"ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே

தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர்

ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும்பாருமே.'

Advertisment

(சிவவாக்கிய சித்தர்)

சட்டைநாதர்: சித்தர்களில் தலைமையானவரே, ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்தவனும் அட்டமா சித்திகளைப் பெற்று சித்தனாகும் வழிமுறைகளை வகுத்துத் தந்தவரே, தமிழ் மொழிக்கும் தமிழின மக்களுக்கும் காவலனே, உண்மையான கடவுள் யார்- கடவுள் எங்கிருக்கிறார்- அவரை அடைவதெப்படி- கடவுளின் அருளையும் ஆசியையும் பெறு வதெப்படி என கடவுள் பற்றிய இன்னும் பல சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை இந்த சித்தர் சபையில் கூறிவருபவரே, அகத்தியப் பெருமானே, தங்களின் பாதங்களை சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

சித்தர்கள் சபையில் காற்றுதான் ஆதிமுதற் கடவுள் காற்றுதான் என்னும் உண்மையைக் கூறிவருகிறீர்கள். இன்று, காற்று தன் சக்தியால் நிகழ்த்தும் இன்னும் பல நிகழ்வுகளைக் கூறுங்கள். தாங்கள் சொல்வதைக் கேட்க சபையில் உள்ளோர் ஆவலாக இருக்கிறோம்.

Advertisment

ss

அகத்தியர்: எனதருமை சித்தர் பெருமக்களே, கடவுளை எல்லாரும் பலகாலமாகத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் கடவுள் இருக்கிறார் என்றும்; இன்னும் சிலர் ஆடல், பாடல், இசையில் இருப்பதாகவும்; இன்னும் பலர் அறுசுவை உணவைப் படைத்து வணங்கினால் கடவுள் அருளைப் பெறலாம் என்றும்; இன்னும் பலர் ஆடு, கோழி என உயிர்பலி கொடுப்பதிலும், சிலர் தானம், தர்மம், தவம் செய்வதிலும் கடவுள் மறைந்திருக்கிறார் என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். இத்தகைய நம்பிக்கை சார்ந்த செயல்களால் கடவுளை அறியமுடியாது. அவர் அருளைப் பெறவும் முடியாது என்பதே சித்தர்களாகிய நமது அனுபவ உண்மை. ஒவ்வொரு உயிரினுள்ளேயும் கடவுள்சக்தி, இறைத் தன்மை உள்ளதென்பதே சைவ சித்தாந்தம் அறிந்து கூறிய உண்மை.

இந்தப் பிரபஞ்சத்தில் எந்தவொரு சக்தியானது அனைத்தையும் அடக்கியாள் கிறதோ- அவற்றைக் கடந்து உள்சென்று செயல்படுகிறதோ- செயல்படச் செய்கி றதோ- கண்ணுக்குத் தெரியாத அருவமாக, உருவமற்று, உணர்வாக உள்ளதோ- பஞ்சபூதங்களில் கலந்து நிற்கிறதோ- எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்து சக்தியாக வியாபித்து நிற்கிறதோ- இது போன்று இன்னும் பல செயல்களை ஓய்வில்லாமல்- அழிவில்லாமல் செய்து கொண்டிருக்கிறதோ- அந்த ஒரே சக்தி காற்றுதான். அதனால்தான் சித்தர்களாகிய நாம் காற்றைத்தவிர வேறெதனை யும் கடவுளாக ஏற்றுக் கொள்வதுமில்லை; வழிபாடு செய்வதுமில்லை. வாசி யோகம்மூலம் முறையாக செயல்பட்டு, காற்றினை வணங்கி, காற்றின் அருளினால் அட்டமா சக்திகளை அடைந்தோம். காற்றுக் கடவுளை நம்முள்ளே கட்டி அடக்கி, மரணத்தை வென்று மரணமில்லா வாழ்வை அடைந்து பல யுகங்களாக வாழ்ந்துவருகிறோம்.

நாம் வழிபடும் கடவுளான காற்று தன் ஆற்றலால் நிகழ்த்தும் இன்னும் பல செயல்களை இப்போது கூறுகிறேன்.

