேட்டோம்.
"நாக்குக்கு சுவையாக சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பல கிலோமீட்டர் தூரம் வாகனங்களில் சென்று சாப்பிடுகிறவர்கள் ஏராளம்.… அதற்கு முக்கிய காரணம் நாக்கு கேட்கும் அதீத சுவைக்கு அடிமையாவதுதான். கேட்டரிங் டெக்னாலஜி படித்துவிட்டு சுவையாக சமைப்பதற் கென பலர் குழுக்களாக உள்ளனர். அவர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அவர்களிடம் நாம் என்னென்ன உணவு ஐட்டங்கள் தேவை என்பதைக் கூறியவுடன் அதற்குத் தேவையான மளிகைப் பொருட்களை அச்சடித்த லிஸ்ட் போட்டுக் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் லிஸ்ட் களில் மனிதர்களின் வயிற்றுக்கு ஆபத்தை விளைவிக்கும் அஜினமோட்டா, சோடா உப்பு, எசன்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், இயற்கையாகப் பருப்பு வேகவைக்க விளக்கெண்ணெய் சேர்ப்பதுண்டு. அதேபோல் நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் தற்போது அதற்கும் எசன்ஸ் உள்ளது. இது மட்டுமல்ல சாம்பார், ரசம், பிரியாணி உட்பட ஒவ்வொரு ஐட்டங்களுக்கும் சுவை கூட்டுவதற்கு என்றே பலவிதமான எசன்ஸ்கள் வந்துவிட்டன. அரிசிச் சோறு வெண்மையாக இருக்க, இட்லி வெண்மையாகவும், பூப்போல் மென்மையாகவும் இருக்க சோடா உப்புகள் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றைப் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு விதமான வயிற்று உபாதைகள் நிச்சயம் ஏற்படும். சாப்பிட்ட உடனே கழிவறைக்குப் போகவேண்டும் என்ற உணர்வைத் தூண்டும். காரணம் அந்த உணவின் மோசமான தன்மையே. எங்களைப் போன்றவர்கள் திருமணம் உட்பட பல விசேஷங்களுக்கு சமையல் செய்ய ஆர்டர் கொடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் இது போன்ற தேவையற்ற ஐட்டங்களைச் சேர்க்கக் கூடாது. இது மனித உடல்களுக்கு ஆபத்து என்பதை எடுத்துக்கூறி தவிர்த்துவிடுவோம்.
அதனால் நாங்கள் இயற்கையான முறையில் சமையல் செய்து மனிதர்களுக்கு கெடுதல் இல்லாத உணவுகளையே தயாரித்து வழங்கி வருகிறோம். அதேபோல் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முதல்நாள் வரவேற்புக்கு தயார் செய்யும் டிபன் சாம்பார் வகைகள் மீந்துபோகும். அதை ப்ரிஜில் வைத்து மறுநாள் காலையில் டிபனுக்கு பயன்படுத்து வார்கள், இது விஷமாக மாறி சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் திருமண விருந்து, ஓட்டல் போன்றவை களில் சாப்பிடுவதை தவிர்க் கிறார்கள்''”என்றார் விரிவாகவே.
"சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் போன்ற விருந்துக்கூடங்களில் பூசணிக்காய் சாம்பார்தான் பிரதானமாக இருக்கும். இன்றோ நமக்கு முட்டைக்கோஸ் மற்றும் உருளைக் கிழங்கைத் தவிர வேறு காய்கறிகளை மறந்தேவிட்டோம். பிரிட்டிஷாரின் உணவு வகை இது என்பது தற்போதைய தலைமுறைக்கு கூட தெரியாது. பாரம்பரிய காய்கறிகளான பீர்க்கங்காய், புடலை, முருங்கைக்காய், கத்தரிக்காய், சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மிதி பாகல், கொத்தவரங்காய், சுண்டைக்காய் உள்ளிட்ட ஏராளமான நாட்டுக் காய்கறிகளைப் பயன்படுத்தி சமைத்திட சமையல் கலைஞர்கள் முன்வர வேண்டும். பாரம்பரிய அரிசி ரகங்களான பிரியாணி அரிசி, சீரக சம்பா சாப்பாடு ரகங்களான ஆத்தூர் கிச்சலி சம்பா, ரத்தசாலி, கொத்தமல்லி சம்பா, தூயமல்லி, சேலம் சன்னா, சித்த சன்னா, சின்னாறு, அறுபதாம் குறுவை உள்ளிட்ட அரிசி களையும் பயன்படுத்த முன்வர வேண்டும்'' என்கிறார் இயற்கை மருத்துவர் அரியலூர் தங்க சண்முகசுந்தரம்.
சமீபகாலமாக மக்களும் சமையல் கலைஞர் களும் சுவை கூட்டிகளைச் சேர்த்து பல்வேறு இரசாயனங்கள் கலந்த கலர் கலர் பொடிகளைக் கலந்து, உணவுகளை தயாரித்து வழங்குவதனை பேஷனாகக் கருதுவதுடன் உயிரோடு விளையாடுவதனை சகஜமாக்கிவிட்டனர்.
கிராமத்தில் இடித்து விளக்கெண்ணெய் பயன்படுத்திய பக்குவப்படுத்ததிய புளி உடலுக்கு நல்லதையே செய்யும். பலருக்கு ஒவ்வாமை யாக இருப்பது பக்குவப் படுத்தாத புளியே. அது நெஞ்சுக்கரிப்பு, வாந்திக்கு முக்கிய காரணமாக உள்ளது. பெரிய செலவுகளை செய்வதாக எண்ணிக்கொண்டு பாயாசம் தயாரிக்க கெமிக்கல் உணவை, வேகவைக்க கெமிக்கல், இனிப்பு வகைகள் தயாரிக்க, சுவை கூட்டும் கெமிக்கல் தடை செய்யும் சட்டம் உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்படும்''’என்கிறார் திருமானூர் மூலிகை மருத்துவர் கிருஷ்ணகுமார்.
விருந்து மண்டபங்களிலும், ரெஸ்டாரண்ட் ஓட்டல்களிலும் சாப்பாட்டு மேஜைமுன் உட்காருகிறவர்கள், தங்கள் எதிரே பரிமாறப் படுவது விருந்தா? விருந்து வடிவத்தில் இருக்கும் ஆபத்தா? என்று ஒரு கணம் யோசித்துப் பார்த்தால், ஆபத்துக்களிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.