"திராவிட சிறுத்தை' என முதல்வர் மு.க.ஸ்டாலினால் வாழ்த்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 59-வது பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் 17-ல் உணர்வுப்பூர்வமாக நடந்தது. முதல்நாளே சி.எஸ்.ஐ. பேராயமும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் அமைப்பும் இணைந்து விழா நடத்தின. 70 பெண் ஆளுமைகள் உருவாக்கிய "இது திருமா காலம்' என்ற கவிதைத் தொகுப்பு நூலை, தொழிலதிபரும் கவிஞருமான வி.ஜி.சந்தோசம் வெளியிட, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி பெற்றுக்கொண்டார்.
அன்று மாலையில் வேப்பேரி பெரியார் திடலில், தொல்.திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில், கவியரங்கம், கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெற்றது. "தமிழகம் எழுகிறது' என்ற தலைப்பில் கவியரங்கத்தைத் தொடர்ந்து, சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமை' என்ற தலைப்பில். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் நல வாரிய ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தமிழ்நாடு வஃபு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். அடுத்ததாக, "ஊடகங்களை அச்சுறுத்தும் சனாதனம்' என்ற தலைப்பில், உரையரங்கம் நடந்தது.
"இது திருமா காலம்' என்ற தலைப்பில், ம.வி.இ. மாநிலச் செயலாளர் இரா.நற்சோனை தலைமையில், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., ரவிகுமார் எம்.பி. முன்னிலையில், எழில் கரோலின் வரவேற்புரையுடன், இயக்குநர் பொன்வண்ணன், இயக்குநர் கரு.பழனியப்பன், மைபா நாராயணன், பி.மணிகண்டன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் தொல்.திருமாவளவன் ஏற்புரை வழங்கினார்.
ஆகஸ்டு 17-ம் தேதியன்று, சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் கழகத்தில் தனது தந்தை தொல்காப்பியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிய திருமா, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கட்சி எல்லைகளைக் கடந்த தமிழகத்தின் ஆளுமையாக திருமா உயர்ந்து நிற்பதை அவரது பிறந்தநாளில் குவிந்த பலதரப்பின் வாழ்த்துகளும் உறுதி செய்தன.
-ஆதவன்