லரும் பயணம் செய்து செல்லும் இடம் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருவரது பயண அனுபவங்களும் வெவ்வேறானவை. வெவ்வேறு காலங்களில் மேற்கொண்ட பயணங்களும் அன்றைய வரலாறுகளை பதிவில் கொண்டவை. நமது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல்களின் மூலம் நாம் அறிந்தவையாக தலைவியைக் காண்பதற்காக தலைவன் இரவு நேரங்களில் காடுகளின் ஊடே நடந்துவந்த பயண அனுபவங்களில் அவன் கண்டிருந்த காட்சிகளைப் பதியவைத்து, இன்று அருகிவிட்ட பல உயிரினங்கள் அன்று எண்ணிக்கையில் நிறைந்து வாழ்ந்ததற்கான சாட்சிகளாக இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.

s

சுதேசமித்ரன் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய தேசியகவி பாரதியாரும் அவரது மனைவியும் அமர்ந்து சென்ற மாட்டுவண்டிப் பயணமானது வழிநெடுகிலும் அன்றிருந்த சத்திரங்களையும் சாவடிகளையும் நீரோடிய ஆறுகளையும் மக்களின் மனநிலையையும் பதியவைத்திருக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சேலம் பகடலு நரசிம்ம நாயுடு அவர்களது ரயில் பயணமானது தமிழ் மொழியின் முதல் பயண நூலாக இன்று பதிவில் இருக்கிறது. பயண இலக்கியத்தைப் படைப்பதற்காகவே எழுத்தாளர் ஜானகிராமன் மற்றும் சிட்டி அவர்களது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பயணமானது "நடந்தாய்; வாழி, காவேரி!" எனும் நூலாகியிருக்கிறது.

இவ்வாறு பயண இலக்கியங்கள் இன்னும் பல்வேறுபட்டவையாக இருக்க, மருத்துவர் கு. சிவராமனின் பயணக் கட்டுரைகள் அடங்கிய நூலான, "அங்கொரு நிலம் அதிலொரு வானம்" எனும் புத்தகமானது, கவிஞரும் சித்த மருத்துவருமான அவரது பன்னாட்டு விமானப் பயணங்களை ஒன்றிணைத்து வேறுபட்ட பயண அனுபவங்களை நமக்கு அளிக்கின்றன. இந்நூல் வெளியாவதற்கு முன்பு நிலவியிருந்த கருத்தான "பயணம் என்றால் வழிநெடுக வியாபித்திருக்கும் காட்சிகளையும் கலாச்சாரங்களையும் கண்டு உணரும்படி இருக்கவேண்டும். ஒரு புள்ளியிலிருந்து மறுபுள்ளிக்கு நகருகின்ற தொடர் விமானப் பயணம் அவ்வாறான வாய்ப்புகளைக் கொடுப்பதில்லை" என்பதை தொலைவில் வைத்துவிட்டு, அயல்நாட்டு உள்ளூர் விமானங்களில் குறைந்த அளவு உயரத்தில் அவர் பயணம் செய்த பொழுது கண்டிருந்த, "பனியால் போர்வையிட்ட மலையின் உச்சியையும், எண்ணெய் எடுக்கப்படும் கடலின் நடுவினையும், அங்கு பணிபுரியும் மக்களின் வலிகளையும் காட்சிகளாகக் கொண்டு கவித்துவமாகக் கலந்துகொடுத்த கட்டுரைகள் புதியனவாக புத்தகத்தில் பதிந்திருக்கின்றன.

Advertisment

ss

சித்த மருத்துவத்தைக் குறித்து சிறப்பு உரையாற்றவும் நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பற்றி பேசுவதற்கும் வெவ்வேறு சமயங்களில் பல்வேறு நாடுகளுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் குறித்த கட்டுரைகளை 12 தலைப்புகளில் தொகுத்து அளித்திருக்கிறார். தான் சென்ற இடங்களிலெல்லாம் பரவலாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் உணர்வுகளை சந்தித்தபோது சிலாகித்ததை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். பிறந்து சில நாட்களேயான குழந்தைகளை தனது கையில் ஏந்துவதற்கு கொடுத்து மகிழ்ந்த இளம் பெற்றோர்களைப் பதியவைத்திருக்கிறார். உறவு முறைகளில் நமது முக்கிய உறவான தாய்மாமன்களின் அன்பில் வாழ்ந்தவரான மருத்துவர் கு. சிவராமன், தன்னை மாமா என்று அழைக்கும் அயலகத்தில் வாழும் தங்கைக் குழந்தைகளை சந்தித்துப் பிரியும் பொழுதும், அவ்வாறே தன்னை அழைக்கும் ஈழக் குழந்தைகளையும், உள்ளத்தால் உணர்ந்து மகிழ்ந்து வெளிப்படுத்தியிருப்பது உறவை மேலும் உன்னதமாக்குகிறது.

