ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தீயில் கருகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே இருக்கும் வத்தகவுண்டன்வலசு கிராமத்தின் தோட்டத்து வீட்டில் விவசாயி சின்ராசு என்ற முருகேசன், அவருடைய மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரும் வசித்தபடி விவசாயம் செய்து வந்தனர். கடந்த 20-ம் தேதி இரவு வீட்டுக்கு அருகே போடப்பட்டிருந்த சோளத்தட்டுப் போரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தவர்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து தீயை அணைத்தபோது, முருகேசன் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் உடலும் தீயில் கருகிய நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, தென்மண்டல ஐ.ஜி. அன்பு, டி.ஐ.ஜி. விஜயகுமாரி, எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். "சம்பவம் நடந்த இரவு 9:00 மணிக்குத்தான் வேலாயுதம்பாளையத்தில் ஒரு திருமண விசேஷத்திற்குப் போய்விட்டு எங்க சித்தப்பாவுடன் சித்தி மற்றும் தம்பி தங்கையும் வந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு வந்துதான் படுத்தேன். திடீரென இரவு ஒரு மணியளவில் சோளத்தட்டைப்போரில் தீ எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான், உடனே எங்க சித்தப்பாவுக்குப் போன் போட்டேன். அவர் போனை எடுக்காததால் வீட்டுக்கு ஓடிப்போய்ப் பார்த்தபோது, வீட்டில் செல்போன்கள் இருந்தன, ஆனால் யாரையும் காணவில்லை.
அதுக்குப்பிறகு சொந்தக்காரர்களுக்கும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்து தீயை அணைத்தபிறகுதான் அத்தீயில் நால்வரும் கருகி உயிரிழந்ததே தெரியவந்தது. பார்த்ததும் பதறிவிட்டோம். இதுவரை எங்க சித்தப்பா குடும்பத்துக்குள்ளே எந்தவொரு சண்டை சச்சரவும் கிடையாது. எனது தங்கை சிவரஞ்சனி, கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவிட்டு விவசாயம் பார்த்து வருகிறார். அதுபோல் எனது தம்பி இப்பதான் முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறான். எனது சித்தப்பா தினசரி தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளைக் கொண்டுபோய் உழவர் சந்தையில் விற்று விட்டு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே எனது சித்தப்பா யாரிடமும் அதிகம் பேசாமல் ஏதோவொரு மன அழுத்தத்துடன் காணப்பட்டார். ஆனால் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த கடன் தொல்லையும் இல்லை. இந்நிலையில் நால்வரும் திடீரென இப்படி தீயில் கருகி இறந்திருப்பது வருத்தமாக உள்ளது'' என்றார் முருகேசனின் அண்ணன் மகள் கார்த்திகாதேவி.
கடந்த சில மாதங்களாகவே, கடும் மன உளைச்சலோடு, நாலு பேரும் குடும்பத்தோடு சாகணும் என்று முருகேசன் புலம்பி வந்ததாகவும், என்ன காரணமென்று சொன்னதில்லையென்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். முதல் நாள் இரவில் விசேஷத்துக்குச் சென்றுவந்த பின்புதான் இச்சம்பவம் நடந்துள்ளது என்பதால், அந்த விசேஷ வீட்டில் யாராவது முருகேசனின் மகனையோ மகளையோ தவறாகப் பேசியிருந்து மனம் நொந்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாமென்றும் கருதுகிறார்கள். அப்படி ஏதோ நடந்ததால்தான் மனசு உடைந்த முருகேசன், தனது குடும்பத்தினரோடு சேர்ந்து செத்துப்போக முடிவெடுத்திருக்கக்கூடும்.
இதில் யாரும் உயிர்பிழைத்துவிடக்கூடாதென நினைத்து, முதலில் மூன்று பேருக்கும் விஷம் கொடுத்து அவர்கள் இறந்தபின், அவர்களை சோளத்தட்டைப்போரின் மீது தூக்கிச்சென்று படுக்க வைத்து, அதன்பின் தானும் விஷம் குடித்து, சோளத்தட்டைப் போருக்கு பெட்ரோல் ஊற்றித் தீவைத்து அதில் கருகி இறந்திருக்கலாமென்றும் பேசிக்கொள்கிறார்கள். இதில் வெளியாட்கள் யாரும் சம்பந்தப்பட்டிருக்கமாட்டார் களென்றும் மக்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இந்த அளவுக்குக் கொடூரமாக உயிரிழந்திருப்பதைப் பார்க்கையில் இது ஆணவக்கொலையா என்ற சந்தேகமும் வருவதால் காவல்துறை தான் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிறார்கள்.
இதுபற்றி மாவட்டக் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "சம்பவம் நடந்த முருகேசனின் வீட்டில் எந்த ஒரு பொருளும் திருடு போகவில்லை. பணமும், நகைகளும் அப்படியேதான் இருக்கின்றன. அதை வைத்துப் பார்க்கும்போது, வெளியில் இருந்து ஆட்கள் வந்ததாகத் தெரியவில்லை. இருந்தாலும் விசாரித்து வருகிறோம். அதோடு, போஸ்ட்மார்ட்டம் செய்ததின் மூலம் அந்த நான்கு பேரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை ஆய்வுக்காக அனுப்பியுள் ளோம். அதற்கான ரிப்போர்ட்டுகள் வந்த பின்புதான் இந்த மரணங்கள் குறித்து நாம் சரியான முடிவுக்கு வர முடியும். இதையும் தாண்டி அந்த நான்கு பேரின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம். இதன்மூலம் கூடிய விரைவில் சரியான காரணம் தெரியவரும்'' என்றார். இதில் விசாரணையைத் தற்கொலையாக மட்டுமே பார்க்காமல், இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும். இந்த நால்வரின் மரணத்தைத் தடுக்க முடியாமல் போனாலும் இதற்கான சரியான காரணம் தெரியவந்தால்தான் இனியும் இதுபோன்ற துயரம் தொடராமல் தடுக்க முடியும்.