இந்தப் பிரபஞ்சத்தில் உண்டாகும் ஒவ்வொரு நிகழ்வும் காற்றுடன் மண், நீர், நெருப்பு, வானம் ஆகியவை இணைந்துதான் நிகழ்த்தப்படுகிறது. காற்றில்லாமல் இவை தனித்தியங்க முடியாது. உருவமாகவுள்ள இந்த நான்கு பூதங்களுக்கு தனித்த சக்தி யில்லை. உருவமற்ற காற்றுடன் இணைவதால் தான் இவை சக்தியைப் பெறுகின்றன என்பது அகத்தியன் அனுபவத்தில் அறிந்த உண்மை.

மண்ணினுள்ளே மறைந்திருக்கும் காற்று தன் சக்தியால் நிலத்தைப் பிளந்து பூகம்பத்தை உருவாக்குகிறது. நீருடன் கலந்த காற்று கொந்தளிப்பு, பிரளயத்தை உருவாக்குகிறது. காற்றில்லாத வெற்றிடத்தை நிரப்ப பல திசைகளிலிருந்தும் ஓடிவரும் காற்று ஒன்றுடன் ஒன்று மோதிச் சுழன்று, சூறாவளியையும் புயலையும் உருவாக்குகிறது. இதுபோன்று இன்னும் அனைத்து செயல்களும் காற்றினால்தான் நிகழ்த்தப்படுகின்றன.

இனி, இந்த பூமியில் வாழும் உயிரினங்கள், மனிதர்களின் உடலினுள்ளே கடந்து செல்லும் காற்றுக் கடவுள் செய்யும் செயல் களைப் பற்றிக் கூறுகிறேன்.

ஒரு மனிதன் தன் மூச்சுக் காற்றை வெளியிடும்போது, வெளிவரும் காற்றானது நேராகச் சென்றால் அந்த காற்று மண்ணுடன் கலந்து வெளிவரும் காற்று. இது மஞ்சள் நிறமுடையது.

வெளியில் வரும் காற்றானது கீழ்நோக்கி வந்தால் அது நீருடன் கலந்துவரும் காற்று. இது வெண்மை நிறமுடையது.

சுவாசக்காற்று மேல்நோக்கி வெளி வந்தால் அது தீயுடன் கலந்துவரும் காற்று. இது சிவப்பு நிறமுடையது.

மூச்சுக் காற்றானது அடங்கி வெளியில் வந்தால் ஆகாயக் காற்றாகும். இது கருமை நிறம் கொண்டது.

மூச்சுக் காற்றானது ஒழுங்கற்ற நிலையில் வெளிவந்தால் அது காற்றுடன் கலந்து வெளிவரும் காற்றாகும். இது பச்சை நிறமுடை யது.

மூச்சுக்காற்று உடலிருந்து வெளிவரும் இந்த உண்மையை எப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறு கிறேன்.

பத்மாசனத்தில் அமர்ந்து காற்றினை வணங்கி, அதன் சுவாச நிலையை கவனித்து, தினமும் வாசியோகப் பயிற்சிசெய்து காற்றி னைக் கட்டியவன் வெண்மை, சிவப்பு, மஞ்சள், கருமை, பச்சை ஆகிய ஐந்து வண்ணங்கள் உள்ள குண்டுகளைத் தனக்குப் பின்னால் வைத்துக் கொண்டு, தனது மனதை அலைபாய விடாமல் அடக்கி, இவற்றில் ஏதாவதொரு பஞ்சபூத சக்தியை மனதில் நினைத்துக் கொண்டு தன் பின்னாலுள்ள குண்டுகளில் ஒன்றை எடுப்பானாகில், அவன் நினைத்த நிறமுள்ள குண்டு அவன் கையில் கிடைத்தால், அவன் ஐம்பூத சக்திகளை அறிந்தவனா வான். இதுபோன்று ஐந்து நிறங்களுள்ள குண்டுகளையும் மனதில் எண்ணியபடி எடுப்பானாகில் அவன் முற்றுமுணர்ந்த சக்தியைப் பெற்றவனாகி, பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கும் சக்தியைப் பெற்றவனாகி விடுவான்.

நமது மூக்குத் துவாரங்களின் வழியாக உட்செல்லும் காற்றானது, உள்ளே செல்லும் போது ஒரே நிலையில் இருப்பதுபோல் தோன்றினாலும், உடலினுள் சென்றவுடன் 72 ஆயிரம் நாடி நரம்புகளில் பிரிந்தோடி அதனதன் வேலையைச் செய்யவைக்கிறது.

