பாடல்: 17
"வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மே!தெரி யாதொரு பூதர்க்குமே.'
பொருள்: வேதாகம நூல்கள் புகழ்ந்து, பெருமை பேசும், வேலை ஆயுதமாகக்கொண்ட முருகனின், வெட்சிப் பூக்கள் மலர்ந்துள்ள; கால் தண்டை எனும் ஆபரணத்தை அணிந்த பாதக் கமலங்கள் பாதுகாவலாக இருக்க; இரவுமில்லா, பகலுமில்லா, நிர்மலமான அண்ட வெளியில் சலனமற்ற அனுபூதி நிலையில் இருக்கச் செய்வதற்கு இனியேனும் நீ வருவாயாக! இந்த வழிமுறை பூத உடல் கொண்டுள்ள மனிதர்களில் ஒருவரும் அறியாத ஒன்று.
சிகப்பு- வெட்சிப் பூ!
வெட்சி மலர் முருகனுக்கு உகந்தது. மலையும், மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப் பெண்களுக்கு விருப்பமான பூ சிவந்த வெட்சிப் பூவாகும்.
ஒரு நாட்டின் அரசன் அல்லது பகுதியின் படைத்தளபதி இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்க முடிவுசெய்தபின், முதலில் எதிரி நாட்டை பொருளாதாரரீதியில் பின்தங்கச் செய்வார்கள். அன்றைய பொருளாதாரம் என்பது கால்நடைச் செல்வங்களே. அதிலும் குறிப்பாக மாடுகள்.
அதனினும் குறிப்பாக பால்வளம் பெருக்குகிற மாடுகளையும், பெருக்கும் பசுக்களையும்தான் கடத்தி வருவார்கள். இதற்கு "ஆநிரை கவர்தல்' என்று பெயர். ஆநிரை கவரச் செல்லும் வீரர்கள் தங்கள் காதுகளில் சிவந்த வெட்சி மலர்களைச் சூடியிருப்பார்கள்.
அசுர வேட்டை நடத்துபவரான முருகனின் கால் தண்டைகளில் செச்சை என்கிற வெட்சி பூத்திருந்ததாக அருணகிரியார் பாடியுள்ளார்.
"செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் -யத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம்
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்.'
(நக்கீரரின் திருமுருகாற்றுப்படை பாடல் அடிகள் 206- 211)
முருகன் சிவந்த ஆடையை அணிந்துள்ளவன்; சிவந்த அடிப்பாகம் கொண்ட அசோக மரத்தின் குளிர்ச்சியான கொழுந்துகளை காதுகளில் அணிந்துள்ளவன்; இடுப்பில் கச்சை அணிந்துள்ளவன்; கழல்களாகிய தண்டைகளை கால்களில் அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களை தலை முடியில் கோர்த்து அணிந்துள்ளவன்; புல்லாங்குழலை உடையவன்; ஊதுகொம்பினை உடையவன்; பல இசைக் கருவிகளை உடையவன்; ஆட்டினை உடையவன்; மயிலினை உடையவன்; குற்றமில்லாத சேவல்கொடியை உடையவன்; உயரமானவன்; பூண் எனும் அணிகலனை அணிந்த தோள்கள் கொண்டவன்!
-என நக்கீரர் பாடியுள்ளார்.
குறிஞ்சி நிலப் பெண்கள் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி. குறிஞ்சி நிலக் கடவுள் முருகன். இது... வெட்சிப் பூ முருகப் பெருமானுக்கு உகந்த பூ என்பதைக் காட்டுகிறது.
உங்களுக்கு உதவாது...
உங்கள் நிழல்!
பாடல்: 18
"வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.'
பொருள்: கூர்மையானதாகவும், பிரகாச மானதாகவும் வடிவமைக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக்கொண்ட முருகப் பெருமானை வணங்கி, நாம் உண்பது நொய் அரிசி எனப் படும் குருணக் கஞ்சியாகினும்; அது கொஞ்சமே ஆனாலும், அதுவும் இல்லாதோ ருக்கு அதிலிருந்து பகிர்ந்து கொடுங்கள். இல்லையென்றால், நீங்கள் வெயிலுக்கு ஒதுங்க உங்களின் உடல் நிழல் உங்களுக்கு உதவாததுபோல; நமது இறுதிக்கால பயணமான கடைவழிக்கு, உங்களுடன் இருக்கும் எந்தப் பொருளும் உடன் வராது.
கொடை வள்ளலுக்கு கொலைப் பசி!
மகாபாரதத்தில் பலருக்கும் பிடித்த, சிலருக்கு பிடிக்காத; அதே சமயம் செஞ்சோற்று நன்றிக் கடனை மறக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக சொல்லப்படுபவர் கர்ணன். அவரின் கொடை வள்ளல் தன்மை பற்றி பல கதைகள் உண்டு.
பொன்னையும், மணியையும்கூட ஏதோ கல்லையும், மண்ணையும் அள்ளித் தருவதுபோல தந்தாராம் கர்ணன். ஆனால் அப்படிப்பட்ட கர்ணனே பசியில் துடித்த தாக புராணக் கதைகள் சொல்கிறது.
