திரைப்பாட்டு நாயகராக வலம் வந்த பிறைசூடன், நம்மிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார். அவரது பாட்டுப்பயணம், மறக்க முடியாத இசைத்தட்டுக் கீறலாய், நம் மனதில் இசைபாடிக் கொண்டே இருக்கிறது. இருக்கும்.
1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன். பாட்டெழுத மொழி ஆளுமை தேவை என்பதை உணர்ந்த கவிஞர், தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அவர் சோதிடக் கலையையும் கற்று வைத்திருந்தார். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்னும் பாடலை எழுதி தமிழ்த் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக பாதம் பதித்தார்.
தொடர்ந்து 80களில் இசை ராஜாங்கம் செய்து கொண்டிருந்த இசைஞானி இளையராஜா இசையில், ’என்னைப் பெத்த ராசா’ படத்தில் ’சொந்தம் ஒன்றை..’ என்ற பாடலை எழுதினார். ’ராஜாதி ராஜா’ படத்தில் புகழ்பெற்ற காதல் பாடலான ‘மீனம்மா மீனம்மா’ பிறைசூடன் எழுதியதுதான். இந்த வெற்றிப்பாடல் எழுதியவுடன் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கவிஞரை அழைத்து சன்மானம் வழங்கியிருக்கிறார். அதை வாங்க மறுத்தது அவருடைய சுயமரியாதை. இறுதி வரை சுயமரியாதையோடு வாழ்ந்தவர் பிறைசூடன்.
சென்னையில் சுற்றிய காலங்களில் தன் சட்டைப் பையில் 200 ரூபாயை வைத்துக் கொண்டிருப்பாராம். தான் இறந்து விட்டால் ஈமச்சடங்கு செய்ய அது பயன் படட்டும் என்பாராம். இதற்கடுத்த ஆண்டில் ‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்னும் திருமண வாழ்த்துப் பாடல் இன்றுவரை இடம் பிடித்திருக்கிறது திருமண வரவேற்பு கச்சேரிகளில்.
“புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டிப்போடு”
என்ற வரிகளில் இருமனம் எப்படி இணைந்திருக்க வேண்டும் என இனம் கண்டு சொல்லியிருப்பார்.
அடுத்து, இயக்குநர் வசந்த் அவர்களின் அறிமுகப்படமான ‘கேளடி கண்மணி’யில் பிறைசூடன் எழுதிய ‘தென்றல் தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்னும் பாடல் அதன் இளமைத் துள்ளலான இசையமைப்புக்காகவும் பாடல்வரிகளுக்காகவும் மக்கள் விரும்பினார் கள்.
1991 இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்ற பிறைசூடன்’, மிகப் பெரும் வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் படைத்து பட்டித்தொட்டி எங்கும் சென்று சேர்ந்தார்.
அந்த ஆண்டிலேயே ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ இசையுடன் சேர்ந்து பிறைசூடன் அவர்களின் வரிகளும் காதல் தோல்வியின் வலியை உணர வைத்தது. ஈரமான ரோஜாவே படத்தில் எழுதிய ‘கலகலக்கும் மணியோசை’ என்ற பாடலும் கோபுர வாசலிலே படத்தில் ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ என்ற பாடலும் பிறைசூடன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்.
’உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்’ படத்தில் இடம் பெற்ற ‘என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி’ அவர் எழுதிய அடுத்த புகழ்பெற்ற வெற்றிப் பாடல். ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.
அந்தப் படத்தின் நாயகன் தன்னைத் தூக்கி வளர்த்த தந்தைவழிப் பாட்டியின் கோபத்தை போக்கும் வகையில் பாடும் ‘நடந்தால் இரண்டடி’ என்னும் பாடல் கதைச் சூழலுக்கேற்ற வரிகளைக் கொண்டு ரசிகர்களை ஈர்த்தது.
1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்னும் நாயக அறிமுகப் பாடலை கதை நாயகனான நடிகர் கார்த்திக் பாட அந்தப் பாடல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘சந்திரனே சூரியனே’ என்னும் பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.அதைத் தொடர்ந்து இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான மைடியர் மார்த்தாண்டன் படத்தில் இடம்பெற்ற பாடலான 'அழகு நிலவு சிரிக்க மறந்ததேன்' பாடலை இசையை உறுத்தாத இசையோடு இயைந்து கைக்கோத்துச் செல்லும் வார்த்தைகளை எழுதி யிருப்பார்.எனக்குத் தெரிந்த வரையில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு இசைக்குப் பாட்டெழுதும் லாவகம் இயல்பாகவே வந்துவிடும் போலிருக்கிறது. அந்த மண்ணின் தன்மை அப்படி என நினைக்கிறேன்.
தேனிசைத் தென்றல் தேவா இசையில் ‘தாயகம்’ படத்தில் எழுதிய பாடல்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை இரண்டாம் முறை பெற்றார்.
தேவா இசையமைத்த ‘குரோதம் 2’, சத்ரிய தர்மம்’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களிலும் அனைத்துப் பாடல்கள் மற்றும் மட்டுமல்லாமல் உரையாடல்களும் எழுதினார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார். ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ என்னும் வேகநடை கொண்ட காதல் பாடலை எழுதினார்.
தமிழ்த் திரையிசை உலகின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்பயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய மூவரின் இசையிலும் பாடல்களை எழுதிய பெருமை அவர் ஒருவருக்கு மட்டுமே உண்டு .
மூத்த இசையமைப்பாளர் கள், இளம் இசையமைப்பாளர் களுடனும் தொடர்ந்து பணியாற்றிவந்தார் பிறைசூடன். 2010இல் ‘நீயும் நானும்’ படத்துக்காக ஸ்ரீராம் விஜய் இசையில் எழுதிய பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை மூன்றாம் முறையாக பெற்றார்.
2011இல் தெலுங்கு-தமிழ் இருமொழிப் படமான ‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தின் பாடல்களையும் வசனங்களையும் எழுதினார். திரைப் பாடல்களைத் தாண்டி நிறைய பக்திப் பாடல்களை எழுதியுள்ளார் பிறைசூடன்.
அவருடைய கவிதைகள் ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிப் புலமையும் திரையிசைப் பாடல் வரிகளின் நுட்பங் களை விளக்கும் திறமையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலம் வெளிப்பட்டு பிறைசூடன் மீதான தமிழ் மக்களின் மதிப்பை அதிகரித்துள்ளன.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் கவிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியுள்ளார் கவிஞர் பிறைசூடன்.. . தான் எழுதிய முதல் பாடல் கேட்க சொந்தமாக ஒரு வானொலிப் பெட்டி இல்லாதவர் .வானம் நிரம்ப பாடல்களைத் தந்துவிட்டு இன்று சவப்பெட்டிக்குள் அடக்கமானார். அவர் காற்றில் நேற்றில் இன்றில் என்றும் வாழ்வார்.