தீஸ்தா செடல்வாட்டை, குஜராத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு செடல்வாட்டின் மும்பை வீட்டில் வைத்து கைதுசெய்திருக்கிறது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பயங்கரமான கலவரத்தில், மோடிக்கு எதிராக ஆதாரமற்ற தகவல்களைத் தந்ததற்காக இந்தக் கைது என காரணம் சொல்லப்பட்டுள்ளது.

தீஸ்தா மட்டுமல்லாமல், குஜராத் கலவரத்தில் மோடிக்கும் பங்கிருக்கிறது என தைரியமாகப் பேசிய மேல்மட்ட காவல் அதிகாரிகளான முன்னாள் டி.ஜி. ஆர்.பி. ஸ்ரீகுமாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் ஏற்கெனவே சிறையிலிருப்பதால் அவர் கைது செய்யப்படவில்லை. இவர்கள் மூவர் மேலும் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

யார் இந்த தீஸ்தா செடல்வாட்?

செடல்வாட் அடிப்படையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் பத்திரிகையாளர். குஜராத்தைச் சேர்ந்த இவரின் தாத்தா செடல்வாட், இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாகப் பதவிவகித்தவர். 2002-ல் நடந்த குஜராத் கலவரம் இவரை வெகுவாகப் பாதித்தது. "குஜராத்: மேக்கிங் ஆப் தி டிராஜெடி' என்ற நூலை எழுதினார். இந்தக் கலவரத்தில் அரசியல்வாதிகளின் பங்கு, காவல்துறை திட்டமிட்டு கலவர நேரத்தில் செயலிழக்கச் செய்யப்பட்டது குறித்து அதில் விவரித்திருந்தார்.

Advertisment

gg

குஜராத் கலவரத்தில் அப்போதைய ஆளுங் கட்சியான பா.ஜ.க.வின் பங்கை வெளிக்கொண்டுவர ஆர்வம்காட்டியதால், பல்வேறு முறை பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டார். அவரது அலுவலகமும் வீடும் எண்ணற்ற முறை சோதனைக்கு ஆளாகியது. சமூக ஊடகங்களில் அவர் குறிவைத்துத் தாக்கப்பட்டார். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், இவரைச் சிறையிலடைக்க வேண்டுமெனவும் பா.ஜ.க.வினரால் குற்றம்சாட்டப்பட்டார்.

2003 முதல் இவர் மேல் ஏழுமுறை வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட அரசுத் தரப்பால் இவர்மீதான குற்றத்தை நிரூபிக்க முடிய வில்லை. சமூகச் செயல்பாடு என்ற பெயரில் இவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதிகளைப் பெற்று, தனது சொந்த நலனுக்குப் பயன்படுத்திக்கொள்வ தாக அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

தீஸ்தாவை சிறையிலடைக்க இத்தனை தீவிர ஆர்வம் காட்டுவதன் காரணம், குஜராத் கலவரம் நடந்தது முதற்கொண்டு, அதை மக்களும் உலகமும் மறக்கவிடாமல் செய்வதுதான் என நெற்றியில் அடித்தாற்போல் சொல்கிறார்கள் தீஸ்தாவின் மனித உரிமைச் செயல்பாட்டின்மேல் நம்பிக்கை யுடையவர்கள்.

குஜராத் கலவரத்தில் இறந்த காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எஷான் ஜாப்ரியின் வழக்கில், 2012-ல் சிறப்பு நீதிமன்றம் குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கில்லை என தீர்ப்பளித்தது. கலவரத்தில் மோடியைக் குற்றம்சாட்டுவதற்கு போதிய ஆதாரமில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டபோது, அவரது மனைவி ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடர உதவிசெய்தவர்தான் இந்த தீஸ்தா செடல்வாட்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 அன்று தீர்ப்பளித்த ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, "பாதிக்கப்பட்ட ஜாகியா ஜாப்ரியின் உணர்வுகளை தீஸ்தா மோசமாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தப் பின்னணியை விசாரிக்கவேண்டும்''”என்று தீர்ப்பு சொல்லியுள்ளது.

தீர்ப்புக் குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “"இது 19 ஆண்டு கால போராட்டம். இவ்வளவு பெரிய ஒரு தலைவர் ஒரு வார்த்தைகூட பேசாமல், சிவபெருமான் விஷத்தை தொண்டையில் வைத்துக் கொண்டதுபோல எல்லா வற்றையும் சகித்துக்கொண்டு, போராடிவந்தார்''’என குறிப்பிட்ட அவர், "உச்சநீதிமன்றம் எல்லா குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரம் குற்றச்சாட்டுகள் ஏன் சுமத்தப்பட்டன என்பதையும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது''’என சூசகமாக தீஸ்தா செல்வாட் கைதை உணர்த்திப் பேசினார்.

இந்நிலையில் தீஸ்தா செடல்வாட் கைதை ஐ.நா.வின் மனித உரிமைகள் பாதுகாப்பாளர்களுக் கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர் கண்டித்துள்ளார். இந்தியாவிலும் எதிர்க்கட்சியினரும், மனித உரிமை ஆர்வலர்களும், அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளும் தீஸ்தாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

குஜராத் கலவர வழக்கில் தீரத்துடன் ஆர்வம்காட்டிய மற்றொரு நபர், முன்னாள் ஐ.பி..எஸ். சஞ்சீவ் பட். அவருக்கு என்னவெல்லாம் நேர்ந்ததெனப் பார்ப்போம்.

