ஒரு எழுத்தாளனாக படைப்பாளி யாக மனதில் தோன்றுகிற உணர்வுகளை மானுடம் சிறக்க வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். கவிதை சிறுகதை நாவல் ஆகிய படைப்பு வடிவங்கள் எல்லாவற்றின் மீதும் பிரியம் உண்டு எனினும் கவிதை சற்றுக் கூடுதலாக ஆத்ம திருப்தி அளிப்பது உண்மைதான்.
தாங்கள் குடும்பம் இலக்கியப் பின்னணி சார்ந்ததா?
என் குடும்பம் பரந்துபட்ட வாசிப்பைக் கொண்டது. அம்மா மீனாட்சி ஆசிரியையாகப் பணியாற்றியவர். தந்தை பத்மநாபன் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர். என் பால்யத்தில் நாளிதழ், வார இதழ் துவங்கி மாத பத்திரிகைகள், வருட மலர்கள் வரை அப்பா நிறைய புத்தகங்களை வாங்கி வருவார். அம்மாவும் வாசிப்பதற்குத் தடை சொல்ல மாட்டார். என்னுடைய ஒரே ஒரு அக்காளும் நிறைய வாசிப்பார். இயல்பாகவே இந்தப் பின்னணி என்னை இடையறாத வாசிப்புக்கு ஊக்குவித்தது. பதின்ம வயதில் தீவிர இலக்கியம் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் கவிதைகளின் வழியாகத்தான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தேன். நண்பர்களும் வாசிப்பவர்களாகவே அமைந்தார்கள். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ரவிசங்கர், ஆத்மார்த்தி ஆனது எப்போது? ஏன்?
என் கல்லூரிக் காலம் முடிந்த சமயம் எனக்கு மட்டுமே நான் எழுதிக்கொண்ட டைரிக் குறிப்புகள் மற்றும் என் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் ஆகியவற்றில் சொந்தப் பெயரை எழுதி கையொப்பம் இடுவதற்கு பதிலாக எனக்கு நானே ஒரு சில பெயர்களை சூட்டிக்கொள்ளத் தொடங்கினேன்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 'ஆத்மார்த்தம்' எனும் சொல்லின் பெண்பாற் பெயர்ச்சொல்லாக ஆத்மார்த்தி என்கிற பெயரைக் கண்டடைந்தேன். நான் எழுத்தாளனாக மாறுவதற்குப் பல வருடங்கள் முன்பே எனக்கான புனைபெயரைப் புடம் போட்டு வைத்திருந்தேன்.
தங்கள் எண்ணத்தை சரியாக வெளிப்படுத்த இலக்கியத் தின் எந்த வடிவம் எளிதாகவும் மனதுக்கு இணக்கமாகவும் இருக்கிறது?
விரும்பியதை கவிதையாக எழுதுவது எப்போதுமே இணக்கமான ஒன்று. ஒரு உண்மை சொல்கிறேன். இலக்கியம் வடிவம் தாண்டிய உணர்தலின் வெளிப்பாடு என்பதைப் பலரைப் போலவே நானும் மெய்ப்பிக்கிறேன். கவிதையாக எழுதியதை சிறுகதையாகவோ குறுநாவலின் ஒரு கதுப்பாகவோ நாவலின் இடையில் ஒரு காட்சியாகவோ எழுதுவதில் மிகவும் விருப்பம் உடையவன் நான். கட்டுரைகள் தீராக் கனாவுக்கு மேலதிக வானம்போல் விரிகின்றன ஆகவே இவை எல்லாமே இணக்கம்தான் என்கிறேன்.
உங்களை இலக்கியத்தில் எப்படி நிலைநாட்டி வருகிறீர்கள்?
