கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடலூர் பாராளுமன்றத் தொகுதியில், கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. எப்படியும் இந்த முறை சீட்டைப் பெற்றே தீர வேண்டுமென்று முன்னணிக் கட்சியினர் மத்தியில் பலத்த முட்டல் மோதல்கள், திரைமறைவு வேலைகள் நடைபெற்று வருகின்றன. கட்சித் தலைவர்களைப் பார்ப்பது, பூங்கொத்து கொடுப்பதெனத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள் கட்சி முன்னோடிகள்.
ஆளுங்கட்சியான தி.மு.க.வில் சீட்டுப் போட்டிக்கு ஏராள மானவர் மோதுகிறார்கள். தி.மு.க.வின் அரசியல் வரலாற்றில் இந்த முறை அதிக தொகுதிகளில் தி.மு.க. வின் மூன்றாவது தலைமுறை வாரிசுகள் எம்.பி. தேர்தல் களத்தில் குதிக்க உள்ளனர். அந்த வரிசையில் கடலூர் தொகுதியில் தி.மு.க.வின் மாவட்ட பொருளாளர் பதவியி லிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் புதல்வர் கதிரவன் பெயர் பரபரப்பாக அடிபடுகிறது. எம்.ஆர்.கே. கல்விக் குழுமத்தை நடத்திவரும் இவர், கட்சியினரிடம் அவ்வப்போது பழகி வருகிறார். அதே நேரத்தில் அவரது தந்தை, கட்சியின் கடைசித் தொண்டன் வரை பிணைப்பில் இருப்பவர். அவரைப்போல் கதிரவனும் இன்னும் அதிக அளவில் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் இறங்கி வர வேண்டும். தங்கக் கூண்டுக்குள் இருக்கும் கிளி போல இருக்கும் கதிரவன், கூண்டை விட்டு பறந்து வந்து மக்களையும், கட்சியினரையும் சந்திக்க வேண்டும். தந்தையின் பலமே இவரது பலம் என்ற எண்ணத் தில் கதிரவன் இருக்கக்கூடாது என்கிறார்கள் தொண்டர்கள்.
சீட்டு போட்டிக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள் மேலும் பலர். அதில். விருத்தாசலத் தொகுதி மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன் மகளும் விருத்தாசலம் நகர மன்றத் தலைவருமான டாக்டர் சங்கவி முருகதாஸ், மருத்துவத் தொழில் மூலம் மக்களுக்கு நல்ல அறிமுகமாகி, எப்போதும் மலர்ந்த முகத்துடன் கட்சியினருக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். மறைந்த எக்ஸ் எம்.எல்.ஏ. விருத்தாசலம் செல்வராசு தம்பி மகன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார். சட்டமன்றத் தொகுதியில் வாய்ப்பு கேட்டவருக்கு கிடைக்கவில்லை. எம்.பி. சீட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற துடிப்பிலுள்ளார். அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக இருந்துவரும் விருத்தாசலம் எக்ஸ் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கடலூர் தொகுதி சிட்டிங் தி.மு.க. எம்.எல்.ஏ. ஐயப்பனின் வாரிசு டாக்டர் பிரவீன், மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், மருத்துவர் அணி டாக்டர் கலைக் கோவன் ஆகியோர் போட்டியில் உள்ளனர். மேலும், தென் சென்னை தொகுதியை மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசனுக்கு வழங்க கட்சித்தலைமை ஆலோசித்து வருவதாகவும், அந்த நிலை ஏற்பட்டால் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக உள்ள தமிழச்சி தங்கபாண்டியனை கடலூரில் களமிறக்க வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.
இப்படி பண பலம், படைபலம் படைத்த பலரும் சீட்டுக்கு மோதுகிறார்கள். மாவட்டச் செய லாளர்கள் அமைச்சர்களான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.கணேசன் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையிலேயே யாருக்கு சீட்டு என்பது முடிவு செய்யப்படும் என்ற நிலை கட்சியில் உள்ளது. எது எப்படியோ, கடந்த ஐந்தாண்டு காலம் கடலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் எம்.பி.யாக தேர்ந் தெடுக்கப்பட்டவர் பண்ருட்டி தொழிலதிபர் ரமேஷ். அப்படி ஒரு எம்.பி. இருந்தாரா? என்ற அடையாளமே தெரியாமல் போனது. அது போன்று இல்லாமல், மக்களோடும், கட்சியின ரோடும் அறிமுகமான, மக்கள் பணி செய்யும் ஒருவரை தி.மு.க. தலைமை இந்த முறையாவது களமிறக்க வேண்டும் என்கிறார்கள் தி.மு.க. கட்சித் தொண்டர்கள்.
