விவேக் என்னும் அபூர்வ நட்சத்திரத்தைத் தொலைத்துவிட்டுத் தேம்புகிறது திரையுலகம். கலைத் தேவதையின் அழகான கைவீணை ஒன்று காணாமல் போய்விட்டது. எஸ்.பி.பி.க்குப் பிறகு, ஒரு பேரிழப்பை எதிர் பாராமல் சந்தித்துக் கலங்கி நிற்கிறார்கள் திரையுலகி னர்.
ஆம்! மக்கள் கலைஞர்- சின்னக் கலைவாணர்- நகைச் சுவை நாயகர் விவேக், காலவெளியில் கரைந்து போய் விட்டார். அவரது திடீர் மரணம், பெரும் துயர கனத்தை எல்லோரின் இதயத்தி லும் ஏற்றிவைத்துவிட்டது. கண்ணீர் மழையில் திரையுலகை நனைய வைத்துவிட்டார் விவேக்.
மரம் நடவேண்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் நட்டு வைத்தவர் விவேக். நம் வாழ்வை எல்லோருக்கும் பயன்படும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என, வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். கொரோனா விழிபுணர்வுக்கான குரலை தொடர்ந்து எழுப்பி வந்த அவர், அதே கொரோனா விழிப்புணர்வுக் காக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு, ”தடுப்பூசி குறித்து பயப்படாதீர்கள்.. எல்லோரும் போட்டுக்கொள்ளுங்கள்...” என்று வேண்டுகோள் வைத்துவிட்டு, மறுநாளே மரணத்தைத் தழுவி விட்டார். அவரது இழப்பு, எல்லோரையும் கதிகலங்க வைத்திருக்கிறது.
*
திரைப்படத்துறையில் ஒரு நகைச்சுவை நடிகருக்கான இடம் எது? காமெடியன் என்று மிகவும் இலகுவாக பார்க்கப்படும் ஒரு வருக் கான இடம் எது?
அப்படிச் சிரிக்க வைப்பவர்களை இந்தச் சமுதாயம் எப்படி பார்க்கிறது என்று பார்த்தால் இதுவரை காமெடி நடிகர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இடம் மிகச் சிறியது .படங்களில் தங்களது கோணலான உடல் மொழிகள். அறுவையான நகைச்சுவை துணுக்குகள், இரு பொருள் வசனங்கள், உடற்குறை கிண்டல்கள், ஒருவரை ஒருவர் இழிவு செய்யும் காட்சிகள் போன்றவை மூலம் அவர்கள் ஒரு கிலுகிலுப்பை போல கிச்சு கிச்சு மூட்டும் ஒரு கேலிக்குரிய பிம்பங்களாகவே இருந்து வந்தார்கள்; வருகிறார் கள். இந்த உருவகத்தில் இருந்து தனியே வெளித் தெரியும் ஆளுமைகளாக கலைவாணர் , எம்.ஆர்.ராதா போன்ற சிலரையே கூற முடியும். எம். ஆர் ராதா முழு காமெடியன் கிடையாது. அவர் வில்லத்தனமான குணச்சித்திரமான பாத்திரங்களிலும் கலந்து நடித்தவர். அப்படிப் பார்த்தால் கலைவாணர் ஒருவர்தான் எஞ்சி நிற்கிறார். அவருக்குப் பின் அப்படி மரியாதைக் குரிய ஓர் ஆளுமையாக தெரிபவர்தான் நடிகர் விவேக்.
சினிமா காமெடியன்களுக்குரிய அனைத்து சூத்திரங்களையும் உடைத்து வெளிப் பட்டவர் .இதற்குக் காரணம் இவரது நடிப்பாற்றல் மட்டு மல்ல பல்வேறு சமூக சிந்தனைகளை நகைச் சுவைக் காட்சிகள் மூலம் ஏதாவது சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்புடன் செயல்பட்ட வர் என்பதால் இப் பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
ஒரு தனிமனிதராக பலருக்கும் வழிகாட்டி ,தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவிகள் செய்து, தன்னைச் சுற்றம் போல் சூழ்ந்திருக்கும் சிறு, குறு நடிகர்களின் வாய்ப்புகளுக்கு உதவி இப்படிப் பலருக்கும் பல்வேறு வகையிலும் அவர் ஒரு நிழல் தரும் ஆலமரமாக இருந்திருக் கிறார்.
*
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் மூலம் 1987-ல் 'மனதில் உறுதி வேண்டும்' படத் தில் ஒரு சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமான விவேக் ,அதற்குப் பிறகு பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கடந்து சினிமா தட்பவெப்ப சூழலில் தாக்குப்பிடித்து வளர்ந்து உயர்ந்து தனக் கான பீடத்தை அமைத்துக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்தார் . பிலிம் பேர் விருதுகள் மூன்று ,தமிழ்நாடு அரசு விருதுகள் ஐந்து உள்பட ஏராளமான விருது களையும் இந்திய அரசின் பத்மஸ்ரீ பெருமை யையும் பெற்றவர்.
