"தம்பி நமசிவாயம் காண்பதையும், கேட்பதையும் அப்படியே திரும்பவும் ஒளி-ஒ-க் காட்சிகளாக எழுத்தில் படமாக்கிப் படைக்கிறாய்.

இது உனக்கு இயற்கையாகவே வாய்த்துள்ள ஓர் வரப்பிரசாதம்'' என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் மு.நமசிவாயம், எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் தொடர்களையும் எழுதியிருக்கிறார். 1924ஆம் ஆண்டில் பிறந்த மு.நமசிவாயம், 1989ஆம் ஆண்டு தனது அறுபத்தைந்தாம் வயதில் காலமானார்.

திராவிட இயக்கப்பற்றாளரான நமசிவாயம், அண்ணா, கலைஞரோடு மிகவும் நெருங்கிப் பழகியவர். அவர்களின் பேச்சுக்கள், எழுத்துக்களை நூல்களாக வெளியிட்டு, அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தவர். மைக்கே இல்லாமல் மேடையில் அண்ணா பேசிய காலகட்டத்தில், அவரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட நமசிவாயம், அவரது பேச்சுக்களை அப்படியே மனதுக்குள் வாங்கி, எழுதி நூல்களாக வெளியிட்டார்.

Advertisment

ff

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் பேரறிஞர் அண்ணா நிகழ்த்திய சொற்பொழிவை, "நல்ல தீர்ப்பு' என்ற தலைப்பில் நூலாகத் தனது 21வது வயதிலேயே வெளியிட்டவர் எழுத்தாளர் மு.நமசிவாயம். இதற்காகவே அந்நூல் பல பதிப்புகள் கண்டு, லட்சக்கணக்கில் விற்பனையானது. இதன்காரணமாக "நல்ல தீர்ப்பு நமசிவாயம்' என்று அழைக்கப்பட்டார். அண்ணாவின் சொற்பொழிவுகளை, "தமிழகம்', "சூழ்நிலை', "சாமானியன் சகாப்தம்', "திராவிடர் நிலை' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களாக வெளியிட்டார். பெரியார் குறித்து, மதித் தலைவர் பெரியார், "பெரியார் மணிமொழிகள்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

கலைஞரின் பேச்சுக்களை, எழுத்துக்களை நூல்களாக வெளியிடுவதற்கென்றே புத்தகப் பண்ணை மற்றும் முன்னேற்றப்பண்ணை ஆகிய பதிப்பகங்களை வைத்திருந்தார். அதன்மூலம், "கலைஞரின் அறப்போர்', "தலைமையுரை', "பெருமூச்சு', "திராவிட சம்பத்து', "கருணாநிதியின் கருத்துரைகள்', "களத்தில் கருணாநிதி' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இறுதியாக, கலைஞரைப் பற்றி, "புகழ் பூத்த கலைஞர்' என்னும் நூலை எழுத, அதனை கலைஞரே வெளியிட்டுள் ளார். அண்ணா, கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, காமராஜரின் எண்ணங்களையும், பேச்சுக்களையும் கூட நூல்களாக மாற்றினார். "நாமார்க்கும் குடியல் லோம்', "புதிய சமுதாயம்' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நூல்களாக வெளியிட்டதோடு, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை வார இதழிலும் வெளியிட்டார். "நமசிவாயம் எங்கிருந் தாலும் நற்பணி செய்து வருகிறான்'' என்று அண்ணா, நமசிவாயத்தை மனமாரப் பாராட்டினார்.

