கடலூர் மாவட்டம் நல்லாத்தூரைச் சேர்ந்தவர் தி.மு.க. நிர்வாகி மணிவண்ணன். கடலூர் - புதுச்சேரி எல்லை கிராமமான நல்லாத்தூரில் 09-ஆம் தேதி மாலை மணிவண்ணன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற் காக கடலூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் இரவு 7.45 மணியளவில் மண்டபத்திற்குச் சென்றார். அங்கே பீர்பாட்டில் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிவண்ணன் குடும்பத்தினர், ஐயப்பன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை வரவேற்று மண்டபத் திற்குள் அழைத்துச்சென்றனர். மண்டபத்தில் நுழைவுவாயில் அருகே நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக மேஜை அமைக்கப்பட்டு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. ஐயப்பனுடன் வந்தவர்கள் மண்டபத்தின் மேல்மாடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, கீழே சாலையிலிருந்து வரவேற்புப் பகுதியில் திடீரென பீர் பாட்டில் ஒன்று பறந்துவந்து விழுந்து வெடித்தது. இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறியோடினர்.
தகவல் தெரிந்து ஐயப்பனும் அவரது ஆதரவாளர்களும் கீழேவந்து நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். மேலும், அனைவரையும் பத்திரமாக மண்டபத்திற்கு அழைத்துச்செல்லுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதேசமயம் எம்.எல்.ஏ. ஐயப்பனை தி.மு.க.வினர் பாதுகாப்பாக அங்கிருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மர்ம நபர்கள் வீசியது பெட்ரோல் குண்டு என முதலில் கருதப்பட்டது. விசாரணையில், மண்ணெண்ணெய் நிரப்பிய பீர்பாட்டில் எனத் தெரிந்தது.
கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் இரவு 11 மணிக்கு கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரிலுள்ள எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்று விசாரித்தனர். ஐயப்பன் எம்.எல்.ஏ. வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
ஐயப்பன் எம்.எல்.ஏ.வை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது நிகழ்ச்சி நடத்தியவருடனான முன்விரோதமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களிடம் பேசியபோது, "ஐயப்பன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அரசு விழா, கட்சி நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ளாமல் இருந்தார். தற்போது ஓரளவுக்கு உடல்நலம் தேறியதால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றார். ஆனால் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை'' என்றனர்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராமிடம் கேட்டதற்கு,
"குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மிக விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படு வார்கள்'' என்றார்.