விவேக் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளில் சினிமாவின் அனைத்து வணிகச்சூத்திரங்களை யும் தாண்டி சமூகப் பொறுப்புடன் சமுதாயத் துக்கு ஏதோ சொல்லவேண்டும் என்று குறிப்பிட் டதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலவற்றை யோசித்தார்கள்; சிலவற்றை சீர் தூக்கிப் பார்த்தார்கள். அதனால் அவர் தனிப் பட்டுத் தெரிந்தார். உயர்ந்தார்.
விவேக் படித்தவர் ,சிந்தனையாளர் -எனவே அவருக்கான இடத்தை யாருமே நிரப்பமுடியாது. எந்த காமெடி நடிகரை அழைத்து இந்திய ஜனாதிபதி பேசுவார்?ஆனால் அப்துல்கலாம் இவரை அழைத்துப் பேசினார். தனது கனவுத் திட்டமான ஒரு கோடி மரங்கள் நடும் பொறுப்பை விவேக்கிடம் ஒப்படைத்துத் தூண்டினார் .
எந்த காமெடி நடிகரை கல்லூரிக்கும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைக்கிறார்கள்?
விவேக்கை மட்டும் விரும்பி அழைத்தார்கள்.
எந்தநகைச்சுவை நடிகர் முதலமைச்சர் உள்பட பெரிய பெரிய படித்த ஆன்றோர்களும் சான்றோர்களும் உள்ள சபையில் தனது பேச்சால் முத்திரை பதித்து அவர்களைக் கவர்ந்து ரசிக்க வைக்க முடியும் ?
விவேக்கால் மட்டுமே முடியும்.
எல்லா நடிகர்களும் நடிக்கிறார்கள்; சம்பளம் வாங்கிக் கொண்டு தான் நடிக்கிறார் கள். ஆனால் சிலரை மட்டுமே மக்கள் நாயகனாக ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக கதாநாயக நடிகர்களுக்கான மரியாதையும் மதிப்பும் வேறு. ஏனென்றால் அவர்கள்தான் படத்தை தூக்கி நிறுத்துவது. அப்படி கதை காட்சிகளில் அவர்கள் உயர்த்தப்பட்டு திரைப் படம் எடுக்கப் படுகின்றன. ஆனால் ஒரு காமெடி யன் மக்கள் மனதில் உயர்ந்த நாயக இடம் பெற்றிருப்பது என்பது சுலபமான தல்ல.அது விவேக்கிற்கு கிடைத்திருக்கிறது.
சில நூறு படங்களில் நடித்தாலும் விவேக் கிற்கான இடமும் சமூகத்தில் அவருக்குத் தருகிற மரியாதையும் தனியானது.அதனால்தான் பிரதமர் முதல் முதல்வர் வரை அவர் மறைவுக்கு இரங்கு கிறார்கள். பேதமில்லாமல் அனைத்து கட்சித் தலைவர்களும் இரங்கல் செய்தி விடுத்துள்ளார் கள். காரணம் அவர் சமூகத்திற்காகச் செய்தி ருக்கிறார். தனது தொழிலைச் செய்து கொண்டே இந்த சமூகப் பங்களிப்பையும் செய்ததால் அவருக்கு இந்த பெயர் கிடைத்திருக்கிறது .
படங்களில் இன, மத, ஜாதி பேதம் , மூட நம்பிக்கை , லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம் போன்றவற்றை எதிர்த்துப் பேசுவார். மக்களின் அனைத்து ஒழுங்கீனங்களையும் கண்டித்து அவர் காட்சிகள் மூலம் நடித்து சிந்திக்க வைத்தார். சிரித்துக்கொண்டே நமது குறைகளை ஏற்றுக் கொள்ள வைத்தார். இவர் படங்களில் செய்த சீர் திருத்தங்கள் என்று ஒரு தனி நூலை வெளியிடும் அளவிற்கு அவரது படங்களில் ஏதாவது சிந்தனை களை ஆங்காங்கே தூவிக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல கலாம் அவரிடம் கேட்டுக் கொண்டபடி மரம் வளர்க்கும் இயக்கத்தை முன்னெடுத்து நடத்தினார். ஒரு கோடி மரம் நடுவது என்கிற இலக்கோடு தொடங்கப்பட்ட அந்த இயக்கம் 33 லட்சம் மரங்களை நட்டு இருக்கிறது. இதற்கு பல்வேறு தன்னார்வலர்களை அவர் ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தினார். அவரது இறப்பிற்கு பின் தன்னியல்பாக இளைஞர் கள் மரங்கள் நட்டு அவரது நீட்சியாக தொடரும் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் செய்திகள் மூலம் பார்த்து அவரது தாக்கத்தை உணர முடியும்.