மு.நமசிவாயத்தின் திருமணத்தை 1946ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா தலைமைதாங்கி நடத்திவைத்தார். நமசிவாயத்தின் மகன் தம்பி துரை-செல்வி விஜயகுமாரி திருமணத்தை, 1974ஆம் ஆண்டு, முதலமைச்சர் கலைஞர் தலைமைதாங்கி நடத்திவைத்தார். மணமக்களின் சார்பாக உடல் ஊனமுற்றோர் நிதிக்காக 101 ரூபாய் முதல்வர் கலைஞரிடம் வழங்கப்பட்டது. திருமண விழாவில் உரையாற்றிய கலைஞர், "நண்பர் நமசிவாயம் அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிவேன். அவருக்கும் இயக்கத்தில் உள்ள எங்களுக்குமான தொடர்பு மிகப் பழமையான ஒன்றாகும். அவர் ஏற்றுக்கொண்டுள்ள பணியை மன நிறைவோடும், மற்றவர்கள் மகிழத்தக்க வண்ணமும் நிறைவேற்றி வருபவர். அண்ணா அவர்களுடைய சொற் பொழிவுகளை முதன்முதலாக தமிழ் மக்கள் நூல் வடிவத்திலே கண்டார்கள் என்றால், அந்த சொற்பொழிவுகளை எல்லாம் உடனிருந்து எழுதித் தொகுத்து அச்சேற்றி புத்தகமாகத் தந்த பெருமை நமசிவாயத்துக்கு உண்டு. நான் எழுதிய புத்தகங்கள் பலவற்றையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.

Advertisment

bb

பல ஆண்டுகளுக்கு முன் னால் சென்னையில் உள்ள விருதுநகர் நாடார் விடுதியில் நான் தங்கியிருந்தபோது, என்னை ஒருநாள் மாலையில் வந்து சந்தித்து, காலையில் ரெயிலுக்குப் போவதற்கு முன்பு ஒரு புத்தகம் எழுதித் தந்துவிட்டுப் போகவேண்டுமென்று சொன்னதும், அப்போது மலேசியாவில் தண்டனை அடைந்த கணபதியைப் பற்றி, "கயிற்றிலே தொங்கிய கணபதி' என்ற ஒரு புத்தகத்தை இரவோடு இரவாக எழுதி இவரிடம் ஒப்படைத்துவிட்டுப் போனதும், அடுத்த வாரத்தில் அதை அவர் புத்தகமாக வெளியிட்டதும் நினைவுக்கு வரும்போது, அவருக்கிருந்த கொள்கைப்பற்றும் ஆர்வமும் தெளிவாகும். இடையிலே சிறிதுகாலம் நமசிவாயம் நம்மிடையே இல்லை. ஏனென்றால் "நமசிவாயம்' என்பது பொது மந்திரம். அதை யாரும் உச்சரிக்கலாம் என்ற அளவுக்கு பலரும் உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவருடைய உடல்தான் அங்கிருக்குமேயல்லாமல், உயிர் இங்கேதான் இருக்கிறது என்ற உண்மை எனக்குத் தெரியும்" என்றார். திருமணம் குறித்த செய்திகள், அப்போதைய முரசொ-யிலும், விடுதலை நாளிதழிலும் வெளிவந்திருந்தது.

திராவிட சிந்தனை எழுத்தாளர் மு.நம சிவாயத்துக்கு தம்பிதுரை என்ற மகனும், மனோன்மணி, முத்துலட்சுமி என்று இரு மகள்களும் இருக்கிறார்கள். இளைய மகள் முத்துலட்சுமியின் கணவருக்கு கொரோனா முடக்கம் காரணமாக வருமானமில்லாமல் போனதால், முத்துலட்சுமி ஒரு தனியார் கடையில் வேலை செய்கிறார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான அவரது மகன் கணேசனுக்கும் நிரந்தர வேலையில்லாததால் அக்குடும்பமே வறுமையில் வாடு கிறது. எனவே, தனது தந்தையின் 72 நூல்களையும் நாட்டுடமை யாக்கி, தங்கள் மகனுக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ற வேலையும், வசிப்பதற்கு வீடும் வழங்குமாறு, நமசிவாயத்தின் இளைய மகள் முத்துலட்சுமி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.