டேன் டீ நிறுவனத்தை வனத்துறையிடம் ஒப்படைக் கக்கூடாது என்று தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கை தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிக்கும் வேலைக்குச் சென்று, மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டதுதான் டேன் டீ திட்டம். அறிஞர் அண்ணா உருவாக்கிய திட்டத்தை, கலைஞர் விரிவுபடுத்தினார்.
இதில், நடுவட்டத்தில் நான்கு தோட்டங்கள், மேலும், கூடலூர், குன்னூர், கோத்தகிரி, வால்பாறை என மொத்தம் எட்டு இடங்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அப்படி நடுவட்டத்தில், ஊகர், பன்னீர்சோலை, நடுவட்டம் சரகம் 2, சரகம் 3 ஆகிய இடங்களில் தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. அதேபோல, கூடலூரிலும் பாண்டியார், ஜெவலா, சேரன்கோடு ஆகிய இடங்களில் தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலைத் தோட்டங்களுக்கென 6 தொழிற்சாலை இயங்கிவருகின்றன. இதுமட்டும் இல்லாமல் அரசு தேயிலைத் தோட்டம் தொடங்கி, டீத்தூளாக பேக்கிங் செய்து விற்பனையாவது வரை அனைத்துப் பணிகளையும் செய்கிறது.
பல்வேறு அரசுத் துறைகள் நட்டத்தில் இயங்கியபோதும், தொடக்கத்தில் டேன் டீ நிறுவனம் மட்டும் லாபத்திலேயே இயங்கிவந்தது. இந்நிலையில், டேன் டீ நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் செய்து மோசமான நிலைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகிறார்கள் தொழிலாளர்கள். டேன் டீ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. தேயிலைச் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்க முடியாத காரணத்தால், சுமார் 240 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதிக்காக சில பகுதி நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் 2,152 ஹெக்டேர் அளவுள்ள வால்பாறை, நீலகிரி நடுவட்டம் ஆகிய இரண்டும் வனத்துறைக்கு கொடுக்கப்படவுள்ளன.
இரண்டு தோட்டப்பகுதிகளையும் வனத்துறைக்கு வழங்குவதற்கு, நஷ்டத்தில் இயங்குவதும், விலங்குகளின் தாக்குதலுமே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் கூ- 350 ரூபாய் என்பது அவர்களின் உழைப்பைவிடக் குறைவான தொகை யாகும். எனவே நஷ்டத்துக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பில்லை. ஆனால், டி.எம். தொடங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரை, 45 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை மாதச்சம்பளமாக வாங்குகிறார்களாம். தளவாடப் பொருட்கள் வாங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளது. டேன் டீ தேயிலையை தனியார்களுக்கும் குறைந்த விலைக்கு விற்றுள்ளார்கள். அரசுக்கு 209 ரூபாய் விலைக்கும், தனியாருக்கு 180 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர். 2018 -2021 வரை எம்.டி.யாக செயல்பட்ட சீனிவாச ரெட்டி, அதன்பின்னர் எம்.டி.யான மஞ்சுநாத் ஆகியோரின் நிர்வாகச் செயல்பாடுகளை தணிக்கைக்குழு விசாரித்தால் ஊழல் வெளிப்படும் என்கிறார்கள்.
அடுத்ததாக, விலங்குகளின் தாக்குதல் குறித்து ஆய்வுசெய்தால், முக்கூர்த்தி நேஷனல் பார்க்கிலிருந்துதான் புலிகள், நடுவட்டம் தோட்டங்களுக்கு வரக்கூடும். அப்படி வருவதாக இருந்தால், இரண்டுக்கு மிடையே உள்ள கே.சி.பழனிச்சாமியின் டெரஸ் எஸ்டேட், மகாவீரர் எஸ்டேட், கிளெமோர்கன் எஸ்டேட் ஆகியவற்றைக் கடந்துதான் நடுவட்டம் பகுதிக்கு வரவேண்டும். அப்படி யானால், இடைப்பட்ட இந்த பகுதிகளுக்கெல்லாம் புலிகளால் பாதிப்பு இல்லாதபோது, நடுவட்டத்தில் மட்டும் புலிகளால் பாதிப்பு ஏற்படுவதை எப்படி நம்புவது? மேல்மட்டத்து மோசடிகளை, எம்.டி. யாக இருந்த சேவாசிங் என்பவர் கண்டறிந்து, களையெடுக்கும் வேலையில் இறங்கவும், ஒரே மாதத்தில் அவரை இடமாற்றம் செய்தார்கள். மிகுந்த சுவையோடிருக்கும் நடுவட்டம் தோட்டத்து தேயிலை மீது கண்வைத்த தனியார் நிறுவனங்கள், அதனை வாங்க முற்பட, அதற்கு சேவாசிங் தடையாக இருந்ததால் அவரை மாற்றிய வனத்துறை அமைச்சர், வெங்கடேஷ் என்பவரை நியமித்துள்ளார்.
இதுகுறித்து எம்.டி. வெங்கடேஷிடம் கேட்டபோது, "நான் தற்போதுதான் வந்துள்ளேன். டேன் டீ நிறுவனத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கக்கூடாது என்று தொழிலாளர்கள் மத்தியில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டேன் டீ நிறுவனத்தை வனத்துறையிடம் ஒப்ப டைக்கக்கூடாது என்றும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரிக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து பேசிய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், "டேன் டீ நிறுவனத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. இதனை தணிக்கைக் குழு விசாரிக்கவேண்டும். அதேபோல இங்குள்ள மக்கள், இந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்பதால் இதனை வனத்துறைக் குக் கொடுக்காமல் அந்த மக்களுக்கே நிலமாகக் கொடுத்தால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும்'' என்றார்.