நான் யதார்த்தத்தை எழுத வந்தவன், ஆனாலும் நான் எழுத வந்தது ஒரு திட்டமிட்ட திருப்பம்தான். எழுத்தை கலை மற்றும் திறன் என இரண்டாக புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். அதன் ஆன்மா என்றே அதனை புரிந்து கொள்கிறேன். கதையோ கவிதையோ கட்டுரையோ அது வெளி வருகிற இதழின் பக்க அமைப்பு, இடம் பொருள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப என் படைப்பை எழுத விழைகிறேன். எதை எழுதினாலும் வரைகலைக் கலைஞர் ஒருவரின் பொறுப்போடு எழுதுவதை, ஒரு ஆகமம் போலவே என் முதல் கவிதையிலிருந்து கடைப்பிடித்து வருகிறேன். நம் படைப்பை நாம் தெரியப்படுத்தினால் போதும். நம் பெயரை அது தெரியப்படுத்தும் என்பது எனக்கு மூத்தவர்கள் சொல்லித் தந்த பாடம் அதை மறவாமல் இருக்கிறேன்.
தங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர்கள் ? யாருடைய பாதிப்பில் எழுதுகிறீர்கள்?
ஒரு அசலான படைப்பாளி ஆயிரம் சாயலுடன்தான் இருக்க முடியும் என நம்புகிறேன். நான் என்பவன் என் சந்ததிப் பெருமழையின் ஒரு துளி தானே. நான் வாசித்து எனக்குள் அசைபோட்ட எத்தனையோ படைப்பாளிகளது செல்வாக்கு என் எழுத்தில் நிச்சயம் தென்படலாம். கடலான பின் 'எந்த நீர் எந்த நதி' என்று பிரித்தறிய முடியாதல்லவா? அப்படித்தான் என் எழுத்தும் என்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லத் தொடங்கினால் குறைந்தபட்சம் சில நூறு பேரையாவது சொல்ல வேண்டும்.
தங்கள் படைப்புகளில் எத்தகைய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்து வருகிறீர்..?
நான் பார்த்த மனிதர்கள் மட்டுமின்றி, கற்பனையில் உதிப்பவர்கள், காண விரும்பும் மனிதர்கள் வரை மனத்தின் ஆழத்தில் 'என்னை எழுது' என்று இடையறாமல் உந்திக் கொண்டிருக்கும் மனித மனங்களை, குணங்களை, மேன்மையை, ஏன் சில தனித்த இழிவுகளைக்கூட என் படைப்புகளின் ஊடாகப் பதிவு செய்ய விழைகிறேன். வாழ்க்கையில் வேறு எதை விடவும் இலக்கியத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் ஏகம் இருக்கிறது என்பது என் நம்பிக்கை. அதையே என் எழுத்தின் வழியாக முயற்சிப்பவன் நான். சொல்லப்படாத மன மூலைகளை சொல்லிப் பார்க்கவேண்டும் என்பது என் அவா. உதாரணமாகச் சொல்வதானால் "பீஹாரி" என்கிற எனது சிறுகதை மதுரைக்கு வேலைநிமித்தம் வந்து இங்கேயே உயிரை விடும் வட மாநிலத்தவன் ஒருவனது சிறுகதை. சாகித்ய அகாதமி தொகுத்திருக்கும் சமகாலச் சிறுகதைகள் நூலில் இடம்பெற்றிருக்கிறது.
மதுரைக்கு என்று தனி மகத்துவம் உண்டு. தனி மொழி உண்டு.. அப்படி மதுரையின் மகத்துவத்தை பிரதிபலிக் கும் விதமாகவும் எழுதும் எண்ணம் உண்டா?
குறிப்பாக திரைப்படத்துறையில் இதற்கான வாய்ப்பு மற்ற யாவற்றை விடவும் அதிகம் என நம்புகிறேன். சிறுகதை, நாவல் ஆகியவற்றில் என் முன்னோடிகள் பலரும் முனைந்து வென்ற விடயம்தான் இது. மனக்குகை சித்திரங்கள் என்கிற மதுரை சார்ந்த வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறேன். இன்னும் கதைகள் நாவல்கள் என எழுதத் திட்டம் உண்டு.
உங்கள் இரண்டாவது நாவல் மிட்டாய் பசி கவனிக்கப்பட்ட அளவுக்கு முதல் நாவலான ஏந்திழை கவனம் பெறவில்லையா..?