Advertisment

;;

2002 குஜராத் கலவரத்துக்கான தொடக்க நிகழ்வான கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வையடுத்து, பிப்ரவரி 27, 2002-ல், உயர் காவல் அதிகாரிகளு டன் அன்றைய முதல்வர் மோடி சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் "முஸ்லிம்களுக்கு எதிரான கோபத்தை இந்துக்கள் தீர்த்துக்கொள்ளட்டும். நீங்கள் எதுவும் கண்டுகொள்ளாதீர்கள்' எனக் கூறியதாக சஞ்சீவ் பட் குற்றம்சாட்டினார். ஆனால் குஜராத் கலவர வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, "மோடி அத்தகையதொரு சந்திப்பை நடத்தவே இல்லையென்றும், பட் அப்படி எந்தவொரு சந்திப்பிலும் கலந்துகொள்ள வில்லை' என்றும் கூறியது.

2007-ல் சஞ்சீவின் பேட்ஜிலுள்ள பலருக்கும் ஐ.ஜி. ரேஞ்சுக்கு பணி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், சஞ்சய் பட்டுக்கு பணி உயர்வு தரப்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் சக காவலர்களைத் தாக்கியதாகவும், பழிவாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கின.

விவகாரங்கள் வளர்ந்துகொண்டே சென்ற நிலையில் 2011-ல் அலுவலகக் காரை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாகவும், பணிக்கு வரவில்லையெனவும் கூறி சஞ்சீவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். 2015-ல் சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஹரேன் பாண்டியா கொலைவழக்கில், அப்போதைய முதல்வர் மோடியும், குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முக்கிய ஆதாரத்தை அழிக்கச் சொல்லி வற்புறுத்தியதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் சாட்சியமளித்தார்.

இதையடுத்து சஞ்சீவின் கார் ஓட்டுநரான கே.டி. பந்த், முதல்வர் மோடியின் வீட்டுக்கு தான் வண்டியை ஓட்டியதாகவும், அங்கே சந்திப்பொன்றில் கலந்து கொண்டதாகவும் பொய் சொல்லச் சொல்லி சஞ்சீவ் வற்புறுத்தியதாக புகார் சொல்ல, அந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுசெய்யப்பட்டார். அடுத்தபடியாக பிரபுதாஸ் வைஷ்ணாணி என்பவர் காவல்துறை கஸ்டடியில் இறந்துபோன வழக்கில் பட்டின் பெயரும் இடம்பெற்று, ஆயுள் தண்டனை பெறுவதில் சென்று முடிந்தது.

2018-ல் சஞ்சீவ் பட்டின் வீடு ஆக்ரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக அகமதாபாத் மாநகராட்சியால் குற்றம்சாட்டப்பட்டு, வீட்டின் ஒரு பகுதி இடித்துத் தள்ளப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து, மோடியின் பெயரைக் கெடுக்க தீஸ்தா செடல்வாட்டுடன், சஞ்சீவ் பட்டும் சம்பந்தப்பட்டிருப்பதாக புதிய வழக்கொன்று அவர்மீது பதியப்பட்டிருக்கிறது.

ஆர்.பி.ஸ்ரீகுமார்

குஜராத் கலவர வழக்கால் தன் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்ட மற்றொரு போலீஸ் அதிகாரி ஆர்.ஸ்ரீகுமார், கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டம்பலத்தைச் சேர்ந்தவர். குஜராத் கலவரத்தின்போது, அம்மாநில இன்டலிஜென்ஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர். குஜராத் கலவரத்துக்குப் பின் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்த மாநில அரசு திட்டமிட்டபோது, குஜராத் கலவரத்துக்குப் பின்னால் சட்டம் ஒழுங்கு சரிவரக் கையாளப்பட வில்லையென்ற சந்தேகமிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இவர் செய்த புகாரால், தேர்தல் நடத்தமுடி யாமல் போனது. "குஜராத் பிஹைண்ட் தி கர்ட்டெய்ன்' புத்தகத்தில், குஜராத் கலவரத்தில் தான் கண்டதையும் தனக்கிருந்த சந்தேகங்களையும் அவர் பதிவுசெய்துள்ளார்.

2007-ல் பதவி ஓய்வுபெற்றதால் பெரிய நடவடிக்கைகள் இன்றி ஸ்ரீகுமார் தப்பித்தார். எனினும் கடைசிக் காலத்தில் அவருக்குக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வை குஜராத் அரசு மறுத்தது. சென்ட்ரல் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ட்ரிப்யூனலை அணுகி தனக்குச் சாதகமான தீர்ப்புப் பெற்றார். ஆனால் குஜராத் அரசு, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து அந்தப் பதவி உயர்வை மறுத்துவிட்டது.

தற்போது குஜராத் கலவர விவகாரத்தில் மோடி குற்றமற்றவர் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் குஜராத் கலவர வழக்கில் போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக இவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாகியா ஜாப்ரி, கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்சநீதி மன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தியதற்கு அடிப்படைக் காரணம், தீஸ்தா செடல்வாட்தான்.

குஜராத் கலவரத்தில் நடந்த மனிதாபிமானமற்ற உயிர்க்கொலை களுக்கும், அவற்றின் திட்டமிட்ட தன்மைகளுக்கும் எதிராக விரல் நீட்டியவர்களையும் சாட்சி சொன்னவர் களையும் தண்டிப்பதன் மூலம் நீதியைத் தேடியவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வதாகவும் எதிர்காலத்தில் சமூக அநீதிக்கு எதிராக விரல்நீட்டத் துணிபவர்களுக்கு, இந்தக் கைதுகள் மூலம் பா.ஜ.க. பாடம் கற்பிக்க முயல்கிறது எனவும் விமர்சனம் எழுந்திருக்கிறது.