ர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

- என்பது வள்ளுவர் அருளிய குறள்.

இதன் பொருள்... "நடந்த குற்றம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து, எந்தப் பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாமல் வழங்கப்படுவதே நீதி'' என்பதாகும்.

Advertisment

அதன்படி வாச்சாத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், தற்போது மாண்பமை உயர் நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் அவர்களால் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

இந்த நீதி நிலைநாட்டப்பட நக்கீரன் எடுத்த முயற்சிகளும், அது சிந்திய வியர்வைத் துளிகளும் வீண்போகவில்லை.

இதன்மூலம் மலைவாழ் மக்களின் வரலாற்றில் தீர்ப்பு வெளியான செப்டம்பர் 29 ஆம் நாள், விடியல் நாளாக மாறி இருக்கிறது என்பதில், நக்கீரன் தலைநிமிர்வோடு பெருமிதம் கொள்கிறது.

Advertisment

vv

அது என்ன வாச்சாத்தி விவகாரம்?

தருமபுரி மாவட்ட வனப்பகுதியில் உள்ள சித்தேரி மலையில் சந்தன மரங்கள் அதிகம் விளைந்திருந்தன, 91- வாக்கில், அந்த மரங்கள் கொள்ளைபோக ஆரம்பித்தன. குறிப்பாக, அப்போதைய ஆளுங்கட்சிப் பிரமுகர்களான சில அ.தி.மு.க.வினரும், வனத்துறை அதிகாரிகளும் கைகோத்துக் கொண்டு அவற்றை சரமாரியாக வெட்டி விற்கத் தொடங்கினர். இவர்களுக்கு காவல்துறையும் வருவாய்த்துறையும் உடந்தையாக இருந்தது. மரத்தை வெட்டுவதற்கு, வாச்சாத்தி கிராமத்து மலைவாழ் மக்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில், "திருட்டு மரம் வெட்ட நாங்கள் வரமாட்டோம்' என்று வாச்சாத்தி மக்கள் மறுத்ததால், அவர்கள் மீது அந்த அதிகாரிகளுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துதான் பதறவைக்கும் அந்த "அடாவடி அட்டாக்'' 92-ஆம் ஆண்டு, ஜூன் 20-ஆம் தேதி, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.

அந்த மலைவாழ் மக்கள், காட்டிலுள்ள சந்தன மரங்களை வெட்டி விற்றுவருவதாகவும், அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் சந்தன மரங்களை பிடிக்கச்செல்வதாகவும் சொல்லிக் கொண்டு, அந்தக் கும்பல் வாச்சாத்தி கிராமத்திற்குள் நுழைந்தது. அதில் வனத் துறையினரும், காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் சேர்ந்து 600 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வெறிபிடித்த ஓநாய்கள் போல் அங்கே படையெடுத்துச் சென்றனர்.

போன வேகத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாகத் தாக்கினர். வீடுகளைச் சூறையாடினர். பொருட்களைத் திருடினர். பெண்களை விருப்பம்போல் ஆபாசமாகக் கையாண்டனர். அந்த கிராமமே உயிர்பயத்தில் அலறியது.

அந்த களேபரத்திற்கிடையே 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேரைக் கைது செய்து ஊர் மரத்தடிக்குக் கொண்டுவந்த அந்தக் கும்பல், அவர்களில் 13 வயது சிறுமி உட்பட 18 பெண்களைத் தேர்ந்தெடுத்து தனியே அழைத்துச்சென்றது. அவர்களில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இருந்தார். அந்த வெறி நாய்கள், அத்தனை பேர் உடையையும் உருவி, அவர்கள் கதறித் துடித்த நிலையிலும் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றின. சட்டத்தை காக்கவேண்டியவர்களே, கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத கொடூரங்களை எல்லாம் நிகழ்த்தினர்.

இந்தத் தகவல் கிடைத்ததும், நக்கீரன் நிருபர் தம்பி ஜெயபிரகாஷ் வாச்சாத்திக்கு விரைந்தார். அப்போது வாச்சாத்தி கிராமமே சூறையாடப்பட்ட நிலையில், நடந்த கொடுமைகளுக்கு சாட்சியாக இருந்தது. அங்கு நடந்த அத்தனை கொடுமைகளையும், பாதிக்கப்பட்டவர்களின் கதறல் வாக்குமூலங்களோடு, நம் நக்கீரன்தான் முதன்முதலாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது.

இந்தவிவகாரம் வெளியே வந்தபோது, அன்று வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன், தங்கள் ஆட்சிக்கு கெட்டபெயர் வந்துவிடுமே என்ற பதட்டத்தோடு ஸ்பாட்டுக்கு ஓடினார். அங்கே எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று எல்லாவற்றையும் மறைக்கும் முயற்சியில் இறங்கினார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, அப்போதிருந்த பெண் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று, வழக்கையே தள்ளுபடி செய்துவிட்டார்.

vv

இருந்தும் விடாமல், இந்த விவகாரத்தை மலைவாழ் மக்கள் இயக்கத்தினரும் முற்போக்குச்சிந்தனையாளர்களும் சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர். இதன் பிறகே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகுதான் முறையான விசாரணைகள்மேற்கொள்ளப்பட்டன. நக்கீரனின் வாக்குமூல ஆவணங்கள் வாச்சாத்தி வழக்கிற்கே ஆதார சுருதியாக அமைந்தது.

இதனடிப்படையில் வனத்துறையை சேர்ந்த 155 பேரும், காவல் துறையை சேர்ந்த 108 பேரும் வருவாய்த்துறையினர் 6 பேருமாக மொத்தம் 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த வழக்கு 2008-ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுருபரன் தீர விசாரித்துவிட்டு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில், தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என கடந்த 2011ஆம் ஆண்டு அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பு வந்தபோது, "வாச்சாத்தி நிகழ்வுகளை உரியவகையில் நக்கீரன் அழுத்தமாகப் பதிவுசெய்ததால்தான், இப்படி ஒரு நம்பிக்கையூட்டும் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.” என்று ’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்’ தலைவர் சண்முகமும், பாதிக்கப்பட்ட மக்களும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் சொன்னார்கள்.

vv

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். நீதியரசர் வேல்முருகனோ, சம்பவப் பகுதிகளுக்கே சென்று விசாரித்தார். அங்கே நிலைமையின் தகிப்பை முழுதாக அறிந்தார். பாதிக்கப்பட்ட பெண்களின் வலியை அப்பட்டமாகத் தெரிந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர், தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்திருக்கிறார். மேலும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அலுவலகப் பணிக்காகத்தான் வாச்சாத்திக்குச் சென்றோம் என்று சொல்லிக்கொண்டிருந்த குற்றவாளிகளைப் பார்த்து நீதியரசர் வேல்முருகன் ‘கிராமத்துப் பெண்களை ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று கற்பழிப்பது ஒன்றும் அலுவலகப்பணி அல்ல. என்று செவிட்டில் அறைந்தமாதிரி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

நக்கீரனின் உறுதுணையோடு நடந்த சட்டப் போராட்டத்தின் மூலம், வாச்சாத்தி விவகாரத்தில் இப்போது நீதி நிலைநாட்டப் பட்டிருக்கிறது.

நம்பிக்கையுடன்,

நக்கீரன்கோபால்