அருணாவிற்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என்ற விஷயத்தைப் பலரிடமிருந்தும் கேட்க ஆரம்பித்த பிறகுதான் நான் அந்தத் தகவலை நம்புவதற்குத் தயாரானேன்.
டில்லியிலிருந்து வந்த மறுநாளே நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். கதவைத் திறந்தது அவளுடைய அழகான நேப்பாளி பணிப்பெண். அவள் வெற்றிலைக் கறைபடிந்த பற்களைக் காட்டியவாறு சிரித்தாள்.
"உன் எஜமானி எங்கே?'' நான் கேட்டேன்.
"எஜமானி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்காங்க.''
அவள் கூறினாள்:
"ஆரம்பமாகி அஞ்சாறு
மாதங்களாச்சு..''
அவள் சுட்டிக்காட்டிய அறைக்குச் சென்றபோது, ஒரு பழைய சிவப்புநிற புடவையை அணிந்து சுவரைப் பார்த்தவாறு கட்டி-ன்மீது அமர்ந்திருந்த அருணாவை நான் பார்த்தேன்.
"என்ன ஆச்சு அருண்?'' நான் கேட்டேன்: "நீ எப்படி இந்த அளவிற்கு மெலிஞ்சிட்டே?'' அவள் எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவளுடைய தலைமுடிக்கு வியர்வையின் வாசனை இருந்தது. அருணா என் கழுத்தில் கைகளைச் சுற்றியவாறு என் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.
"இவ்வளவு காலமும் நீ ஏன் என்னைப் பார்க்க வரல?''
அவள் கேட்டாள்: "உனக்கும் என்னைப் பார்க்க வேண்டாம்னு தோணிடுச்சா?''
"உன்னைப் பார்க்க வேண்டாம்னு யாருக்குத் தோணுச்சு?''
"அவருக்கு..''
"இதை என்னால நம்பமுடியல...
அருணா. நீ தவறாக நினைச்சிருக்கணும். உன்னை வெறுப்பதற்கு காரணம் எதுவுமே இல்லையே?''
அருணா படுக்கையில் சென்று படுத்தாள்.
"அதையெல்லாம் சொன்னால், நீ நம்ப மாட்டாய், விமலா''
அவள் கூறினாள்: "நான் கூறுவதை சமீபகாலமாக யாரும் நம்புவதே இல்லை. எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சாம்.
நான் குழந்தைக்குத் தொந்தரவு தர்றேனாம்.
கத்தியைப் பார்த்தால், அதை எடுத்து நான் ஆட்களை பயமுறுத்து றேனாம். இவற்றையெல்லாம் நீ கேட்டிருப்பியே?''
"இவற்றையெல்லாம் யார் கூறி பரப்புவது?'' நான் கேட்டேன்.
"அவர்... பிறகு... எல்லாரும். இப்போ குழந்தைகூட என் பக்கத்துல வர்றது இல்ல. அவளை அவரோட அம்மா கொண்டு போயிருக்காங்க. கடந்த மாதத்தில் ஒருநாள் நான் அழுது பிரச்சினை உண்டாக்கியப்போ, அவர் அவளைக் கொண்டுவந்தார். ஆனால், அவள் வாசலில் நின்றுகொண்டு கூறுகிறாள்...
"மம்மிக்கு பைத்தியம் பிடிச்சிருச்'சுன்னு.''
"இவையெல்லாம் எப்போ ஆரம்பமாயின?'' நான் கேட்டேன்.
"எனக்கு ஞாபகத்தில் இல்லை.'' அருணா கூறினாள்: "நேரத்தைப் பற்றி எனக்கு எந்தவொரு பிடிப்பும் இல்லாமல் போயிருக்கிறது. ஒருநாள் அவரை நான் கொல்வதற்கு முயற்சித்தேனாம்.. கத்தியை எடுத்துக்கொண்டு பின்னால் ஓடினேனாம்... சொல்லு விமலா.
இவற்றையெல்லாம் நான் செய்வேனா?'' நான் தலையை ஆட்ட மட்டும் செய்தேன்.
"பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கும் என்னைப் பார்த்து பயம்..
அவங்க வேலைக்காரியிடம் விசாரிச்சிருக்காங்க' அவர் என்னை ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மையத்திற்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை' என்று.''
"இதை யார் சொன்னாங்க?'' நான் கேட்டேன்.
"அவள்தான்... ஃபுல்மதி..
உனக்கு அவளைத் தெரியுமே! இப்போ இந்த வீட்டின் அரசி அவள்தான். அவருடைய படுக்கையில் படுக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.''
"இல்ல, அருண்... இது எதுவும் உண்மையல்ல.
நீ வெறுமனே தவறாக நினைத்துக் கொண்டிருக்கி றாய்.'' நான் கூறினேன்.
அருணா திடீரென கவிழ்ந்து படுத்தாள்.
"என்னை யாருமே நம்பல...''
அவள் முணுமுணுத்தாள்.
"நீ என்ன காரணத்திற்காக இங்கிருந்து போகாமல் இருக்கே?'' நான் கேட்டேன்: "நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால், இந்த அவமானம் அனைத்தையும் சகித்துக்கொண்டு நீ ஏன் இங்கு இருக்கிறாய்?
நீ உன் தந்தையைத் தேடிப் போகலாமே?''
"அது முடியாது, விமலா.'' அருணா கூறினாள்: "இரவுப் பொழுதின் இடையே நான் வெளிச்சத்தை உண்டாக்கி பார்க்கும்போது, அவர் சாய்ந்து படுத்து தூங்கிக்கொண்டிருப்பது தெரியும். இரண்டு கால்களையும் மடித்து வைத்துக்கொண்டு... ஒரு கையின் பாதத்தின்மீது முகத்தை வைத்துக்கொண்டு... ஒரு சிறுவனைப்போல...
அவர் எந்த அளவிற்கு அழகானவர், விமல்! அப்படி படுத்திருப்பதைப் பார்க்கும்போது, அனைத்து கவலைகளையும் மறந்துவிடுவேன். இல்லை... எந்தச் சமயத்திலும் அவரைவிட்டு நான் போகமாட்டேன். உனக்கு புரியுதா, விமலா?''