தமிழக எல்லையான ஒசூர் ஜுஜுவாடியிலிருந்து சில மீட்டர் தூரத்தில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியின் அருகாமையில் நவீன் என்பவர் பாலாஜி கிராக்கர்ஸ் பட்டாசுக் கடையை நடத்திவருகிறார். இவர், மேலும் பல கிளைக் கடைகளும் நடத்திவரும் சூழ்நிலையில், வருடந்தோறும் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே சிவகாசியிலிருந்து பல ரக பட்டாசுகளை இறக்குமதிசெய்து விற்பனை செய்துவந்துள்ளார்.
அப்படி விற்பனை செய்வதற்கும், பட்டாசுகளை ரகவாரியாக பிரித்து குடோன் களில் அடுக்குவதற்கும் வருடந்தோறும் புரோக்கர் மூலமாக தமிழகத்திலிருந்து ஆட்களை அழைத்துவருவாராம். அதேபோல இந்த வருடமும் தர்மபுரி, வாணியம்பாடி, கள்ளக்குறிச்சி, ஒசூர் ஆகிய பகுதிகளிலிருந்து பணிக்காக ஆட்களை அழைத்துவந்துள்ளார்.
அப்படி வந்தவர்களை வைத்து சிவகாசியிலிருந்து வந்த பல ரக பட்டாசுகளை கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கி குடோனில் அடுக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி கடைமுழுவதும் தீப்பிடிக்க, கிட்டத்தட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான பட்டாசுகளும் வெடித்து கரும்புகையுடன் அந்தப் பகுதியே போர்க்களம்போன்று காட்சியளித்தது.
உடனடியாக விரைந்துவந்த கர்நாடக அத்திப்பள்ளி தீயணைப்பு போலீசார் தீயைக் கட்டுப்படுத்த போராடினர். மாலையில் பற்றிய தீ இரவு 8 மணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்தது. மறுநாள் விடியற்காலை தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. எரிந்த இடத்திலிருந்து 14 பேர் தீயில் கருகிய நிலையிலும், 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் 8-ஆம் தேதி மாலை, இறந்தவர்களின் உறவினர்கள் கருகிய உடல்களை அடையாளம் காட்டி அந்த உடல்களை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர். இறுதிக் காரியங்களை முடித்தபின் தீவிபத்தில் தப்பித்த மாணவர்களான பீமாராவ் ராம்ஜி, லோகேஷ் ஆகிய இருவரையும் கர்நாடக போலீஸ் நேரில் பார்த்த சாட்சியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
"தீ பற்றியது எப்படி?' என்கிற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், நேரில் பார்த்த மாணவர்களிடம் விசாரணையைத் தொடங்கி யுள்ளனர்.
அந்த மாணவர்களோ, "நாங்கள் பட்டாசு வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென தீப்பிடித்தது. எங்கிருந்து பிடித்தது என்று தெரியவில்லை, உள்ளே சிக்கிக்கொண்டி ருந்த எங்க ஊர் பசங்களை கூப்பிடச் சென்ற வேடியப்பனும் சிக்கிக்கொண்டார். இந்த குடோனில் நிரந்தரமாக வேலை பார்த்தவர்களுக்கு, அங்கு ஒரு சின்ன வழி இருப்பது தெரிந்துள்ளது. அதன்வழி யாகத் தப்பித்துள்ளனர். நாங்க புதுசு. அதனால் எங்க பசங்களுக்கு அந்தவழி தெரியாததால மாட்டிக்கிட்டாங்க. நாங்களும் ஒன்றும் செய்ய முடியாம கையறுநிலையில நின்றோம்''’என தெரிவித்தனர்.
இத்தகைய பட்டாசுக் குடோன்கள் எதிர்பாராத விபத்தை எதிர்கொள்ள, தீயணைக்கும் சாதனங்கள், பைபர் ஹூக், தண்ணீர்த்தொட்டி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இந்த குடோனிலோ எந்த வசதியும் இருந்திருக்கவில்லை.
இறந்துபோன 14 பேரில் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் 3 பேர், ஓசூரைச் சேர்ந்தவர் ஒருவர், தர்மபுரியைச் சேர்ந்தவர்கள் 8 பேர். இதில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் அம்மாபேட்டை கிராமத்திலிருந்து மொத்தமாக 16 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். அரூர் அரசுக் கல்லூரியிலும், சேலம் அரசு கல்லூரியிலும், தனியார் கல்வியியல் கல்லூரியிலும் படித்துவந்த மாணவர்கள். வறுமையின் காரணமாக தீபாவளி மற்றும் பொங்கல் திருவிழா காலங்களில் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் இவர்கள் படிப்பையும் பிற செலவுகளையும் பார்த்துக்கொண்டுள்ளனர். உயிரிழந்த ஆகாஷ், கிரி, சச்சின் மூவருமே, தாய்- தந்தையில் யாரோ ஒருவரை இழந்தவர்கள். பெற்றோரின் சுமையைப் போக்க வேலைக்குவந்து தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் அறிவித்த 3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியையும் அமைச்சர் சக்கரபாணி, அமைச்சர் மா.சு. ஆகியோர் வழங்கி னர். கர்நாடக முதல்வர் சீதாராமையாவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார். வெறுமனே நிவாரணத் தொகையோடு நிறுத்திவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கினால் அந்த குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுதலையடையும்.
ஏற்கெனவே கடந்த ஜூலை 29-ல் கிருஷ்ணகிரியில் தீவிபத்து ஏற்பட்டதில் 9 பேர் உடல் கருகிப் பலியாகினர். இந்நிலையில் அத்திப்பள்ளி தீவிபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் 9-ஆம் தேதி அரியலூரில் பட்டாசு விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
தீபாவளி நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதுமே இத்தகைய பட்டாசுக் கடைகள், குடோன்களுக்கான பாது காப்பு ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்பு காட்டினால் மேலதிக விபத்துகளைத் தடுக்கமுடியும்.'
ஆர்வம் காட்டுமா அரசு?