தென்காசி மாவட்டத்தின் சங்கரன் கோவில் பகுதியில் ஒரு வேலை விசயமாக போய்க்கொண்டிருந்தபோது நகரின் ஒதுக்குப்புறத்திலுள்ள உயரமான ட்ரான்ஸ்ஃபார்மரின் அருகே நின்றிருந்த சிலர் அதன் உச்சியை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக நாம் மேலே பார்த்தபோது ட்ரான்ஸ்பார்மரின் உச்சியில் 2 இளம்பெண்கள் மின்வயர் இணைப்பு பணியை அநாயசமாய்ச் செய்துகொண்டிருந்ததைப் பார்த்து வியப்பு தாங்கவில்லை. அவர்கள் வேலையை முடித்துவிட்டு கீழே இறங்கும்வரை காத்திருந்தோம். அபாயகரமான இந்தப் பணிக்கு வர நேர்ந்தது குறித்துக் கேட்டோம்..

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலா பார்வதி மற்றும் கலையரசி. இரண்டு பெண்களும் எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.

இவர்களில் கலா பார்வதியின் தாய் ராமு. தந்தை 6 வருடத்திற்கு முன்பே காலமாகியிருக்கிறார். இவரோடு பிறந்த 5 பேரும் வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்கள். 6 வருடத்திற்கு முன்பு திருமணமான கலா பார்வதி, கணவனுடன் 3 வருடங்கள் மட்டுமே குடித்தனம் நடத்தியிருக்கிறார். கணவன் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுக்க, கணவரைப் பிரிந்து வந்த கலா பார்வதியை அவரது தாயும் உடன் பிறந்தவர்களும் ஏற்க மறுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள்.

ww

Advertisment

ஒண்டியாய் வெளியே வந்த கலாபார்வதிக்கு வாய்க்கும் கைக்கும் போராட்டம். இந்தச் சூழலில் கோவில்பட்டி மின்சாரத்துறை, கேங்க்மேன் பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்தது. அங்கு பெண்கள் 5 பேர் மட்டுமே வந்திருக்கின்றனர். 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் ஏறுகிற சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் 5 பெண்களில் கலா பார்வதி மட்டுமே வெற்றிபெற்றாலும் அடுத்து நடத்தப்பட்ட வயர் மடக்கும் பணியை குறிப்பிட்ட 30 செகண்ட்டிற்குள் செய்துமுடிக்க முடியாமல் போகவே அவர் வெளியேவர நேர்ந்தது.

இந்தச் சூழலில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கலையரசி என்கிற திருமணமாகாத இளம் பெண்ணும் கலாபார்வதியுடன் இணைந் திருக்கிறார். திருமணமாகாத கலையரசியின் உடன்பிறந்தவர்கள் இரண்டு பேர். தந்தை மரணமடைந்துவிட, வயதான தாய் கனக ராணியை கவனிக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலை. வருமானத்திற்கு வழியில்லாத நிலையில் குடும்ப வறுமையைச் சமாளிக்க தீப்பெட்டி வேலைக்குப் போன கலையரசிக்கு அந்த வருமானம் கட்டுப்படியாகவில்லை.

இந்த நிலையில், கலா பார்வதியுடன் இணைந்த கலையரசி நகரிலுள்ள மின்சாரத் துறை காண்ட்ராக்டர் ஒருவரிடம் வயர்மேன் வேலைக் குப் போயிருக்கிறார்கள். அதேசமயம் கோவில்பட்டி இ.பி.யைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இவர்கள் மின் கம்பத்தில் சரசரவென்று ஏறுவதைப் பார்த்து வியந்து போனவர், "மின்தொடர்பான பணியில் ட்ரெய்னிங் எடுங்கள்' என்று ஊக்கப்படுத்தியிருக் கிறார். ஆறே மாதத்தில் மின்சாரம் தொடர்பான கேங்மேன் மற்றும் வயர்மேன் பயிற்சியை இரண்டு பெண்களும் கச்சிதமாக முடித்திருக்கிறார்கள்.

அந்த காண்ட்ராக்டர் மூலமாகவே அவர் எடுக்கிற இ.பி.யின் காண்ட்ராக்ட் பணியில் வயர்மேனாக ஈடுபட்டிருக்கிறார்கள். புதிய மின்கம்பம் நடுவது, ட்ரான்ஸ்ஃபார்மர்களின் உச்சியில் வயர் இணைப்பது போன்ற பணிகளைத் திறமையாகவே செய்திருக்கிறார்கள். இதையடுத்து இரண்டு பெண்களும் இ.பி.யின் 3 வருடத்திற்கான ஒப்பந்தப் பணியாளரானார்கள். இவர்களின் தினக்கூலி 300 ரூபாய்தான். 3 வருட ஒப்பந்தப் பணியில் 6 மாதத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமாம். கடைசி மூன்று மாத சம்பள பாக்கி வரவேண்டி இருக்கிறது என்கிறார்கள்.

மின் இணைப்புப் பணியில் ஆண்களுக்கு நிகராகவும் வெகுவிரைவாகவும் செய்வதையறிந்த கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட அக்கம்பக்க நகரங்களிலிருக்கும் இ.பி. சப்ஸ்டேஷன்கள், தங்கள் பகுதியின் ஊழியர்கள், வயர்மேன்கள் சார்ட்டேஜ் காரணமாக கலா பார்வதியையும் கலையரசியையும் வரவழைத்து ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். வயிற்றுப்பாடு காரணமாக மின்சாரத்துறை அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று தினக்கூலி அடிப்படையில் கடந்த நான்கு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

"வரதட்சணை விவகாரத்தால் புறக்கணிக்கப்பட்டேன், சமூகத்தில் அநாதையானேன். நான் பட்ட அசிங்கங்களை நினைத்தால் எனக்கு கண்ணீர் முட்டுகிறது. யாரிடமும் கையேந்தக்கூடாது, சுயமாக வேலை பார்க்கவேண்டும் என்ற வெறியால், இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளேன். அரசாங்கம் எங்களைப் போன்ற மின் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கினால் எங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறக்கும்''’என்கிறார் கலா பார்வதி எதிர்பார்ப்புமிக்க குரலில்.

"நிரந்தரமற்ற வேலை. எத்தனை நாள் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. கிடைக்கும் 300 ரூபாயில் பெட்ரோல் செலவு 50 போக மீதமிருப்பதில்தான் எங்களின் வாழ்க்கையை ஓட்டுகிறோம்''’என்கிற கலையரசியின் குரலில் வேதனை மண்டியிருந்தது.

மின்சாரத் துறையின் இளநிலைப் பொறியாளர் நிலையிலிருக்கும் அதிகாரிகள் சிலரிடம் இந்தப் பெண்களின் மின்பணி பற்றி பேசியபோது, "ஆண் பணியாளர்களைவிட இந்தப் பெண் பணியாளர் கள் கொடுக்கப்பட்ட வேலையை விரைவாகச் செய்துவிட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆண் களுக்கு நிகரான இந்தப் பெண்களின் பணிநேர்த்தியும், துணிச்சலும் அசாத்திய மானது''’என்கிறார்கள்.