ஒருவகையில் அது சரிதான். ஏந்திழை என் முதல் நாவல். ஒரே தலைப்பில் இருவேறு களங்களும் காலங்களுமாக விரிந்து நிறையும் நாவல் அது. சமகாலத்தில் துவங்கி 19 ஆம் நூற்றாண்டுக்குள் பயணித்து மீண்டும் சமகாலத்தில் வந்து நிறையும். மிட்டாய் பசி அப்படி அல்ல. ஆனந்த் எனும் மானுடன் ஒருவனின் பால்யத்திலிருந்து இருபத்தைந்து ஆண்டுகால வாழ்க்கைப் பாதையின் காலாதீத மாற்றங்களைப் பற்றிப் பேசுகிற வாழ்வனுபவமாக விரிந்த நாவல். எழுத்துக்கென்று காலக்குறி ஏதுமில்லை. ஏந்திழையும் ஓங்கி ஒளிர்வாள் என்று நம்புகிறேன். என் கவனமெல்லாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் "தேவதாஸ்" எனும் என் அடுத்த நாவலில் தான் குவிந்துகிடக்கிறது எழுத்தாளர்கள் குழு சார்ந்தே இயங்குகிறார்களே.. இது ஆரோக்கிய மானதா?
எதில்தான் குழு இல்லை? ஒரு திறந்த நோக்கத்துக்காக ஒன்று சேரும்போது எதுவும் தவறாகாது. அப்படி ஒரு நோக்கம் இல்லாமல் குழுமும்போது அதனை ஏற்க முடியாது. என்னைப் பொறுத்த மட்டில், எந்தக் குழுவிலும் சாராத பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அவர்களில் ஒருவனாக இருந்து கொண்டிருக்கிறேன்.
முதல் விருது பெறும்போது இருந்த மனநிலை அண்மையில் வாங்கிய விருதின்போது இருந்ததா?
மேடையும் முன் நிலமுமாய் வாழ்க்கை எப்போதும் தன் முக்கியத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருக்கிறது. முதல் விருது, அண்மையில் வாங்கிய பாலகுமாரன் விருது, அடுத்து வாங்கப் போகும் விருதுகளும் அந்த நேரத்து மகிழ்ச்சி.
அடுத்த காலத்துக்கான உந்துசக்தி. எப்போதைக்குமான பொறுப்புணர்வு. இதைத் தாண்டி ஏதுமில்லை.
விருதுக்காகவே எழுதப்படுவது வரவேற்கக் கூடியதா?
ஒரு படைப்பாளன் தன் படைப்பு, பேசு பொருளாக மாறுவதை விரும்புகிறான். நீர்ப்பரப்புக்குள் எறிந்த கல்லைப் போல் தன் படைப்பு காணாமல் போவதை விட, கனிகொண்ட மரத்தின் மீது கல்லடி படுவதை மேலாக எண்ணுகிறான். என்னைப் பொறுத்தமட்டில் விமர்சனம் என்பதே ஒருவகை விருதுதான் எனச் சொல்ல விரும்புகிறேன். படைப்புகள் விமர்சிக்கப்படுவதும் அவற்றுக்கு விருது கிடைப்பதும் வரவேற்கவேண்டியது தான்.
விருதுக்காகவே எழுதப்படுகிற படைப்புகளை காலம் நினைவில் வைத்திருப்பதில்லை. தன்னைத் தொடர்பவர்களுக்கு நினைவுபடுத்துவதும் இல்லை. அவை சரவெடி சப்தத்துக்கு நடுவில் உச்சரிக்கப்படுகிற பாடல் வரி போல் இருந்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆகையினால் எழுத்தைத் தேடி விருது வர வேண்டுமே தவிர, விருதுக்காக எதுவும் எழுதப்படுதல் கூடாது.
இப்போது இலக்கியம், சினிமா இரண்டில் எதற்கு முக்கியத்துவம் தந்து வருகிறீர்கள்?
சினிமா, நான் கனவு காணும் வழிமுறை. இலக்கியம்லிஎழுத்து என் கனவின் உள்ளுறை. என் இரண்டு கண்களாலும் எப்போதும் நான் பார்க்கிறேன் என்பது எத்தனை உண்மையோ அதே அளவு உண்மை சினிமாவையும் இலக்கியத்தையும் நான் நேசிக்கிறேன் என்பதும். சினிமாவை நாம் படம் என்று சொல்வதை விட பாடம் என்று கொள்வதே வழக்கம்.
