"ஆதாளியை ஒன்றறியேனை அறத்

தீதாளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கு இறைவா

வேதாள கணம் புகழ் வேலவனே'

Advertisment

என்று அருணகிரிநாதர் போற்றும் வேலவன் கந்தசுவாமியாக குடிகொண்டரு ளும் அற்புதத்தலம் சேயூர் என்னும் செய்யூர்.

திருக்கழுக்குன்ற மரபில் பிறந்த சோழ வம்சத்தைச் சேர்ந்த "வளவன் கழுக்குன்றன்' என்னும் சோழ வேந்தன் இவ்வாலயத்திற்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தினான். இவனது சிலைவடிவத்தை ஆலய மகாமண்டபத்தில் இன்றும் காணப்பெறலாம். கி.பி. 1070 முதல் கி.பி. 1118 வரை இரண்டாம் குலோத்துங்க சோழன் இப்பகுதியை ஆண்டதால் வளவநகர் என்று அழைக்கப்பெற்றது இவ்வூர். வளவாபுரி, அயில்வனம், செய்கையம்பதி, செய்கை நகர் போன்ற பெயர்களாலும் இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது.

sear

Advertisment

அருணகிரிநாதர் "வளவாபுரி' என்று குறிப்பிட்டு இத்தல கந்தசுவாமிமீது இரண்டு திருப்புகழ் பாமாலைகளைச் சூட்டியுள்ளார். அதில் ஊழ்வினை என்னும் கர்மவினையை இத்தல வழிபாட்டால் நீக்கிக்கொள்ளலாம் என்கிறார் அருணகிரி யார் ஆணித்தரமாக!

பிறவி யி லேயே கண் பார்வையற்ற அந்தகக்கவி வீரராகவ முதலியார் இத்தல முருகனைக் குழந்தையாக பாவித்து, பிள்ளைத்தமிழ் இயற்றியுள்ளார். வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், சேறைக் கவிராயர் என எண்ணற்றோர் இந்த சேயூர்மீது பாக்கள் புனைந்து பாடிப் போற்றியுள்ளனர். முத்தையா முதலியார் என்பவர் இத்தல புராணத்தை இயற்றி யுள்ளார்.

பூத நாயகன், பூதப்படைத் தலைவன் என்றெல்லாம் போற்றப்படும் சிவபெருமான், இந்த பூத வேதாளங்களின் தாளத்திற்கேற்பவே நடனமாடுவார். "பூத கணாதி சேவிதம்' என்பது, கணபதியை பூத வேதாள கணங்கள் சேவிப்பதைக் குறிப்பதாகும். "ஸர்வபூத தயாபர' என்று ஐயப்ப சுவாமியை பூதகண நாயகனாகக் கூறுகிறது ஸ்ரீ சாஸ்தா சதகம். அதுபோல இந்த செய்யூர் கந்த சுவாமி ஆலயத்தில் பைரவருக்குக் கட்டுண்டு, 27 நட்சத்திரங்களுக்கான 27 பூத வேதாள கணங் கள் சூழ்ந்து இங்கு கந்தனைப் போற்றுகின்றன.

ஆறுமுகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்தார். சூரபத்மனைப் போரில் வதைத்திட முருகப்பெருமானுக்கு உதவிய பைரவரின் பூத வேதாள கணங்கள், "வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருக் கோலத்தை எங்களுக்குக் காட்சிதந்தருள வேண்டும்' என பைரவரிடம் கோரிக்கை வைத்தன. பைரவர், முருகப்பெருமானிடம் பூத வேதாளங்களின் கோரிக்கையைக் கூறினார். மகிழ்ந்த குமரன், "அப்பன் ஈசன் ஆட்சீஸ்வரராக அருள்புரியும் அச்சிறுபாக்கத்திற்கு அருகிலுள்ள தலத்தில் யாம் கோவில் கொண்டெழுந்து, அனுதினமும் ஈசனை ஆராதிக்க உள்ளோம். அங்கு வேதாள கணங்கள் வந்தால் அவர்களுக்குத் துணைவியர் சகிதமாகக் காட்சி கொடுப்போம்' என்று கூற, பைரவரும் வேதாளங்களைக் கூட்டிக்கொண்டு செய்கையம்பதி வந்தடைந்தார்.