வாழ்நாள் முழுவதும் தனது பிள்ளைகளுக்காக உழைத்துவிட்டு முதிய பருவத்தில் முடியாதபோது கைவிடப்பட்டவர்களாக முதியோர் இல்லங்களில் நிரம்பி வழியும் நிலையும் இந்திய நாட்டில் நிலவிவர, நயாகரா நீர்வீழ்ச்சியின் முன்பு கைகளைப் பற்றிக் கொண்டு படகில் பயணித்த ஜப்பானிய முதியவர்களின் அன்யோன்யத்தை விவரித்தவராக, "முதுமையின் வாழ்வியலை வெள்ளையர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்கிறார். வாழ்நாள் முழுவதும் உழைப்பதையெல்லாம் பிள்ளைகளுக்கு அள்ளிக்கொடுத்து முடித்த பிறகு, வெற்றுப் பாதங்களில் வழிகளற்று நிற்கும் நிலை மாறி தனக் கான விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு நிகழ்காலத்திலேயே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தை இவ்வரிகள் இந்திய பெற்றோர்களுக்கு ஏற்படுத்துகிறது. இயன்றவரை பயணம் செய்து இனிய நினைவுகளையும் சேமித்து இறுதி நாட்களில் அதனை எண்ணி மகிழும் மனநிலையைக் கொண்ட அயலக தம்பதிகளைப்போல நம்மவர்களும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை இந்தப் புத்தகம் கொடுத்துவிடுகிறது.

கட்டுரைகள் முழுவதும் கவித்துவமாக அமைந்து ஆங்காங்கே சில இடங்களில் புன்னகையை பூக்கச் செய்வதோடு அனுபவம் இல்லாமல், அறியாமல் அவர் எதிர்கொண்ட சம்பவங்களை தனது நகைச்சுவை கலந்த உணர்வோடு விவரிக்கும்பொழுது வாய்விட்டு வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாகவும் அமைந்துள்ளது. "மனிதனுக்கு எளிதாக சோகத்தை ஏற்படுத்திவிடலாம். அவனை சிரிக்க வைப்பதற்கே முயற்சிகள் தேவைப்படுகிறது" என்பது திரைப்படத்துறையில் பரவலாகப் பேசப்படும் எண்ணமாக இருக்கும்பொழுது, இந்நூலில் எழுத்தால் மட்டுமே இயல்பாக நகைச்சுவையைக் கலந்திருப்பது சிறப்பாக உணர வைக்கிறது.

ss

Advertisment

அழகியலை வர்ணிக்கும் பொழுதும் அவ்வாறே இருக்கிறது. விமானத்தின் மூலம் திருவனந்தபுரம் சென்றபோது, மேற்குத் தொடர்ச்சி மலையைக் கண்ட காட்சியை பச்சைப் பட்டுடுத்தி வனப்பாகக் காட்சியளிக்கும் பெண்ணாகவும், இங்கிலாந்துக்குச் சென்றபோது ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனி உறைந்த தூவானத்தைக் கண்டு வெள்ளை பூக்களைக் கொண்ட கொள்ளை அழகென வியந்து, திருமணம் முடிந்து தேவாலயத்திலிருந்து தேவதைபோல அலை அலையாக விரிந்த உடையுடன் நடந்து வரும் பெண்ணாகவும் வர்ணித்திருப்பது அவ்விடங்களை கூடுதல் அழகாக்குகிறது. மஸ்கட்டில் நடந்த தமிழர் திருநாள் நிகழ்வுகளை விவரிக்கும்பொழுது, பாலைவனப் பகுதியில் உள்ள திறந்தவெளி கடற்கரை அரங்கில் மருத நிலத்து கிராமிய நிகழ்ச்சிகள் நடந்து, கொஞ்சம் தொலைவில் குறிஞ்சி மலையும் உயர்ந்து நின்று, முல்லையாய் தமிழ் மக்கள் திரண்டவாறு பட்டுப்பாவாடையும் வேட்டியும் சேலையும் தாவணியும் மொத்த மஸ்கட்டையும் களைகட்ட வைத்ததை திரைக்காட்சியாக்கி ஐவகை நிலங்களையும் ஒன்றிணைப்பது தமிழால் மட்டுமே இயலும். புத்தகத்தின் இப்பக்கங்கள் சங்கத்தமிழாக இனிக்கிறது.