மூச்சுக்காற்று உடலினுள் சென்றவுடன் முதலில் ஐந்து விதமான காற்றுகளாகப் பிரியும். அதன்பின் அந்த ஐந்து காற்றுகளிலிருந்தும் ஒவ்வொரு காற்றாகப் பிரிந்துசென்று செயல்படும். ஒன்றாக உள்சென்ற காற்று உடலினுள் பத்துவித காற்றுகளாகப் பிரிந்து உடல் பாகங்களில் பரவி நின்று உடலை இயக்கும்.

இந்தப் பிரபஞ்ச வெளியிலிருந்து நம்முள்ளே செல்லும் சுவாசக்காற்று முதலில் இதயத்தைச் சென்றடைந்து அதனை இயங்கவைக்கும். இதயத்தை இயக்கும் இந்த காற்றுதான் உயிர்க் காற்றாகும்.

இதயத்திலிருந்து பத்து விதமான காற்றுகள் பிரிந்து உடலின் அனைத்து பாகங்களுக் கும் சென்று அந்தந்த உறுப்புகளை அதனதன் வேலையைச் செய்யத் தூண்டும்.

கண்களுக்குச் செல்லும் காற்று அனைத்துப் பொருட்களையும் வண்ணங்களையும் உருவங் களையும் பார்க்கச்செய்யும். இமைகளை மூடித் திறக்கச் செய்யும்.

தொண்டைக்குச் செல்லும் காற்றானது உணவை விழுங்கச் செய்து, அதிலுள்ள ரசத்தின் சத்தை உடலின் அனைத்து பாகங்களி லும் வியாபித்துப் பரவச் செய்யும். சப்தத்துடன் குரலின் ஓசையை உருவாக்கும். தூங்கும் போது கண்கள், வாய், செவிகள், உடலிலுள்ள தோல் ஆகியவற்றை உணர்விழக்கச் செய்து, செயல்படாமல் வைத்து, தூங்கி எழுந்தவுடன் அவற்றுக்கு உணர்ச்சியைத் தந்து செயல்பட வைக்கும்.

காது நரம்புகளில் ஓடும் காற்று வெளிப்புறத் தில் உண்டாகும் சப்தங்களைக் கேட்டறியச் செய்யும். மூக்கு நரம்புகளில் ஓடும் காற்று வாசனைகளை உணரச்செய்யும். தும்மலை உண்டாக்கும்.

இதயத்திலிருந்து முதுகுத் தண்டின் கீழ்பாகம்வரை நரம்புகளில் ஓடும் காற்று சுக்கிலம், சுரோணிதம், கர்ப்பத்திலுள்ள பிண்டம், மலம், சிறுநீர் போன்ற அனைத்துக் கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும். மேலும் மரணமடைந்தபிறகும் இந்தக் காற்று உடலி-ருந்து வெளியேறாமல் சரீரத்தை வீங்கவைத்து, பிளக்கச்செய்து நாற்றமெடுக்கச் செய்யும். இறந்துபோன உடலை எரியூட்டி தகனம் செய்யும்வரையில் இந்தக் காற்று உள்ளேயே தங்கியிருக்கும். காற்றின் செயலால் தான் உள்ளுறுப்புகளும் உடலும் இயங்குகின்றன.

உடலினுள்ளே செல்லும் காற்று 72 ஆயிரம் நரம்புகள் வழியாக ஓடி, உண்ணும் உணவு, நீரினால் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று சக்திகளைத் தோற்றுவித்து, அவற்றை சமநிலையில் வைத்து, நோய்கள் வராமல் அனைத்து உறுப்புகளையும் சீராக செயல்பட வைக்கிறது. சுவாசக் காற்று ஒழுங்கற்ற நிலையை அடையும்போதும், உணவு, நீர், மூச்சுக் காற்று மாசுபடும்போதும் வாதம், பித்தம், கபம் ஆகியவை சமநிலையிலிருந்து மாறி நோய்கள் உண்டாகின்றன. இது பற்றி நாளைய சித்தர் சபையில் அறிவோம்.

"பொங்குகின்ற காமமென்ன சிவமதாச்சு

பொல்லாத ஆசையெல்லாம் திருமாலாச்சு

மங்குகின்ற மோகமது மகேசனாகும்

மருவியந்த மூன்றாலும் உலகம் பாழாம்

தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்

சமாதிநிலை எல்லாம் சார மூடி

தொங்குகின்ற மோட்சநிலை தடைபோலாக

சூனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.'

(சட்டைமுனிச் சித்தர்)

சித்தர்களைப் பற்றி வாழ்வோம்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!