இங்கு தீர்த்தம் (செட்டிகுளம்) ஏற்படுத்தி, சோமநாதரை தினமும் அர்த்தசாமத்தில் கந்தன் பூஜிக்கும் சமயம், வள்ளி- தேவசேனா சமேதராக கந்தன் 27 நட்சத்திர பூத வேதாள கணங்களுக்குக் காட்சிதந்து அருள்புரிகிறார்.

sea

சோமநாதர் சந்நிதிக்கு வெளியே பிரம்மாவும் விஷ்ணுவும் துவாரபாலகர்களாகக் காவல் புரிவதால், மும்மூர்த்திகளின் தரிசனத்தையும் இங்கு நாம் கண்டு பரவசமடையலாம்.

பூத வேதாள கணங்கள் பைரவரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்பதால், பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமியில் இத்தலத்தில் அவரவர் நட்சத்திரத்திற்குரிய பூத வேதாள கணங்களை வழிபட்டு, தங்களது பிரார்த்தனைகளை பைரவர்மூலமாக முருகப்பெருமானிடம் சேர்த்து, எண்ணம் ஈடேறப் பெறுகின்றனர் பக்தர்கள்.

27 நட்சத்திரங்களுக்குரிய 27 வேதாள பூத கணங்கள் சூழ குமரன் வீற்றருளும் இந்த செய்யூர் தலம், மற்ற தலங்களை விட முற்றிலும் வித்தியாசமானது. கிழக்குப் பார்த்த ஆலயம். நாற்புறமும் உயர்ந்த மதில்கள்.

உள்ளே செல்ல... இடப்புறம் கருவறைக்கு எதிரில் பைரவர் அற்புதக் கோலத்தில் அருட்காட்சியருள்கிறார். அவரைப் பணிந்து வணங்குகிறோம்.

சற்று தள்ளி தென்முகமாக உற்சவர் மண்டபம் உள்ளது. கருவறைக்கு முன்னே வாயிலின் வலப்பக்கம் கணபதியும், இடப்பக்கம் கஜலட்சுமியும் அருள்புரிகின்றனர். கந்தனுக்கு எதிரில் வலப்புறம் குஹசூரியன் திருவருள் புரிகிறார்.

கருவறையுள் கருணை வடிவாக அருட் காட்சியளிக்கின்றார் கந்தசுவாமி. தேஜோமயமான முகம். கம்பீரத் தோற்றம். உடன் வள்ளியும் தெய்வானையும் அருள்பாலிக்கின்ற னர். திருப்போரூர், சென்னை கந்தகோட்டம் மற்றும் இந்த செய்யூரில் மட்டும்தான் கந்தசுவாமி என்னும் திருநாமம் கொண்டு முருகன் திகழ்கிறான்.

கந்தனின் அதியற்புத தரிசனம் முடித்து, உட்பிராகார வலம்வருகிறோம்.

இங்கு சிவகோஷ்ட தெய்வங் களோ, சக்திகோஷ்ட தெய்வங்களோ அல்லாமல், பிரத்தியேகமாக கந்தனின் பிற வடிவங்களையே கோஷ்ட தெய்வங்களாகக் காணப்பெறலாம்.

முதலில் தென் கோஷ்டத்தில் நிருத்த கணபதிக்கு பதில் நிருத்த ஸ்கந்தரும் (நடனமாடும் முருகர்), தட்சிணாமூர்த்திக்கு பதில் சிவகுருநாதரும் (சிவனுக்கு உபதேசம் செய்த கோலம்), மேற்கு கோஷ்டத்தில் விஷ்ணுவுக்கு பதிலாக பாலசந்தரும், வட கோஷ்டத்தில் பிரம்மாவுக்கு பதிலாக பிரம்ம சாஸ்தாவும் (பிரம்மனை சிறையிலிட்டு, அவரது ஆயுதங்களுடனான கந்தன்), துர்க்கைக்கு பதிலாக புளிந்தரும் (வேடுவர் உருவில் வள்ளியை மணந்த கோலம்) வீற்றருளுகின்றனர்.

தென்வாயில் வழியாக வெளியே வருகையில், கந்தன் நித்தமும் வழிபடும் மீனாட்சி உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில்கொண்டு அருள் புரிகிறார். துவாரபாலகர்களாக பிரம்மாவும் விஷ்ணுவும் உள்ளனர். எதிரில் சிவசூரியன் எழில் சிந்துகின்றார்.

மதில் தொட்டு, மேற்கு- வடக்கு- கிழக்கு என சுவர்களின் உட்புறம் 27 நட்சத்திரங்களுக் குரிய 27 பூத வேதாளங்கள் கவினுற புடைக்கப் பட்டுள்ளன.

