சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடை பெற்றுவரும் புத்தகக் காட்சி வளாகத்திலேயே பள்ளிக்கல்வித்துறை சார்பாக சர்வதேச புத்தகக் காட்சி இந்த ஆண்டு நடத்தப் படுகிறது. இதற்கான அரங்கு, கடந்த 16ஆம் தேதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் காகர்லா உஷா வரவேற்புரையாற்றினார். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, ஜெர்மன் தூதர் ஜாக்குலின் ஹீதே, ஜப்பான் தூதர் டகா மசாயுகி, மலேசிய துணை தூதர் சங்கீதா பாலசந்திரா, சிங்கப்பூர் தூதர் எட்கர் பங், தாய்லாந்து தூதர் நிடிரூகே போன்பிரசர்ட், பொது நூலக இயக்குனர் கே.இளம்பகவத் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மிகவும் குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும், சர்வதேச புத்தகக் காட்சியில், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், இஸ்ரேல், அர்ஜென்டினா, இத்தாலி, தாய்லாந்து, கத்தார், போர்ச்சுகல், அஜர்பைஜின், உகாண்டா, வங்காள தேசம், அர்மீனியா, மலேசியா, டான்சானியா, துருக்கி, ஜார்ஜியா, ஓமன், யு.ஏ.இ., பக்ரைன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் பங்கெடுத்துள்ளனர். அந்தந்த நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற பதிப்புகள் இந்த அரங்கங்களில் இடம் பெற்றுள் ளன. மேலும், தமிழ் முற்றம் என்ற பெய ரிலான அரங்கில், தமிழ்நாட்டின் பிர பலமான எழுத் தாளர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன.
இந்த சர்வ தேச அரங்கில் நூல்களை விலைக்கு வாங்க முடியாது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மட்டும் தொழில்முறையாக அனுமதிக்கப்பட்டனர். இங்குள்ள வெளிநாட்டு அரங்குகளில் இடம்பிடித்துள்ள சில நூல்களை தமிழில் மொழி மாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தை, தமிழ்நாட்டு பதிப்பக உரிமையாளர்களும், எழுத்தாளர்களும் செய்துகொண்டனர். இந்த சர்வதேச புத்தக காட்சி, 18ஆம் தேதி புதன்கிழமை நிறைவுபெற்றது.
இந்த சர்வதேச அரங்கு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ""தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கக்கூடிய இலக்கியங்களை இங்கே கொண்டு வருவதற்குமேற்ப மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு, 30 முதல் 50 தமிழ்நாட்டு இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து வழங்கவுள் ளோம். அதேபோல் மற்ற நாடுகளின் நூல்களை யும் வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வழங்குவோம். பார்வையாளர்கள் மாலையில் குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு 60 நாடுகள்வரை பங்கேற்கும்படி செய்யப்படும்'' என்றார்.
-தெ.சு.கவுதமன்
படங்கள்: குமரேசன்