ஆளுங்கட்சிக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்களென்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விலும் சீட்டு போட்டி கடுமையாகவே உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மகன் பிரவீன், தந்தையின் பின்பலத்தை நம்பி சீட்டுப் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளார். கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல். ஏ.வுமான சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன், விருத்தாசலம் முன்னாள் நகர செயலாளர் ஒன்றிய சேர்மன் அருள் அழகன், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ஆலடி ரவிச்சந்திரன் ரெட்டியார், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கடலூர் பால கிருஷ்ணன் எனப் பலர் முட்டி மோதுகிறார்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் கடலூர் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று குறிவைத்துள்ளது பா.ம.க. அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் இங்கு நிற்க வேண்டும் என்ற கட்சி முன்னோடிகளின் விருப்பத்தை அன்புமணி நிராகரித்துவிட்டாராம். அவருக்கு பதில் பசுமைத் தாயகம் அமைப்பை நடத்திவரும் அன்புமணி மனைவி சௌமியா அன்புமணியை இந்த தொகுதி யில் நிறுத்த வேண்டும் என்று அன்புமணிக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மற்றபடி, யாருக்கு சீட்டு என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவரும் விருத்தாசலம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கோவிந்தசாமியின் முடிவுக்கு கட்சி விட்டு விடும். கடந்த முறை போட்டியிட்டு தோல்வி யைத் தழுவிய டாக்டர் கோவிந்தசாமியே இந்த முறையும் களம் காண்பார் என்ற நிலை உள்ளது. இருந்தும் கட்சியினர் மத்தியில் கோவிந்தசாமியின் மகன் டாக்டர் மகேந் திரனை களம் இறக் கினால் நன்றாயிருக்கு மென்ற விவாதம் நடை பெறுகிறது. அன்புமணி யுடன் நெருக்கமாக இருக்கும் கல்வி நிறு வனர் சுரேஷ், புவனகிரி சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியுற்ற ஊத்தங்கால் பேரா சிரியர் அசோக்குமார், இப்படி சிலரும் கட்சித்தலைமை அனுமதித் தால் போட்டியிடலாம் என்ற ஆசையில் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் தொகுதியை கேட்டுப் பெறுவதற்கான முயற்சியில் உள்ளனர். அப்படி தொகுதி கிடைத்தால் அதில் கட்சித் தலைவர் வேல் முருகனின் சகோதரர் திருமால்வளவன் போட்டியிடத் தயாராக உள்ளாராம். இவர், அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளில் கிராமப்புறப் பட்டதாரிகள் வெற்றி பெறுவதற் கான பயிற்சி மையங் களை 15 ஆண்டுகளாக இலவசமாக நடத்தி வருகிறார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் இருந்துவருகிறார். கூட்டணி சார்பில் சீட்டு கொடுத்தால் திருமால்வளவன் போட்டியிடத் தயார் என்கிறார்கள் வாழ் வுரிமைக் கட்சித் தொண்டர்கள்.
தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியும் சீட்டைப் பெறும் முயற்சியில் உள்ளது. இதில் கடந்த 2014, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றவர், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் மீண்டும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளதா என்று கட்சியினர் மத்தியில் நாம் விசாரித்த அளவில், அழகிரி மூன்றுவிதமான கான்செப்ட்டில் உள்ளதாகக் கூறு கிறார்கள். கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினால் அழகிரி களத்தில் இறங்குவார். இல்லையேல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து அவர் ராஜ்யசபா உறுப்பினராக வருவதற்கு வாய்ப்பு உண்டு. இரண்டும் இல்லையென்றால் மாநிலத் தலைவராக அவரையே தொடர தலைமை அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து வந்துள்ளார் அழகிரி. அதன் பிறகுதான் கட்சியினர் மத்தியில் இப்படிப்பட்ட பேச்சு எழுந்துள்ளது, கடலூரைச் சேர்ந்த மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், கட்சிப் பணியில் தீவிரமாக உள்ளவர். கடந்த முறை கடலூர் தொகுதியில் சீட்டு கேட்டு கட்சித் தலைமையிடம் முட்டி மோதியவர். இந்த முறையாவது சீட்டை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
கடலூர் தொகுதியைக் கைப்பற்ற அனைத்துக் கட்சியினரும் இப்போதே முட்டி மோதத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு பற்றியுள்ளது!