கொரோனா காலத்தில் தமிழக அரசுக்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தடுப்பூசி போட்டுக் கொண்டு காணொலிக் காட்சிகளில் தோன்றினார். அதற்குப் பிறகு மக்களிடம் நம்பிக்கை எதிர்ப்பு ஏற்பட்டு ஆயிரக் கணக்கான பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டார் கள். இது அவரது செல்வாக்கும் சொல்வாக்கும் சாதித்த மரியாதை எனலாம். அதேநேரம் தடுப்பூசிக்குப் பின் அவர் மரணம் அடைந்ததால் பல்லாயிரம் மக்களுக்கு ஒரு தயக்கம் ஏற்பட்டது இதுவும் விவேக்கின் தாக்கம்தான்.
விவேக் இறுதி ஊர்வலத்திலும் திரளான கூட்டம். அவருக்கான இறுதி மரியாதையை மக்கள் ஒரு பக்கம் செலுத்திய நிலையில் தமிழக அரசும் தந்த அரசுமரியாதை விவேக்கிற்கு விஸ்வரூப பெருமை சேர்த்தது.இந்தக் கொரோனா நோய்ப் பரவல் காலத்திலும் பதற்றமான சூழ்நிலையிலும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வந்து குவிந்த பிரமுகர்கள் சாமான்ய மக்களின் கூட்டம் பார்ப் பவர் அனைவரையும் வியக்கவைத்தது. எங்கிருந்தோ சைக்கிளில் வந்து அவர் முகத்தைப் பார்த்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்கள். அவருடன் பேசியபோது "ஏதோ என்னுடைய குடும்பத்தில் ஒருவர் சகோதரர் இறந்தது போல் உணர்கிறேன்' என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
*
இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது நூற்றுக் கணக்கானவர்கள் அவல ஓலத்துடன் கதறி அழுததை இந்த நாடு பார்த்துக்கொண்டி ருந்தது. எந்த அரசியல் தலைவருக்கும் எந்த பெரிய சித்தாந்தவாதிகளுக்கும் எந்த அதிகார ஆட்சித் தலைவருக்கும் கிடைத்ததையும்விட விவேக்கிற் காக வெகுஜன மக்களிடம் வெளிப் பட்ட துக்கம் அடர்த்தியானது; அர்த்தமுள்ளது.எந்தவித நிபந் தனைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பால் உணர்வுபூர்வமான துக்க மாக அது அவர்களிடம் வெளிப் பட்டது.
அவரது திடீர் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து பலராலும் மீள முடிவதில்லை .இருந்தபோதிலும் மீள்வதற்கும் விவேக் தான் வழி காட்டுகிறார். இப்போதும்கூட நிலையாமைத் தத்துவத்தைக் கூறிய அவரது 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் ' வசனம் நினைவில் வரவே செய்கிறது.
துக்கம் கவிகிற போதும் விரக்தி விரிகிற போதும் மீள்வதற் காக அவர் கூறிய வசனம்' டோண்ட் ஒர்ரி பி ஹாப்பி' வசனமும் இப்போதும் நம் காதுகளில் ஒலிக்கவே செய்கிறது.
விவேக்கின் வாழ்வும் வாக்கும் கலைப்பணியும் பொதுப்பணியும் மரணமும் சொல்வது என்ன?
"தமிழுக்குத் தொண்டு செய் வோன் சாவதில்லை' என்று பாரதி சொன்னான்.அதுபோல் இந்த சமுதாயத்துக்குத் தொண்டு செய் வோனும் சாவதில்லை.
விவேக் இறக்கவில்லை அவர் அன்றாடம் நாம் காணும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் காட்சிகள் மூலம் நம்மைச் சிரிக்க வைக்கிறார் .அவர் மூலம் அவரது தூண்டுதல் மூலம் நடப்பட்டு வளர்ந்து நிற்கும் மரங்கள் பசுமைவழியும் இலைகள் மூலம் விரிந்து நிற்கும் கிளைகள் மூலம் அவர் சிரித்துக் கொண்டி ருக்கிறார்.
அவர் நடித்த காட்சிகள் அவரது சிந்தனைகளைப் பேசிக் கொண்டி ருப்பதைப் போலவே அவர் மூலம் வளர்ந்த செடிகளும் மரங்களும் தன் பசுமையில் அவரது புன்ன கையே சுமந்து கொண்டிருக்கும்.
இறுதியாக ஒன்று-,
விவேக்கின் நடிப்பை திரை யுலகம் எடுத்துக்கொண்டது. அவரது சிந்தனைகளை நடித்த அந்த காட்சிகள் உள்ளிழுத்துக் கொண்டன. அவரது உயிரை நோய்மை எடுத்துக் கொண்டது. அவரது புகழை இந்த உலகம் எடுத்துக்கொண்டது.