இந்துசமய அறநிலையத் துறையைச் சேர்ந்த இவ்வாலயம் காலை 6.00 மணிமுதல் 11.30 மணிவரையும், மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரையும் திறந்திருக்கும். தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் மாலை 4.30 மணிக்கு முதலில் கணபதிக்கு அபிஷேகமும், பின் 27 பூத வேதாளங்களுக்கு எண்ணெய்க் காப்பும், செவ்வரளிப் பூக்களால் பூஜையும் நடக்கிறது. அப்போது பக்தர்கள் தமது நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களுக்கு மலர் தூவி, நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். தனித்தனியாக தீவட்டியும் கொளுத்துகின்றனர். நிவேதனமாக பொரி, கடலை, சாதம், பனைவெல்லம் கலந்த எள், வாழைப்பழம் படைத்து, உரிய ஸ்தோத்திரம் கூறி, கற்பூரம் காட்டி வழிபடுகின்றனர்.

பின் சுவாமி, அம்பாள், கந்தன் மற்றும் பைரவருக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. முருகனுக்கு தேனும் தினைமாவும் நைவேத் தியம் செய்யப்படுகின்றது.

கடைசியாக பைரவருக்கு மிளகு முடிச் சிட்ட தீபமும், வெண்பூசணிக்காய் தீபமும் ஏற்றி, புனுகு, மரிக்கொழுந்து சாற்றி, தயிர் சாதமும், மிளகு வடையும் நிவேதித்து பூஜையை நிறைவுசெய்கின்றனர்.

இவ்வாறு ஆறு தேய்பிறை அஷ்டமியில் அவரவர் நட்சத்திரங்களுக்குரிய வேதாள கணங்களை வணங்கி, நமது கோரிக்கைகளை அவர்கள்முன் வைத்தால், அவற்றை வேதாளங் கள் பைரவர் மூலமாக முருகனிடம் கொண்டு போய் சேர்த்து நிறைவேற்றப்படுகின்றன.

இத்தல முருகனை வழிபட்டால் குழந்தை வரம் நிச்சயம். அத்துடன் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் முதலிய தோஷங் களும், நோய்களும் களையப்பட்டு நிம்மதியடையலாம்.

சோமநாதரை திங்கட்கிழமை, மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்களில் ஐந்து தீபமேற்றி வழிபட, சகல உடற்ப்பிணிகளும் கிரக பீடைகளும் நீங்கும்.

குரு தோஷம் உள்ளவர்கள், குருவருள் வேண்டுபவர்கள் சிவகுருநாதரை வியாழக் கிழமைகளில் மூன்று நெய்தீபமேற்றி வழிபடவேண்டும்.

தலைவிதியை நொந்துகொள்பவர்கள் இத்தல பிரம்ம சாஸ்தாவை வழிபட்டால், தலைவிதியையே கந்தன் அருளால் மாற்றி அமைத்திடலாம். பிரம்ம சாஸ்தாவை புதன் கிழமைகளில் ஆறு நெய்தீபமேற்றி வழிபடவேண்டும். இவ்வாறு ஆறு வாரங்கள் செய்து வரவேண்டும். இதனால் வறுமை, பிணி அகலும். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கலாம்.

இத்தல விநாயகர், ஈசன், அம்பாள், கந்தசுவாமி, பைரவர் மற்றும் 27 நட்சத்திர பூத வேதாளங்களையும் வழிபட்டு, செவ்வரளி மலர் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சித்து, கந்தசுவாமியாய் விளங்கும் முருகப்பெருமானின் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை தோஷங்கள், கிரக தோஷங்கள், வறுமை, பிணி, மூப்பு முதலியன அகல்கின்றன.

ஆறு சஷ்டி மற்றும் ஆறு கிருத்திகைகளில் கந்தனுக்கு அர்ச்சனை செய்து, செவ்வரளி சாற்றி, நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, சத்ரு தொல்லை நீங்கும். இங்கு சத்ரு சம்ஹார யாகமும் நடைபெறுகிறது.

இத்தல கஜலட்சுமிக்கு நெய்தீபமேற்றி ஆறு தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்து கொண்டு வழிபட, நட்சத்திர தோஷங்கள், கிரக தோஷங்கள், பிற ஜாதக தோஷங்கள் நீங்கப்பெற்று, சகல சௌபாக்கியமும் பெற்று சிறக்கலாம்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யிலுள்ள மேல்மருவத்தூரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செய்யூர்.

மேல்மருவத்தூர், மதுராந்தகம், மரக்காணம் போன்ற ஊர்களிலிருந்து செய்யூருக்கு நேரடிப் பேருந்துகள் உள்ளன.