ஒரு படத்தில் நடித்துள்ளதாக அறிகிறேன். தொடர்ந்து ஏன் நடிக்க வில்லை?
தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி எனது கல்லூரி சீனியர். நாங்கள் இருவருமே மதுரையில் திருநகர் எனும் பகுதியைச் சார்ந்தவர்கள். மாண்பமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த கண்ணே கலைமானே எனும் திரைப்படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி விழாவில் எழுத்தாளன் பேசுவதுபோல் என்னை அவர் நடிக்க வைத்தார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் விருப்பமும் இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை என்பதே 'தேடல்களின் வேடந்தாங்கல்' என்று ஓர் இடத்தில் எழுதி இருப்பேன். அது வேடங்களுக்கும் பொருந்தும் அல்லவா?
பாடல் எழுதியது உண்டா?
தமிழ் திரைப்பாடல் சரித்திரத்தை உற்று நோக்குபவன் நான். புலன்மயக்கம், தூவான தூறல் என நூறு ஆண்டு தமிழ்ப் பாடல் சரித்திரத்தைக் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். கண்ணதாசன், வைரமுத்து இருவரின் பல பாடல்களுக்கு நான் ரசிகன். இன்று பாடல்களின் முகமும், ஆன்மாவும் மாறிவிட்டதாகக் கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் பாட்டு எழுதுவதில் எந்த தயக்கமும் இல்லை.
புத்தகங்கள் ஏராளமாக சேகரிப்பவர் நீங்கள். அத்தனையும் வாசிக்க வாய்ப்பு கிடைக்கிறதா?
புத்தகம் என் ஏழு வயதிலிருந்து நான் நேசிக்கும் முதல் பண்டம். வாங்கிய கணமே வாசிப்பதற்காக மட்டும் நான் புத்தகங்களை நாடுவதில்லை. சினிமா பற்றிய ஆய்வு நூல்கள் தொடங்கிச் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெளியான சினிமா பத்திரிகைகள் வரை பலவற்றை யும் சேகரிப்பவன் நான். எழுதுவதற் காகவும் வாசிப்பதுண்டு. வாசிப்பதற்காகவே வாங்குவதும் உண்டு. புத்தகங்களை வாசிப்பதற்கென்று தனித்த நேரங்காலம் எதையும் நாடிக் காத்திருப்ப தில்லை. பயணத்தின் போது மட்டுமல்ல தனிமை
யின்போதும், ஏன் யாரையாவது சந்திக்கச் சென்று காத்திருக்கையிலும் வாசிப்பதற்கென்றே புத்தகங் களைக் கொண்டு செல்வேன். எங்கேயும் எப்போதும் வாசிப்பைக் கைக்கொள்வேன்.
விமர்சனம் என்பது எப்படி இருக்கவேண்டும்?
நிறைந்து கடந்து செல்லும் நூல்களைப் பற்றிய வாசிப்பனுபவத்தை விமர்சனமாக நான் பதிவு செய்வது உண்டு. வெளியில் கட்டுரையாகப் பதிவிடாத நூல்களுக்கும் என்னளவில் கருத்து என்ன என்பதைப் பற்றிக் குறித்துக் கொள்வதுண்டு. விமர்சனம் என்பது விமானம் விண்ணேகுவதற்கு முந்தைய ஓடுபாதை போல் இருக்கவேண்டும். அதன் இறக்கைகளின் மீது கற்களைப்போல் இருந்துவிடக் கூடாது. படைப்பைத் தொடர்வதற்கான எரிபொருளாதல்தான் விமர்சனத் தின் அறம். படைப்பவனை எரியூட்டிவிடக் கூடாது.
தாங்கள் விமர்சனத்தை எப்படி எதிர் கொள்கிறீர்?
உணவகத்தின் பதார்த்தப் பட்டியல் போல் விமர்சனங்களைப் பார்வையிடுகிறேன். எனக்கு உகந்தவை எனப் படுகிறவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறேன்.