உலகப் பயணத்தால் அவர் கொடுத்திருக்கும் ஒப்பீடுகளின் மூலம் நம்மிடமிருக்கும் மருத்துவமும் மரபும் மண்வளமும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதையும் உணர வைக்கிறது. அவரது ஆறாம் திணை நூலானது அயலகத்தில் ஆர்கானிக் கடையை திறந்து வைத்திருக்கிறது. முதல் திறப்பும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மருத்துவர் கு. சிவராமன் மூலமாகவே நடந்து பெருமகிழ்ச்சியைக் கொடுத்து நெகிழ வைக்கிறது. இந்து மகா சமுத்திரத்தின் நடுவே சிறு சிறு புள்ளிகளாக இருக் கும் பல தீவுகளின் கூட்டமான செஷல்ஸ் தீவுகளைக் காண அங்குள்ள அவரது நண்பர்கள் தமிழ்ச் சங்கம் அமைப் பதற்காக அழைத்த வாய்ப்பில் சென்றபோது, அங்கு 250 ஆண்டுகளுக்கு முன்பே தரங்கம்பாடி துறைமுகத்திலிருந்து தமிழர்கள் பிரஞ்சு கப்பலின் வழியாக பயணம் செய்து இந்த தீவிற்கு குடியேறியதால், பெரும்பாலானவர்கள் தமிழர்களாக வசிப்பதைக் குறிப்பிட்டு, "இதே கடலின் அக்கரையில்தானே இந்திய மண்? அந்த மண்ணின், மரபின் நீட்சியாகவே செஷல்ஸை அறியமுடி கிறது. வலசை போகும் பறவைகளைப் போல், வாழ்வு தேடிப்போன தமிழர்கள் இருக்கும் இந்தப் பகுதியில் தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழ் நிலமும் தமிழ் மரபும் நிறையவே இருக்கின்றன. லெமூரியாவின் எச்சங்களாக, என்றோ புவி குமுறிய சிதறல்களாக இந்த செஷல்ஸ்!" என்கிறார். இவ்வாறு தான் காணும் இடங்களிலெல்லாம் தமிழைக் கண்டடைந்து கொண்டாடிய விதமாக இந்த நூல் அமைந் திருக்கிறது.

லண்டன் சென்றபோது கண்ட காட்சி களில் வானுயர்ந்த கட்டடங்களைக் கண்டு உலகையே ஆண்ட அவர்களது திமிர் அதன் பிரம்மாண்டத்தில் தெரிவதாகக் குறிப்பிட்டி ருக்கிறார். தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப் பட்டிருக்கும் புகழ்பெற்ற பாலத்தைக் கண்டும், தொழிற்சாலைக் கழிவுகளால் சாக்கடையாகிப் போன அந்நதியை அவர்கள் தூய்மைப்படுத்தி மீட்டதையும் குறித்துப் பேசுகின்ற பத்திகளில், நமது தமிழகத்தில் திருநெல்வேலிக்கும் பாளையங்கோட்டைக்கும் இடையே ஓடுகின்ற தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட, "சுலோச்சன முதலியார் பாலம்" நினைவிற்கு வருகிறது. இரண்டு ஊர்களின் இடையே ஓடும் ஆற்றினைக் கடக்க உதவும் இந்த இணைப்புப் பாலமானது, லண்டன் தேம்ஸ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வடிவமைப்பையும் அதன் அடிப்புறம் அமைந்திருக்கும் தூண்களானது ரோமானிய அரண்மனையில் உள்ளதைப் போன்ற பிரம்மாண்டமான அளவிலும் கட்டப்பட்டிருக்கிறது.

