கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஓசூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷின் மகன் கருணாசாகர், தனது நண்பர்களுடன் ஆடி காரில் பெங்களூருக்குச் செல்லும்போது கோரமங்களா பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 7 பேர் பலியானது பலரையும் அதிரச் செய்திருக்கிறது.

Advertisment

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்டுவரும் போலீசார், "“விபத்து நடந்த இடத்திலே ஆறுபேர் பலியாகிவிட்டனர். ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். காரின் முன்பகுதியில் மூன்று பேரும், பின்பகுதியில் நான்கு பேரும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இறந்த அனைவருக்குமே இளம் வயதுதான். முப்பது வயதைத் தாண்டியவர்கள் யாரும் இல்லை. அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதே விபத்துக்குக் காரணம்'' என தெரிவித்துள்ளனர்.

Advertisment

mm

சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் மகன் கருணாசாகர், பிந்து, கேரளாவைச் சேர்ந்த அக்சல் கோயல், இஷிதா, தனுஷா, ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த ரோஹித், உத்சவ் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

துயரத்தில் எம்.எல்.ஏ.

ஓசூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கடந்த ஏப்ரல் மாதத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தனது மனைவி சிவம்மாவை இழந்தார். அந்த துயரம் மாறுவதற்குள் மகன் கருணா சாகரையும் இழந்து துயரத்தில் மூழ்கியுள்ளார்.

Advertisment

எப்படி நடந்தது விபத்து?

விபத்து நடந்த இடங்களுக்கு அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போலீசார், விபத்து நடக்கும்போது காரை ஓட்டியது கருணா சாகர்தான் என கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

கருணாசாகரின் நண்பர் வட்டாரத்தைச் சேர்ந்த பிந்துவுக்கு சென்னையில் வேலை கிடைத் திருந்தது. இதனால் அவர் பெங்களூருவிலிருந்து சென்னைக்குச் செல்ல முடிவு செய்திருந்தார். வேலை கிடைத்ததற்காக நண்பர்களுக்கு விருந்து வைக்கும் முடிவுக்கு வந்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நண்பர்கள் விருந்துக்குச் செல்வதென முடிவாகியது. அந்த விருந்துக் கொண்டாட்டத் துக்காகவே ஏழுபேரும் பெங்களூரு நோக்கிக் கிளம்பியதாகத் தெரியவருகிறது. இதற்காக கிருஷ்ணசாகர் KA 03 MY6666 என்ற பேன்சி எண் கொண்ட ஆடி க்யூ 3 காரில் நண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்.

mm

அன்று இரவு கோரமங்களாவிலுள்ள மதுபானக் கடையொன்றுக்குள் பிந்து, இஷிதா இருவரும் செல்லும் காட்சிகளும், பின் பத்து நிமிடத்துக்குப் பின் இருவரும் பையுடன் வரும் காட்சிகளும் போலீசாருக் குக் கிடைத்துள்ளன. இதனால் அவர்கள் மதுபானம் வாங்கியதும், கொண்டாட்ட மன நிலையில் இருந்ததும் உறுதியாகியுள்ளது.

வண்டியில் பாட்டை சத்தமாக வைத்தும், அதிவேகமாக ஓட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளன. நேஷனல் கேம்ஸ் வில்லேஜ் ஜங்ஷனிலிருந்து போரம் மாலை நோக்கிச் செல்லும்போது, மங்களா திருமண மண்டபம் அமைந்துள்ள 80 அடி சாலையில் இரவு 2 மணியையொட்டி விபத்து நடந்துள்ளது. அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பிலும் சுவரிலுமாக மோதி விபத்துக்குள்ளானது. சுவரில் மோதிய வேகத்தில் பின் டயர் தெறித்துக் கழண்டு உருண்டோடியிருக்கிறது.

உருக்குலைந்த வண்டி சிதைந்த உயிர்கள்!

விபத்துக்கு சற்றுமுன்பு கார் தறிகெட்டுப் போவதைக் கண்டு ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசுக்குத் தகவல் கூறியிருக்கிறார். காவல்துறை, ஆடுகோடி ட்ராபிக் போலீசுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது. ஆனால் ட்ராபிக் போலீசார் சுதாரிக்கும் முன்பே விபத்து நடந்துவிட்டது.

விபத்துக்குப் பின் காரை ஆய்வுசெய்த போலீசாரை அதிர்ச்சியடைய வைத்த விஷயம், காரின் முன்பகுதிக்கு நேர்ந்த உருக்குலைவுதான். காரைப் பார்த்த உடனே விபத்தில் சிக்கியவர்கள் யாரும் உயிர்பிழைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

mm

பின் உடல்கள் மீட்கப்பட்ட... நிலையில் உட்பகுதியை ஆராய்ந்த போலீசார், காரின் ப்ரேக் பெடல் பகுதியில் தண்ணீர் பாட்டில் ஒன்று சிக்கிக் கிடந்ததைக் கவனித்திருக்கின்றனர். அது விபத்துக்குப் பின் அந்த இடத்தில் சென்று சிக்கிக்கொண்டதா…அல்லது முன்பே தண்ணீர் பாட்டில் விழுந்து அங்கே சிக்கிக்கொண்டதால் காரில் ப்ரேக் பிடிக்க முடியாமல் போனதா என்பதை உறுதிசெய்ய இயலவில்லை. விபத்து நடந்த இடத்தில் பலியானவர்களின் மூன்று செல்போன்கள் கைப்பற்றப்பட்டு போலீசார் வசம் உள்ளன. அதில் "விபத்து தொடர்பாகவோ, அல்லது விபத்து ஏன் நடந்தது என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கிறதா' என போலீசார் ஆய்வுசெய்துவருகின்றனர்.

ஏர் பலூன் ஏன் வேலை செய்யவில்லை?

விலை உயர்வான காஸ்ட்லி கார்கள் வேகமாகச் செல்வதற்கும், சொகுசை அனுபவிப்பதற்கும், எதிர்பாராத விபத்து நிகழ்ந்தால் பாதிப்பைக் குறைப்பதற்குமான விதத்தில் வடிவமைக்கப்பட்டவை. ஆனால் இந்த ஆடி காரில் பயணம் செய்த ஒருவர்கூட விபத்திலிருந்து தப்பிக்கவில்லை.

"ஆடி காரின் பாதுகாப்பு அமைப்புகள் சரியான நேரத்தில் செயல்படவில்லையா?' என்ற கேள்வி எழுகிறது. ஆனால் கொண்டாட்ட மனநிலையிலிருந்த ஏழுபேரும் பயணத்தின்போது சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. அதன் காரணமாகவே ஏர்பலூன் வேலை செய்யவில்லை என்று விபத்தைப் பார்வையிட்ட போலீசார் தெரிவிக்கின்றனர்.