தங்கள் படைப்புக்களை வாசிப்பவர்கள் தங்கள் எழுத்தை சரியாக உள்வாங்கியுள்ளனரா?
எத்தனையோ படைப்புக்களைக் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் மறுவினைகள் தரும் பலரையும் பனித்த நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். என் படைப்பின் வழியாக என்னை வந்தடைந்த பலர் இன்றைக்கு எனக்கு நண்பர்களாகவும் உள்ளனர். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். ஒரு குறிப்பிட்ட வரியைக் கூறி அதைப் பற்றிப் பேசும்போது அந்த நாளைத் திருநாளாகவே மாற்றிச் செல்வோர் பலர் உளர்.
உங்கள் இலக்கிய மேடை அனுபவம் பற்றி?
பேசக்கூடாத ஒன்றைக் கூடப் பேசிவிடக் கூடாது என்று மனதடியில் உறுதி பூண்டவன் நான். அதன் படியே தான் பேச்சு அமைகிறது. எழுதுவதைப் போலவே மேடைகளில் பேசுவதும் மனப்ரியத்துடன் நிகழ்த்தவேண்டிய கலை வெளிப்பாடு என்று நம்புகிறேன்.
இலக்கியத் திருவிழாக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்த அரசு அமைந்த நாள் தொட்டுத் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றி வருகிற பணிகள் அபாரமானவை. இலக்கியத்துக்கும் வெகுசன சமூகத்துக்கும் இடையிலான இடைவெளியை இல்லாமற் செய்ய இத்தகைய இலக்கியத் திருவிழாக்கள் சிறந்த முன்னெடுப்பாகத் திகழ்கின்றன. நிச்சயமாக இத்தகைய திருவிழாக்கள் இலக்கியத்தை நன்கு வளர்த்தெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.
தங்கள் இலக்கு?
வாழ்தல் இனிது என்பது என் வாழ்கால வாசகம். . எழுத்தே பயணமும் இலக்குமாய்க் கொள்கிறேன். எழுத்தின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறேன். எழுத்தே படகாய்-துடுப்பாய்-திசையாய்-கடலாய் ஆனபடியால் அதுவே கரைகளுமாய்த் திகழ்கிறது
எழுத்தால் சமூகத்தைத் திருத்த முடியுமா..?
நிச்சயம் முடியும். சிறைச்சாலைகளில் இருக்கும் நூலகத்தை எவனொருவன் அதிகம் பயன்படுத்து கிறானோ அவன் பண்படுவது வேகமாக நிகழ்கிறது. கல்வியின் வழியாக எல்லோருக்குமே எழுத்தும் வாசிப்பும் அறிமுகமாகித் தேர்ந்த பின்னரும் இலக்கியத்தை வாசிப்பது தேடலாகவும் எழுதுவது கொடுப்பினையாகவும் இன்றளவும் எஞ்சுகின்றன அல்லவா? எழுத்தைப் பற்றிக் கொண்டவர்க்கு ஏற்றம் நிச்சயம். சமூகம் எங்கேயெல்லாம் பிறழ்கிறதோ அங்கேயெல்லாம் எழுத்தின் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. அதனால்தான் கத்திக்குப் பயப்படாதவர்கள் கூடக் காகிதத்துக்குப் பயந்தார்கள். இந்த நொடியும் ஏன் இனி வரும் காலமும் எழுத்தென்பது குறைந்துவிடக் கூடாத அறம். அள்ளக் குறையாத நம்பிக்கையின் அட்சய பாத்திரம். ஒரு சமூகம் எழ வேண்டும் எனில் எழுத வேண்டும். நான், நீங்கள், நாமாவது, யாராவது எழுதிக் கொண்டே இருந்தால் தான் உலகம் உய்யும். சமூகம் எனும் சொல் உலகம் எனும் சொல்லுக்கு உட்புறம் தானே உள்ளது..? ஆகவே எழுத்தின் வழி சமூகமும் உய்யும். சமூகத்தைத் திருத்தும் வல்லமை கொண்டது எழுத்து.