கர்ணன் இறந்தபிறகு சொர்க்கத்திற்குச் செல்கிறான். சொர்க்கத்தின் சிறப்பே, இளமை மாறாமல், மூப்புமற்று, மரணமு மற்று வாழுவதே. அங்கே யாருக்கும் பசி என்பதும் இருக்காது, நோய் என்பதும் இருக்காது. ஆனால் சொர்க்கத்தின் இயல்புக்கு மாறாக கர்ணனுக்கு கடுமையாக பசித்தது.
"சொர்க்கத்தில் பசிக்காது' என கேள்விப் பட்டிருந்த கர்ணனுக்கு இது ஆச்சரியமாக வும், அதிர்ச்சியாகவும்கூட இருந்தது. "தனக்கு ஏன் இப்படி பசிக்கிறது?' என நாரதரிடம் கேட்டார்.
'உலகத்திலேயே சிறந்தது அன்னதானம். ஒருவன் தானமாக எதைக் கொடுத்தாலும் "இன்னும் கொஞ்சம் கிடைக்காதா?' என தன் தேவைக்கு மீறி எதிர்பார்ப்பான். ஆனால் "பசிக்கிறதே' என பதறி வருகிறவனுக்கு உண விட்டால் வயிறு நிரம்பியதும் "போதும்; போதும்' எனச் சொல்லிவிடுவான். கேட்டவன் வாயாலே "போதும்' எனச் சொல்ல வைக்கிற ஒரே தானம்; உயிரை வளர்க்கிற தானம்;
உலகின் சிறந்த தானம் அன்னதானம் மட்டுமே.
மற்ற தானங்களைவிட இது பொருட் செலவும் குறைந்தது; ஆனால் பலன் நிறைந்தது. நீ பொன்னையும் பொருளையும் அளித்தந்த கொடை வள்ளல். ஆனால் ஒரு முறைகூட நீ அன்னதானம் செய்யவில்லை. அதை உனக்கு உணர்த்தத்தான் சொர்க்கத்திலும் உனக்குப் "பசிக்கிறது' என்று நாரதர் சொன்னார்.
முதுமொழிக் காஞ்சியிலொரு பாடலின் சில வரிகளில் உணவையும், உடலையும்- நீருக்கும் நிலத்திற்கும் ஒப்பிட்டும் சொல்லப் பட்டிருக்கும் பாடலின் சில வரிகள்...
"நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே....'
(குடபுலவியனார் பாடிய முதுமொழிக் காஞ்சி; திணை -பொதுவியல் துறை; பாடப் பட்டோன் - பாண்டியன் நெடுஞ்செழியன்.)
உணவால் வளர்ந்த பிண்டம் உடல். உடலில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலம் மற்றும் நீரால் அமைந்தது; விளைந்தது. நிலத்தடி நீரை தக்கவைத்தால் உணவுப் பொருட்களின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.
-என்பது குடபுலவியனார் பாட்டின் பொருள்.
தமிழின் "இரட்டைக் காப்பியங்கள்' என்பதில் ஒன்றான மணிமேகலை காப்பியம், பசி நோயின் கொடுமையையும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதையும், அதன்மூலம் அவள் பசிப்பிணி தீர்த்து வந்ததையும் பிரதானப்படுத்தியுள்ளது.
"மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறஞ் சாற்றினார்.'
(சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை: 12. அறவணர்த் தொழுத காதை)
மக்களையும், அமரத்துவம் பெற்றவர்களான தேவர்களையும் சமநிலையில் வைக்கிற ஒரு அறச்செயல் என்றால் வரியவர்களின் பசிப்பிணி தீர்ப்பதே.
-என அள்ள அள்ளக் குறையாத அமுத
சுரபி பெற்ற மணிமேகலை; ஆசிபெறச் சென்ற போது அறவணர் அடிகள் சொன்னது.
"நீரின்றி அமையாது உலகு' "சோறின்றி
அமையாது உலகு' பிறருக்கு பகிர்ந்து
கொடுத்து உண்பது சிறப்பிற்குரியது. அப்படி ஏழைக்கு உதவாமல் இருந்தால் நீ சேர்த்த பொருள் எதுவும், உன் மரணத்தின்போது உடன் வராது' என்பதே அருணகிரியார் கூற்று.
"வாதுற்ற திண்புயர்அண் ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.'
(பட்டினத்தாரின் பொது- மெய்யுணர்வு பாடல்: 9)
அண்ணாமலையாரின் திருப்பாதங்களை எப்போதும் பற்றி, அவன் புகழ் பாடு நெஞ்சே. இந்தப் பூமியில் எத்தனை செல்வமும், புதையலாகக் கிடைத்த செல்வமும், எதற்கும் பயன்படாத காதற்ற ஊசியும்கூட, நீ வீடு விட்டு காடு போகும்போது கூடவராது.
இரண்டு ஞானஸ்தர்களும் "சேர்த்த செல்வம் கடைவழிக்கு வராது' என எடுத்தி யம்பியிருக்கிறார்கள்.
(பாட்டு வரும்)