அன்றைய காலத்தில் அரைக் கோடி ரூபாய் தேவைப்பட்ட இந்த பாலத்திற்கு சுலோச்சனா முதலியார் எனும் தனிமனிதர் தனது குடும்பச் சொத்தை மக்களின் நலனுக்காக தானமாக அளித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. செல்வத்தில் சிறந்தும் எல்லையற்ற அன்பும் கொண்டு மக்களுக்குப் பயன்பட வாழ்ந்த தமிழக நெஞ்சமானது சுயநலவாதிகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்ததை இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் பயன்பாட்டில் இருக்கும் இந்தப் பாலம் இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அன்று தெளிந்த நீராக இருந்து படகுப் பயணத்திற்கும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்பட்ட திருநெல்வேலியின் தாமிரபரணி ஆறு, சென்னை கூவம் ஆறு போன்றவை, தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படுகின்ற கழிவுகளை பொறுப்பற்ற உணர்வில் பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றுவதால் சாக்கடைகளாகிப் போய்விட்டன. லண்டன் தேம்ஸ் நதியை சுத்தப்படுத்துவதற்கு அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு தூய்மை செய்யவேண்டிய நிலையில் இன்று இந்நதிகள் காத்திருக்கின்றன. நிறைவேறும் நாட்களை எதிர்நோக்கினால் இன்றைய நிலையில் கேள்விக் குறிகளே மிஞ்சுகின்றன.

பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மருத்துவர் கு. சிவராமன் அங்குள்ள இயற்கையான மலைகளையும் ஆறுகளையும் குறித்து கவித்துவமாக கட்டுரைகளைப் படைத்து, புதியதாக தான் கண்டிருந்த பறவைகளையும் தாவரங்களையும் பூக்களையும் பதியவைத்ததோடு, புகழ்பெற்ற கட்டடங்களையும் பாலங்களையும் கண்டுகளித்து, அவற்றிற்குச் சற்றும் குறைவில்லாத நமது உள்ளூர் வளங்களை ஒப்பிட்டும், அவரது அனுபவமாக அயலக உணவுத் திருவிழாக்களில் அறிந்து கொண்டவராக மனித குலத்திற்கு பெரும்பாலும் பயன்படுகின்ற உணவுப் பொருள்களைக் கண்டறிந்தும், உலக நாடுகளில் சித்த மருத்துவத்தை மேலும் பரவலாக்க வழியை யோசித்தவராகவும், உலக மக்களின் அன்பினையும் தமிழ் நெஞ்சங்களின் நெகிழ்வினையும் சுமந்தவராக 300 பேர் அமரக்கூடிய விமானத்தின் இருக்கைகளில் சுமார் 80 பேர் மட்டுமே அமர்ந்திருந்து ஊர் திரும்பி தரை இறங்கியபோது, வாழும்பொழுதே வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு உலக நாடுகளைக் கண்டு இன்புற்று மனம் விரிவடைந்து மற்றவரும் பலன் பெறும்படி இன்னும் பலரும் பயணங்களை மேற்கொள்ளலாமே என்கிற எழுச்சியினை ஏற்படுத்தும் படி, நூலில் அமைந்திருக்கும் அத்தனை கட்டுரைகளும் வாசிப்பவர்களை ஊக்குவிக்கின்றன. மனிதன் குகைகளில் மட்டுமே வாழ்ந்திருக்கவேண்டிய உருண்டையான உலகத்தில், பயணங்களே ஒரு படி மேல்சென்று ஒவ்வொரு படியாக மனித குலத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றன.

ஆரோக்கிய வாழ்க்கையினை அயலக மக்கள் பெறுவதற்கு மருத்துவர் சிவராமன் மேற்கொள்ளும் பயணமும் சித்த மருத்துவத்தை அடுத்த கட்டத்தினை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. நோக்கங்கள் நிறைவேற வெகுநாட்கள் எடுத்துக்கொண்டாலும் உறுதியாக நிறைவேறிவிடும் என்பதையும் நம்புகிறோம். பயணங்களே புதிய எண்ணங்களை எழுப்புகின்றன. செயல்களே அவற்றை நிஜமாக்குகின்றன. இவையே மனித வாழ்வை விசாலமாக்குகின்றன. இவையாவற்றிற்கும் முதன்மையான பயணத்தை பதிய வைத்த மற்றுமொரு புத்தகம் அங்கொரு நிலம் அதிலொரு வானம். யாவும் வசப்படட்டும். நன்றி.