ஏறத்தாழ 35 ஆண்டு கால காத்திருப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்தபோது, அவரது ரசிகர்களாக மட்டுமே எப்போதும் இருப்பவர்கள் அதனை வரவேற்கவே செய்தனர். அரசியல் வருகையை எதிர்பார்த்திருந்த மன்ற நிர்வாகிகள் பலர் பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்நிலையில்தான், ஜனவரி 16-ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிமக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டத்தினை ரஜினி கூட்டவிருக்கிறார் என்ற தகவலும் சிலரால் கசியவிடப்பட்டது. அதற்கு முன்பாக, துக்ளக் பத்திரிகை விழாவில் அவர் கலந்து கொள்ளலாம் என்றும் அதே குரூப் கசியவிட்டது. ஆனால், அதற்கு முன்பு, ஜன.03-ஆம் தேதி சென்னை அண்ணாநகர் பகுதிச் செயலாளர் ரஜினி தலைமையில் சிலர் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன்பாக, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். ஜன.10-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டி உண்ணாவிரதம் இருந்து அரசியலுக்கு அழைத்தனர்.
இவை எதையும் விரும்பாத ரஜினியோ, ""உண்ணாவிரதம் கட்டுப்பாட்டுடன் நடந்தது மகிழ்ச்சிதான். இருந்தாலும் இப்படி உண்ணாவிரதம் இருந்து என்னை சங்கடத்திற்குள்ளாக்காதீர்கள். நான் அரசியலுக்கு வருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்''’என ஜன. 11-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு உறுதிப் படுத்தினார். ஆனாலும், ஜனவரி 16 பற்றிய எதிர் பார்ப்பில் சில நிர்வாகிகள் காத்திருந்தனர். பலரது மனநிலையில் மெல்லிய மாற்றம்
மாற்றம் தெரிந்த மன்ற மா.செ.க்களிடம் அ.தி.மு.க, தி.மு.க இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தி.மு.க. மாநில விவசாய அணி துணைத்தலைவரான தே.மதி யழகன், 35 வருடங்களாக கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டவர், மக்கள் மன்றம் என மாறிய பிறகு அதன் மா.செ.வாக இருந்தவர். அமைப்பின் மேல்மட்ட நிர்வாகிகளின் தன்னிச்சையான போக்கு குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதியும் பலனில்லாததால், கடந்த 2019 ஜன. 05-ஆம் தேதி தி.மு.க.வில் ஐக்கியமானார் மதியழகன்.
ர.ம.ம.வின் இராமநாதபுரம் மா.செ.செந்தில் செல்வானந்த், தேனி கணேசன், கிருஷ்ணகிரி சீனிவாசன், தூத்துக்குடி ஜோசப் ஸ்டாலின் ஆகியோரை தி.மு.க.வில் இணைக்க பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். (இதில் தூத்துக்குடி ஸ்டாலின், 1996லேயே ரஜினிக்காக ஸ்பெஷல் பிரச்சார வேன் ரெடி செய்துள்ளதாக செய்தி கிளம்பியது. ஆனால் ஸ்டாலினோ, வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு நான் போக வேண்டியிருப்பதால் எனக்காக தயார் செய்யப்பட்டவேன் தான். அதே நேரம் தலைவர் ரஜினி, ஓ.கே. என்றால் இந்த வேனை அவருக்கு கொடுக்கவும் தயார்’’ என அப்போதே நக்கீரனுக்கு விளக்கமளித்தார்) மேற்கண்ட மா.செ.க்களில் கிருஷ்ணகிரி சீனிவாசன் மட்டும் தனது மகளுக்கு உடல்நலம் சரியில்லை என்ற காரணத்தைச் சொல்லி திடீரென ஜகா வாங்கிவிட்டார். அவருக்கு, ஸ்டாலின் இடத்திற்கு வந்து விடலாம் என்ற கணக்கு இருந்ததாம்.
16-ந் தேதி தி.மு.க. .தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து ஓ.கே. சிக்னல் வந்ததுடன், மறுநாளே (17-ந் தேதி) கட்சியில் இணைய அப்பாயிண்ட் மெண்ட் தரப்பட்டது. அதனால், ரஜினி மன்ற நிர்வாகிகள் தி.மு.கவில் இணைந்த போது, கட்சி மா.செ.க்கள் யாரும் இல்லை என்கிறது அறிவாலயம் வட்டாரம். மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் மாற்றுக் கட்சிகளில் இணைய ஆரம்பித்ததைக் கவனித்த ரஜினி அலட்டிக்கொள்ளவில்லை. இதனை ஓரளவு எதிர்பார்த்தே இருந்தார். அவரது அறிவுரைப்படி, “"ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சிகளில் தாராளமாக இணையலாம். என்றைக்குமே அவர்கள் தலைவரின் ரசிகர்கள்தான்'’என வழியனுப்பும் அறிக்கையை ரிலீஸ் செய்தார் வி.எம்.சுதாகர். இதன்பின் மதியழகனும் ஜரூராக களம் இறங்கினார்.
ர.ம.ம.வின் மா.செ.க்களையும் மற்ற பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளையும் நாம் தொடர்பு கொண்டோம். தி.மு.க சைடிலிருந்து யார் யாருக்கு வலை வீசுகிறார்கள் என்பதை நம்மிடம் சொன்னார் மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர். அதன்படி, ""மா.செ.க்களான திருவள்ளூர் சுந்தரமூர்த்தி, திண்டுக்கல் எஸ்.டி.பாணி, கடலூர் இப்ராஹிம், தஞ்சை கணேசன், புதுக்கோட்டை முருகு பாண்டியன், விருதுநகர் முருகன், வடசென்னை மகளிரணி மா.செ.லட்சுமி வேலு, மதுரை மா.து.செ.சேகர் (மதுரை நாயுடுகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்), மதுரை மாநகர பொறுப்பாளர் பாலதம்புராஜ் (தி.மு.க. ஆட்சியின்போது அழகிரியின் சிஷ்யராகவும் கோபாலசாமி கோவில் அறங்காவலர் குழுத் தலைவராகவும் இருந்தவர்) மதுரை மா.செ. ரபீக் (இவரிடம் தி.மு.க.வி லிருந்தும் அ.தி.மு.க.விலிருந்தும் பேசிவருகிறார்களாம்), இராமநாதபுரம் மாஜி மா.செ. பாபு மற்றும் கொங்கு மண்டலத்தின் சில மாசெ.க்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இதில் இணைப்புக்கு ரெடியானவர்களும், உடன்படாதவர்களும் உண்டு. உசிலம்பட்டி நகர து.செ. லெட்சுமணராஜ், அ.ம.மு.க.விற்குப் போய்விட்டார். மதுரை மாநகர் து.செ. பழனி பாட்ஷா பா.ஜ.க.விற்கு ஜம்பாகப்போகிறார்'' என்கிறார்கள்.
திருவாரூர் தாயுமானவன், மேலூர் (மதுரை) ராஜபாண்டி, மதுரை மா.இ.செ. பாண்டி, மாநகரம் ஜாஃபர் உள்ளிட்ட பலர், ""தங்களுக்குப் பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுவோமோ தவிர, வேறு கட்சியில் இணையமாட்டோம், கடைசி வரை தலைவர் ரஜினியின் ரசிகர்களாகவே இருப்போம்'' என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.